48. மன்னர் புறங்கடை காத்தல்

மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம்
எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாள்
காத்தவை எல்லாம் கடைமுறைபோய்க் கைகொடுத்து
வேத்தவையின் மிக்குச் செய்யும்

(பொ-ள்.) யாம்- நாம், மன்னர் புறங்கடை - அரசர் தலைவாயிலை, வறிதே காத்தும்- வீணாகக் காத்துவந்தும்எந்நலம் காண்டும் - யாது பயனடைந்தோம், என்று எள்ளற்க - என்று அக் காவலைக் கைவிடுதலொழிக; பல்நெடுநாள்- பல நாட்கள் காத்தவை யெல்லாம் - (தலை வாயிலைப்பொறுமையுடன்) காத்திருந்தவை யெல்லாம்; கடைமுறை போய் - முடிவிற் சென்று, கைகொடுத்து-உதவியாகி, வேந்து அவையின் - அரசசபையில்,மிக்கு செயும் - மிகுந்த நன்மையைச் செய்யும்.

(வி-ம்.) வறிது:குறிப்பு வினையெச்சம். காண்டும்: தன்மைப் பன்மை இறந்தகால வினைமுற்று,  வேந்து அவை - வேந்தவை: வேத்தவையாயது வலித்தல்விகாரம். அரச சேவை வீண்போகாது. அரண்மனை வாயில் காக்கும்காவலாளனை அரசன் வாயிற்புறத்து வந்து போகும் பல தடவைகளில் ஒரு தடவையாவதுகவனியாமலிருக்கமாட்டான். பல தடவை கவனித்தும் அக்காவலாளிக்கு அன்பு காட்டாதிருக்கலாம்.அவனுக்கு வாயிற்காவலினும் உயர்ந்த தொழில் அளியாதிருக்கலாம். அப்போது அரசன்பால்வெறுப்பும் தன் தொழிலில் அருவருப்புங் கொள்ளலாகாது. ஏனெனில் அரசன் பல தடவையாக அக்காவலாளின் பொறுமை எப்படி என்று வெளிக்குக் காட்டாமலே கவனித்து வந்தாலும் வரலாம்.அப்படிப் பல தடவை கவனித்ததில் காவலாளன் தன் வேலையைப் பொறுமையோடு பார்க்கிறான் எனஅவன் உறுதிகொண்டுவிட்டால், பின் அக் காவலாளனை அரசன் கட்டாயம் மேற்றொழில் ஒன்றில்அமர்த்துவான்; ஆகையால் "மன்னர் புறங்கடை காத்து வறிதே யாம் எந்நலங் காண்டும் என்றெள்ளற்க, " "முயற்சி திருவினையாக்கும்."

(க-து.) அயர்வின்றிஅரசன் பணியாற்றுவார், முன் இல்லாவிடினும் முடிவில்அவன் அன்பு பெறுவர்.  (48)