76. பழி நாணுவோர்

நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும்
செந்நெறிச் செல்வாரின் கீழல்லர் - முன்னைத்தம்
ஊழ்வலி உன்னிப் பழிநாணி உள்ளுடைவார்
தீய செயினுஞ் சில

(பொ-ள்.) தம்முன்னை  ஊழ்வலி யுன்னி - முற்பிறப்பிற் செய்த  தமது பழைய ஊழின் வலிமையைநினைந்து, பழி நாணி உள் உடைவார்- (வருகின்ற) பழிச் சொற்களுக்குவெட்கி மனம் வருந்துவோர், சில தீய செயினும்- (ஒரு காலத்தில் அறிவுமயங்கியேனும்பிற காரணங்களாலேனும்) சில தீயகாரியங்களைச் செய்தாராயினும்,(அவர்கள்)  நன்மக்கள்- மேன்மக்கள்- செந்நா தழும்பு இருக்க   -செவ்விய நாவினை (இடைவிடாமல் தம் நன்மையை எடுத்துரைத்தலால்)தழும்பேறிருக்கும்படி, நாள்வாயும் செந்நெறி செல்வாரின் -நாள்தோறும் நல்லொழுக்க வழிகளிலே செல்லும் மேலோரினும், கீழ் அல்லர்- கீழாகார்.

(வி-ம்.) தாம் அறியாமல் ஊழ்வினையால்மதிமயங்கித் தீய காரியங்கள் செய்ய நேர்ந்து  அதனால் வரும் பழிக்கு நாணி மனம் வருந்துவோர், மேலும்மேலுந் தீய காரியங்களைச் செய்யாராதலின் அதனால் அவர் பெருமை குன்றுதலிலர். நாள்வாயும் : 'வாயும் ஏழாம் வேற்றுமைக்கண் வந்து  நாடோறுமென்னும் பொருடந்து நின்றது. கீழ் : பண்பாகு பெயர்; கீழோரை  உணர்த்திற்று. உன்: இடவாகு பெயர்; மனத்தைஉணர்த்திற்று. நல்லோர் இடைவிடாது புகழ என்பார், ‘நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க’ என்றார். “பிறர்பழியுந் தம்பழியு  நாணுவார் நாணுக்கு, உறைபதி யென்னு முலகு" என்பது திருக்குறள்.  செந்நா - உண்மையாகிய செம்மையயுடைய நா. 

(க-து.) மேன்மக்கள் ஒரோவொருகால்ஊழ்வலியால் நல்லொழுக்கத்தினின்றுதவறினும், அவர்கள் உள்ளுடைந்து வருந்துதலின் நன்மக்களேயாவர்.       (76)