23. கல்லாதார் அவையடங்காமை

கற்பன ஊழற்றார் கல்விக் கழகத்தாங்
கொற்கமின் றூத்தைவாய் அங்காத்தல் - மற்றுத்தம்
வல்லுரு அஞ்சன்மின் என்பவே மாபறவை
புல்லுரு அஞ்சுவ போல்

(பொ-ள்.) கற்பன ஊழ் அற்றார் - கற்கப்படுவனவற்றிற்கான நல்வினை இல்லாதவர்கள், கல்விக் கழகத்து -கல்வி பயிலும் இடத்தில் (அஃதாவது புலவர்களின் அவையில்): ஒற்கம் இன்று - அடக்கம்இல்லாமல், ஊத்தை வாய் அங்காத்தல் - அழுக்குப்பிடித்த தம் வாயைத் திறந்து பேசுதல் முதலியன,மா பறவை புல் உரு அஞ்சுவபோல் - விலங்குகளும் பறவைகளும் புல்லினாற் செய்யப்பட்ட பொய்உருவத்துக்கு அஞ்சுவதுபோல, தம் வல் உரு அஞ்சன்மின் - தம்முடைய வலிமையான உருவத்துக்குஅஞ்சாதிருங்கள், என்பவே - என்று சொல்வனவேயாம்.

(வி-ம்.) கற்பன - கற்கப்படுவன. அவை, நூற்கருத்துக்கள். இந்நூலாசிரியர் குமரகுருபர அடிகள் இந் நூன்முழுதும் கல்வியைப் பன்மையாகவே கூறுகின்றார். ‘தாங் கற்ற விற்பார்’ ‘கற்றதெல்லாம்’‘எனைத்துணைய வேனும் இலம்பாட்டார் கல்வி’ ‘வருந்தித் தாங் கற்றன’ ‘நெடும்பகற் கற்றஅவையத்து உதவாதுடைந்து’ ‘எத்துணையவாயினுங் கல்வி’ என்று இச்செய்யுட்கு முன்னும்;‘கல்வி...சேரா’ ‘கற்றன கல்லார் செவிமாட்டி’ என்று பின்னும் வருதல் காண்க. கற்பன ஊழ்:நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. ஒற்கம்- அடக்கம், ஊத்தை வாய்அங்காத்தல், வல் உரு என்றார், கல்லாதார் பேசுதலின் இழிவு தோற்றுதற்கு. அங்காத்தல்என்பதன் குறிப்புக் கண்டு அதற்குக் கற்றாரொருவர் பேசும் பொழுது அவைக்கண் இடைஇடையே வாய்திறந்து பேசுதல் என்றும் பொருள்கூறுப. மாவும்பறவையும்என்று உம்மைத்தொகை விரிக்க. புல்லுருஎன்பது, கம்பு தினை முதலியன விளைந்து கதிர் முற்றிய கொல்லைகளில் விலங்குகளும் பறவைகளும்‘யாரோ ஒரு காவற்காரன் கையிற் கொம்பு வைத்திருக்கின்றான்’ என்று நினைத்து அஞ்சும்படியாக,அக்கொல்லைக்காரர்கள் புல்லினாற் செய்துவைக்கும் உருவம். விலங்குகளும் பறவைகளும்அவ்வுருவத்தின் உண்மையை அறிந்துகொண்டால், எப்படி அவை அஞ்சாது செல்லுமோ அதுபோலக்கல்லாதவர்கள் தங்கள் வாய் திறந்து பேசுவதனால் தங்கள் பாற் கல்வி நலமில்லை யென்பவைக்காட்டிக் கொள்ளுகின்றார்களாதலின், மற்றவர்களும் இவர்களுக்கு அஞ்சாமல் நடப்பார்கள்என்க. ஆகவே, கல்லாதவர்கள் பேசுவது, தம்மிடத்திற் கல்வியில்லை என்பதைக் காட்டிஎதிரிலிருப்பவர்களை அச்சப்படாதிருங்கள் என்று கூறுவதுபோலிருக்கின்றது என்றார். என்ப என்றுபன்மையாற் கூறின்மையின், அங்காத்தல் முதலியன என்று பல வினைமுதல்கள் வருவிக்கப்பட்டன.முதலியன எனப்பட்டவை, கற்றது போற் காட்டிக் கொள்ளும் உடற்புனைவு முதலியவற்றை. அஞ்சுவ:கடைக்குறை. இது தொழிற்பெயர்.

(க-து.) தெரிந்தவர்கள் முன்பு, தாமும் தெரிந்தவர்கள் போலப் பேசலாகாது. (23)