எனக்கு மட்டும் மருந்து கிடைக்குமென்றால் இந்த அழியக்கூடிய ஊத்தைச் சடலத்தை விட்டொழித்து உன் பாதமே தஞ்சம் என்று வந்து விடுவேனே என்று யோகத்தின் அவசியத்தைக் குறிப்பிடுகின்றார். இப்படிப்பட்ட யோகத்தை பழக முயற்சிக்கின்றார் அழுகண்ணர். யோகம் பழகப் பழக உடல் கொதிக்கிறது. மூலச்சூடு ஏற்படுகின்றது. அடி வயிறு வலிக்கிறது. தம்அனுபவத்தைப் பாடல்களில் கொட்டிக் கவிழ்க்கின்றார். கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என் வயிறு நில் என்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை; நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக் கொல் என்று வந்த நமன் - என் கண்ணம்மா குடியோடிப் போகாணோ! யோகம் பயில்வாருக்கு அடிவயிறு சுடும் என்பது புரிகிறது. அது மூலச்சூடு என்பார்கள். இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கினால் மூலாதாரத்தில் உறங்கும் குண்டலிப் பாம்பை எழுப்புவதற்கான அனல் என்பது புரியும். எந்தச் செயலையும் ஆரம்பிப்பதுதான் கடினம். பிறகு அது சுலபமாகி விடும். யோகத்தைப் பயில ஆரம்பித்த நிலையில்தான் அழுகண்ணருக்கு உடலைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்ததே ஒழிய யோகம் பயின்றபின் அது இவர் கட்டுப்பாட்டை விட்டு விலகியே இருந்தது. உடற்சூட்டின் மூலம் குண்டலினியைக் கிளப்பிய இவர் அதனை இடையில் நிறுத்தும் வித்தையையும் அறிய விரும்புகின்றார். ஆனால் முடியவில்லை. அடியில் தோன்றிய அனல் உச்சியில்தான், அதாவது சகரஸ்தளத்தில்தான் போய் நின்றது. இடையில் ஒவ்வொரு உடற் சக்கரத்தையும் கடக்கும்போது இன்பமயமான ‘சிறுவலி’ |