37. சான்றாண்மை

கண்ணோக்கு அரும்பா நகைமுகமே நாண்மலரா
இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை
பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே
சலியாத கற்ப தரு

(பொ-ள்.) கண்ணோக்குஅரும்பு ஆ-அருள் ஒழுகு கண்ணின் பார்வையை மொட்டாகவும், நகைமுகமே நாள்மலரா - மகிழ்ச்சியான்மலர்ந்த முகமே புதுப்பூவாகவும், வாய்மையின் இன்மொழியே தீம்காயா - மெய்ம்மையானஇன்சொல்லே தித்திப்பான காயாகவும், வண்மை பலம்ஆ - ஈகையே பழமாகவும், கொண்டுள்ள நலம்கனிந்த பண்பு உடையார் அன்றே சலியாத கற்பதரு - நன்மைகள் மிகுந்த பெருந்தன்மையுடையசெல்வர்களல்லரோ சலித்தலில்லாது ஈயும் கற்பக மரமாவர்.

(வி-ம்.) கண்ணோக்கு- அருட்பார்வைக்கே சிறப்பாக வழங்குதலை `என்மேல் கண்ணோக்கம் வை' என்பதிற் காண்க.நாள்மலர் - அன்று மலர்ந்த புதுப்பூ இன்மொழியின் வாய்மையே என்பதை மற்றவற்றோடும் ஒத்துநிற்றற்பொருட்டு முன் பின்னாக மாறுக, இங்கு வாய்மை யென்றது' உள்ளும் புறமும் ஒத்து நிற்றலை.வண்மை என்பதை `சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தல்' என்னும் உத்திபற்றி ஈற்றில்நிறுத்தினார். இச்செய்யுளின் முதன்மையான கருத்து அதுவாதலின், கண்ணோக்கு நகைமுகம் இன்மொழிஎனவரும் ஏனைய மூன்றும் இவ்வண்மையைச் சிறப்பிக்க வந்தனவென்று கொள்க. இங்ஙனம்கருத்திலிருத்திச் செய்யுளியற்று முறையை மாணிக்கவாசகப்பெருமானாரியற்றிய திருச்சிற்றம்பலக்கோவையாரின் முதற் பாட்டினும் அதற்குப் பேராசிரியர் கூறும்  உரையிலுங் கண்டுகொள்க.

(க-து.) விரும்பிப்பார்த்தல்முகமலர்ச்சி முதலிய குணங்களையுடைய செல்வர் கற்பக மரம்போலப் பயன்படுவர்.        (37)