61. நல்லார் அல்லன செய்யார்

நல்லா றொழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் - பல்பொறிய
செங்கண் புலிஏறு அறப்பசித்துந் தின்னாவாம்
பைங்கண் புனத்தபைங் கூழ்

(பொ-ள்.) பல்பொறிய - பல புள்ளிகளையுடைய, செம்கண் புலி ஏறு - சிவந்த கண்களையுடைய புலியேறானது, அறப்பசித்தும்-மிகுந்த பசிகொண்டும்,பைங்கண்புனத்த-பசுமையான இடமாகிய கொல்லைகளிலுள்ள, பைங்கூழ் - பசிய பயிர்களை,தின்னா ஆம்-தின்ன மாட்டா (அதுபோல்), நல் ஆறு ஒழுக்கின் தலை நின்றார்-நன்னெறியொழுகுதலின் உறுதியாக நின்றவர்கள், நல்கூர்ந்தும்-வறுமையுற்றும், அல்லன செய்தற்குஒருப்படார்- முறையல்லாதவற்றைச் செய்யமனங்கொள்ளமாட்டார்.

(வி-ம்.) நல்ஆறு என்பதுமுன் செய்யுளிற் கூறப்பட்ட மனம், வாக்குக் காயங்களாலாகியகுற்றங்களில்லாத போக்கு - அல்லன - கொலை, பொய், வஞ்சனை முதலியவை.ஒருப்படார் : ஒருமைப்படார் என்பதன் விகாரம்,புலி ஏறு - ஆண் புலி. ஏறு :சிறப்பு மொழி.

(க-து.) நல்லொழுக்கமுடையோர்வறுமை வந்த காலத்தும்தீச்செயல்புரிய நினையார்.(61)