32. செங்கோன்மை

ஒற்றின் தெரியா சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோள் துணையாத் தெரிதந்தும் - குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடினுங் கேளாமை யன்று

(பொ-ள்.) ஒன்றின் தெரியா -வேவுகாரரால் தெரியப்படாத உண்மைகளை, சிறைப்புறத்து ஒர்தும்என - ஒதுக்கிடங்களிலிருந்துதெரிந்து கொள்வோம் என்று, பொன் தோள் துணையா தெரிதந்தும் - பொன்னாலான வீரவளைஅணிந்த தனது தோளே தனக்குத் துணையாக நினைத்துக்கொண்டு போய் அங்கிருந்து அவற்றைத்தெரிந்து கொண்டும், குற்றம் அறிவரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை - குடிமக்களின்செய்கைகளில் குற்றமாவன இவைதாம் என்று துணிதல் அருமையானதென்று நினைத்து அக்குற்றங்காண்டலுக்கு அஞ்சுவதே நல்ல அரசாட்சி முறையாகும். (அதுவே முறையாமன்றிச்) சென்று முறையிடினுங்கேளாமையன்று - குடிமக்களே போய்த்தங் குறைகளைச் சொல்லிக்கொண்டாலும் அதனைக்கேளாமலிருப்பது முறைமையன்று.

(வி-ம்.) இச்செய்யுள் அரசனாவான்குடிமக்களின் நலங்களை அவர்களிருக்குமிடத்தில் வேவுகாரர்களை அனுப்பிவரச்செய்து, அவர்கள் வாயிலாகத் தெரிந்து கொள்வதுமன்றி,அவர்களாலும் தெரிந்து கொள்ளப்படாத உண்மைகளைத் தன் தோளே துணையாகத் தானே நேரிற்சென்றுஅறிவதும், அங்ஙனம் அறிந்த விடத்தும் அவர்பாலுள்ள குற்றங்களை அறியாதொழிவதுமே நல்லஅரசாட்சி முறையாமன்றி, அவ்வாறு தன் ஒற்றர்களாதல் அல்லது தானாதல் போய் அவர்நலங்களை அறியாதொழிதலும், குடிமக்கள் தாமாகவாவது தன்னிடம் வந்து முறையிட்டுக்குறையிரக்கும்போதுகூட அதனைக் கேளாமலிருப்பதும் முறையன்றாம் என்பதுணர்த்திற்று, ஒற்று என்பதுஇங்கு நட்பினர் பகைவர் அயலவர் ஆகிய மூவகையாரிடத்தும் வேற்றுமையின்றி அவர்க்கு அவர்போலஅவரோடு கலந்து அவ்வவரின் உண்மைச் செய்தியே அறிபவரை உணர்த்தும். தெரியா: வினையாலணையும்பெயர்.  போமிடத்துத் தனக்கு ஏதேனுந் தீங்குவரினும் போரிட்டுக் கண்டு வருவன் என்பதற்குப் ‘பொற்றோள் துணையா’ என்றார்.தெரிதருதலென்பது இங்கு இறந்த காலத்தின் கண், தெரிதந்து என்று வந்தது; தெரிந்து என்பதுபொருள்.

(க-து.) அரசனுக்குக்குடிமக்களிடத்தில் நன்மை காண்டலிலேயே கருத்திருக்க வேண்டும்.   (32)