18.காகபுசுண்டர் ஞானம் 80 கயிலாய மலையில் ஒருநாள் மும்மூர்த்திகளும் தேவர்களும் கூடியிருக்கும் சமயத்தில் சிவபெருமானுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது. “இந்த உலகம் எல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோருக்கும் குருவான நமசிவாயம் எவ்விடத்தில் தங்கும்? பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் எங்கே இருப்பார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். சிவபெருமானின் கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விஷ்ணுவும் மௌனமாயிருந்தார். மார்க்கண்டேயனுக்கு ஆச்சரியம். விஷ்ணுவுக்குக் கூடவா விடை தெரியவில்லை? மார்க்கண்டேயனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட விஷ்ணுவும், “உங்கள் கேள்விக்குப் பதில் சித்தர்களிடம்தான் கிடைக்கும். குறிப்பாக புசுண்ட முனிவரைக் கேட்டால் தெரியும். அவரை இங்கு அழைத்து வந்து கேட்ப தென்றால் வசிட்ட முனிவரைத்தான் அனுப்ப வேண்டும்” என்றார். தேவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். தேவர்களான தங்களால் யூகிக்க முடியாத ஒன்றை சித்தர் ஒருவர் யூகித்துக் கூறுவார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. எதனால் நீர் இப்படிக் கூறுகின்றீர்? என்று அனைவரும் விஷ்ணுவைக் கேட்டனர். |