(பொ-ள்.) புண்புலால் கழிமுடை நாற்றம்-இழிவான இறைச்சியின் மிகுந்த கெட்ட நாற்றமானது, புறம் பொதிந்து மூடினும்- (அவ்விறைச்சியை) ஒன்றிற் போட்டுப் பொதிந்து மூடிவைத்தாலும், சேயார் முகத்து சென்றுதைக்கும்-வெகுதூரத்திலிருப்பவர்களுடைய முகத்திலும் போய்த்தாக்கும்; (அதுபோல) மறைவழிப்பட்ட பழிமொழி-மறைவில் நடந்த செயலால் வரும் பழிச் சொற்கள், தெய்வம் பறை அறைந்து ஆங்கு-இறைவன் பறை கொட்டி வெளிப்படுத்தினாற்போல், ஓடிப்பரக்கும்-விரைந்து சென்று எங்கும் பரந்துவிடும். (வி-ம்.) மறை : முதனிலைத் தொழிற்பெயர்; அஃது இவன் இடம் உணர்த்தலால்தொழிலாகு பெயர். சென்றுதைக்கும் என்பதைச் சென்று உதைக்கும் என்றும் பிரிக்கலாம். "தூர்த்த மங்கையர் சோர்வினிற் செய்பழி, வார்த்தை யெங்கணும் வல்லிதிற் செல்லல் போல்" என்பது கந்தபுராணம். (க-து.) மறைவில் நடந்திருப்பினும் பழிச்செயல்கள் விரைவில் வெளிப்படும். (95) |