74. தெய்வத் தண்டனை

தெய்வ முளதென்பார் தீய செயப்புகின்
தெய்வமே கண்ணின்று நின்றொறுக்கும் - தெய்வம்
இலதென்பார்க் கில்லைத்தம் இன்புதல்வர்க் கன்றே
பலகாலும் சொல்வார் பயன்

(பொ-ள்.) தெய்வம்உளதுஎன்பார் - தெய்வம் உண்டு என்று சொல்வோர்,தீய செயப்புகின் - தீய காரியங்களைச் செய்யத் தலைப்பட்டால், தெய்வமே கண்இன்று நின்று ஒறுக்கும்- அவர்கள் நம்பும் அத்தெய்வமேகண்ணோட்டமின்றி அவர்முன் நின்று அத்தீய காரியங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும், தெய்வம் இலது என்பார்க்குஇல்லை - தெய்வம் இல்லை என்று சொல்வோர்க்கு அத்தெய்வம் அவ்வாறு தோன்றுவதுமில்லை, அவர்களைத் தண்டித்தலுமில்லை;(இஃது எதுபோலெனில்)தம் இன்புதல்வர்க்கு அன்றே -(பெற்றோர்) தம் அன்பார்ந்த புதல்வர்க்கன்றோ,பலகாலும் (அவர்கள்நன்னெறி தப்பிச்)செல்லுந்தோறும், பயன் சொல்வார் - பயன்தருஞ் சொற்களை (நீதிகளை)ச் சொல்வார்கள்? (அதுபோல வென்க).

(வி-ம்.) பெற்றோர் தம்அன்பானபுதல்வர்க்கு மட்டும்அடுத்தடுத்து அறநெறிகற்பிப்பாரன்றி அன்பிலாப்புதல்வர்க்கு அவ்வாறு கற்பியாரானமை போல் இறைவனும் தன்னைநம்பினவர்க்கு அவரை ஒறுத்தேனும்நன்னெறி காட்டுவனன்றி நம்பாதார்க்கு அவ்வாறு செய்வதில்லை என்க. தெய்வம் சொல்லாலஃறிணையாதலின் அதற்கேற்ற முடிபு கொடுத்தார். 'தம் இன்புதல்வர்க்கன்றேபலகாலும்சொல்வார் பயன்' என்னும்ஈற்றடியால்முன்னடிகளில்தொடங்கிய கருத்தை முடித்தலால்,இது வேற்றுப் பொருள்வைப்பணி. ஒறுக்கும் : வினைமுற்று : ஒறு : பகுதி.

(க-து.) இறைவனுண்டென்று நம்பினவர்களை அவ்விறைவன்ஒறுத்தேனுந் தீ நெறியினின்றுந் தடுப்பன். (74)