பக்கம் எண் :

84தமிழ்ஒளி கவிதைகள்2

போராட்டம்

வர்க்கங்க ளாகப் பிரிந்த சமூகம்
       வளர்ந்தது காண்உலகில் - இரு
வர்க்கங்க ளாகி எதிர்ப்பன, ஆர்ப்பன
       என்றும் உறுமுவன!

போட்ட முதலினைக் கொண்டு மனிதன்
       புலன்உழைப்பைப் பறிப்பார் - நர
வேட்டை யாடும் முதலாளிகள் வர்க்கம்
       விழ, அடி வீழ்கிறது!

பூட்டும் அடிமைத் தளைகள் அறுத்தும்
       புரட்சி செயஎழுந்தார் - அவர்
மூட்டும் கனல்புவி மூள்கிறது துயர்
       முற்றும் எரிந்திடவே!

வேர்வையில் நன்மை விளைய உழைத்தவர்
       வீறுடனே எழுவார் - ‘வர்க்கப்
போர் இட’ என்று புரட்சி முரசு
       புவியில் ஒலிப்பதுகேள்!

‘அலை ஓசை’ - 1955