6. அவை அஞ்சுவார் கல்வி

அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - நவை அஞ்சி
ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன் நலமும்
பூத்தலின் பூவாமை நன்று

(பொ-ள்.) அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும்-கற்றார் அவைக்கு அஞ்சி உடம்பு நடுங்குவோருடையகல்வியறிவும், கல்லார் அவை அஞ்சா ஆகுலச்சொல்லும் - படிக்காதவர்களுடைய அவைக்கு அஞ்சாதஆரவாரச் சொல்லும், நவை அஞ்சி ஈத்து உண்ணார் செல்வமும் - குற்றத்துக் கஞ்சிக் கொடுத்துண்ணாதவர்கள்செல்வமும், நல்கூர்ந்தார் இன்நலமும்-வறியவர்களுடைய ஈகை முதலிய இனிமையான தன்மைகளும்,பூத்தலின் பூவாமை நன்று - ஆக இந்த நான்கு தன்மைகளும், உண்டாதலைவிட உண்டாகாமலிருத்தலேநன்று.

(வி-ம்.) இஃதுஅவைக்குச் சென்றும் அதற்கு அஞ்சுவாரைக் குறித்தது. அவையை யஞ்சி என்று இரண்டாம் வேற்றுமையுருபுவிரித்தலுமாம். விதிர்த்தல் உதறல். " மெய்தானரும்பி விதிர்விதிர்த்து ‘* என்பதுதிருவாசகம். ஆகுலம் - ஆரவாரம்: " ஆகுல நீர பிற"+ என்பதன் உரையை நோக்குக.செல்வமும் இன்னலமும் என்பன உள்ளுறை உவமமாக வந்தன. ஆகுலச் சொல்லும், மெய்விதிர்ப்பார் கல்வியும்பயனில்லை என்பது. இன்னலம் என்றற்கு இனிய அழகு என்றலுமாம். கற்றவர்களிலும் அவைக்குஅஞ்சாதவரே உண்மையிற் கற்றவர், மற்றவர் கற்றுங் கல்லாரே ஆவர். இதனைத் திருவள்ளுவனார்,"கற்றாருட் கற்றார்"+ என்றும், "கல்லா தவரிற் கடை " $ என்றுங்கூறுவார். கல்வியின் உண்மையும், இன்மையும் ஒரு சேரக்கூறினமையால் இது பழிப்பொப்புமைக் கூட்டஅணி.

(க-து.) கற்றாரவைக்குஅஞ்சுங் கல்வி பயன் படாதென்பது. (6)
______________________________

*    திருவாசகம் திருச்சதகம்,1.

+    திருக்குறள், அறன் வலியுறுத்தல், 4

+    "  அவையஞ்சாமை, 2

$    "   "                  9.