பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்319


வாடைதனைக் காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல்
ஆடை குலைத்து எமையும் - என் ஆத்தாளே
     அலங்கோலஞ் செய்தான்டி.
152
  
கற்புக் கரசிஎன்ற காரப்பேர் விட்டுஅகலப்
பொற்புக் குலைத்து எமையும் - என் ஆத்தாளே
     போதம் இழந்தனடி.
153
  
என்ன வினைவருமோ இன்னதெனக்கு என்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் - என் ஆத்தாளே
     சொல்லறவே வெந்ததடி.
154
  
கங்குல்பகல் அற்றிடத்தே காட்டிக் கொடுத்தான்டி
பங்கம் அழித்தான்டி - என் ஆத்தாளே
     பாதகனைப் பார்த்திருந்தேன்.
155
  
ஓதியுணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி
சாதியில் கூட்டுவரோ - என் ஆத்தாளே
     சமையத்தாற் குள்ளாமோ.
156
  
என்னகுற்றஞ் செய்தேனோ எல்லவருங் காணாமல்
அன்னை சுற்றமெல்லாம் - என் ஆத்தாளே
     அறியாரோ அம்புவியில்.
157
  
பொய்யான வாழ்வெனக்குப் போதமெனக் கண்டேன்டி
மெய்யான வாழ்வெனக்கு - என் ஆத்தாளே
     வெறும்பாழாய் விட்டுதடி.
158
  
சொல்லானைச் சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையென்று
எல்லாருங் கண்டிருந்தும் - என் ஆத்தாளே
     இப்போது அறியார்கள்.
159
  
கன்மாயம் விட்டதடி கருத்தும் அழிந்தேன்டி
உன்மாயம் இட்டவனை - என் ஆத்தாளே
     உருவழியக் கண்டேன்டி.
160
  
என்னசெய்யப் போறேன்நான் இருந்த அதிசயத்தைக்
கன்னி இளங்கமுகு - என் ஆத்தாளே
     காரணமாய்க் காய்த்ததடி.
161