45. அமைச்சரியல்பு

செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி
வெகுளினும் வாய்வெரீஇப் பேரா - கவிழ்மதத்த
கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும்
அம்மாண் பினவே அமைச்சு

(பொ-ள்.) பாகு-பாகன், எத்திறத்தும்-எவ்வகையாலும், கவிழ் மதத்த -பொழியும் மதத்தினையுடைய, கைமா -யானையின், வயத்ததோ - வயத்தினனாவனோ, (அதுபோல்) அமைச்சு - அமைச்சர்கள், எத்திறத்தும்- எவ்வகையாலும், அம்மாண்பினவே - அத்தன்மையரேயாவர், (ஆகையால்) சென்று - (அரசன் தன்நெறி தவறினால் அவனிடத்துப்) போய், செவி சுட - (அவன்) செவிகள் வருந்தும்படி, இடித்து -(அவன் குற்றங்களை எடுத்துக்காட்டி) இடித்துரைத்து, அறிவுமூட்டி - (அவனுக்கு) அறிவுவரச்செய்து,  வெகுளினும் - (அவன் குற்றங்களைஎடுத்துக்காட்டி)   இடித்துரைத்து, வெகுளினும் -(அவன் தம்மைக்) கோபிக்கினும், வாய்வெரீஇ - (அவனுக்கு) அஞ்சி, பேரா - (அவனைவிட்டு)அகலார்.

(வி-ம்.) யானைதன்னியல்பிலிருக்கும்போது அதனைத் தம்வசப்படுத்தி நடத்தும் பாகர், அது மதங்கொண்டு தம்வசம் அடங்காமல் ஓடும்போதும் அதனை விடாது சென்று அதனை அங்குசம் இட்டு இடித்து அதன் மதத்தைஅடக்கி மறுபடியும் அதனைத் தன்னியல்பிற்குக் கொண்டுவருவது போல்,  அரசன் தன்னியல்பில் நின்றபோது அவன் மனம்போல்நடக்கும் அமைச்சர் அவன் வெகுண்டு  தன்னிலைதவறுங்கால் அவன் செவிகளில் நன்மொழிகளை இடித்துரைத்து அவனுக்கு அறிவு புகட்டி  அவனை மறுபடியும் தன்னியல்பிற்குக் கொணர்வர் என்றுஅழகாக உவமித்திருக்கின்றார் ஆசிரியர்.

"அறிகொன் றறியானெனினு முறுதி

உழையிருந்தான் கூறல் கடன்."            (திருக்குறள்)

 

"கதங்கொள்சீற்றத்தை யாற்றுவா னினியன கழறி

பதங்கொள்பாகனு மந்திரி யொத்தனன் பன்னூல்

விதங்களாலவன் மெல்லென மெல்லன விளம்பும்

இதங்கள்கொள்கிலா விறைவனை யொத்ததோர் யானை."

 

     -  (கம்பராமாயணம்)

கவிழ்மதம் - பொழியும் மதம், மூட்டி: பிறவினை  வினையெச்சம், மூட்டு: பிறவினைப் பகுதி, உகரக்கேடு;சந்தி, இ:விகுதி.  பேரா: அமைச்சு என்றஅஃறிணைப் பெயர்க்கேற்ற  பயனிலை, வயத்ததென்பதும்அத்தகையது.

(க-து.) பாகனானவன்யானை மதங்கொண்ட போது அதனை நடத்தி நல்வழிக்குக் கொண்டுவருவது போல், அமைச்சர் அரசன்வெகுண்டபோது அவனை நல்வழிப்படுத்தி யொழுகுவர்.   (45)