பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 87

நம்பிக்கை
(வழி நடைச் சிந்து)

காலம் புரிந்த வடுமாற்றி - நம்
கைகள் இணைத்துத் துயர்ஆற்றி
சீலம் காட்டும் வழியிற்
       செல்லுவோம்
       செல்லுவோம் - பாரதம்,
சீனம் இணைந்த நட்பால்
       வெல்லுவோம்
       வெல்லுவோம்!

நேருவும், சூவும் இன்றுபேசி - மக்கள்
நெஞ்சினில் விளக்கொளியை வீசி
வேருடன் வெம்பகையை
       வீழ்த்துவார்
       வீழ்த்துவார் - வரும்
வெற்றியை மாந்த ரெல்லாம்
       வாழ்த்துவார்
       வாழ்த்துவார்!

போரெனும் பேயைமண்ணில் ஓட்டி - அன்புப்
புரவியை ஞானரதம் பூட்டிப்
பாரெனும் பெண்ணை மணஞ்
       சூட்டுவோம்
       சூட்டுவோம் - நட்புப்
பாலகனை ஈன்றுதால்
       ஆட்டுவோம்!
       ஆட்டுவோம்!

பனியில் உறைந்த எல்லை பாரோம் - நம்
பண்பில் உறைந்த எல்லை மீறோம்
இனியும் இன்னலை யார்
       விரும்புவார்
       விரும்புவார் - மண்
இன்புற நன்னெறி
       திரும்புவார்!
       திரும்புவார்!