(பொ-ள்.) மேலையோர்செய்கை-பெரியார் செய்கை, இசையாத போலினும்-(சில நேரங்களில்) பிறர் கொள்கைக்குப்பொருத்தமற்றனவாயிருந்தாலும், மற்றையோருக்கு அல்லால்- சிறியோர்க்கன்றி (அவர் போன்ற பெரியோர்க்கு), வசை ஆகா- குற்றமாகா ; பசு வேட்டு-உலகின் (நலங்கருதிப்) பசுவைப்படைத்து, தீஓம்பி-முத்தீ வேள்வி செய்து, வான் வழக்கங் காண்பாரை-மழை பெய்தலைச் செய்விக்கும் வேள்வியாசிரியரை, ஊன்ஓம்பி-(தமது) உடம்பைப் பாதுகாக்க வேண்டி, ஊன்தின்பவர்-(வேறோர் உயிரின்) இறைச்சியைத் தின்பவர்கள், ஒப்பாவரோ? (ஆகார்). (வி-ம்.) முத்தீ - ஆகவனீயம்,காருகபத்தியம், தட்சிணாக்கினியம், வேட்டு : இறந்த கால வினையெச்சம்; வேள்: பகுதி; த் : இடைநிலை: ள், த், டகரமாதல் சந்தி; உ : விகுதி. பசு :வேள்விக்குரிய உயிர்களுக்குப்பொதுப் பெயர். மேலையோர் - முனிவர். "யானைமதப் பட்டா லலங்கார மாஞ்சிறுநாய் தானுமதப் பட்டாற்சரியாமோ - ஞானி. தடை மீறினாலுஞ் சரியாகும் கன்மி நடைமீறில் ஆகாது காண்." - ஒழிவிலொடுக்கம் "தன்னூன்பெருக்கற்குத் தான் பிறிதூனுண்பான் எங்ஙன மாளுமருள்." - திருவள்ளுவர். (க-து.) பெரியோர் சில சமயங்களில் தீச்செயல்கள்புரிந்தாலும் அவற்றாலும் உலகுக்கு நன்மையே பிறக்குமாகையால் அவை பழிக்கப்படா. (97) |