பக்கம் எண் :

மலரும் உள்ளம்115

நிழல்

எங்கெங் கேநான் சென்றிடினும்
என்னைத் தொடர்ந்தே வந்திடுமே.

காதும் மூக்கும் இருந்திடினும்
கண்ணை மட்டும் காணவில்லை.

உருவம் என்னைப் போலிருந்தும்
உரையா தொன்றும் என்போலே.

மனிதர், மிருகம், மரங்களுமே
வளர்தல் சிறிது சிறிதாகும்.

அதுவும் அவைபோல் வளர்ந்திடுமே,
ஆனால், குறைந்தும் போய்விடுமே!

வளர்தல், குறைதல் அதனில்நாம்
மாறி மாறிக் கண்டிடலாம்.

வெள்ளையன், கறுப்பன் என்றெல்லாம்
வித்தி யாசம் அதற்கில்லை.

யாரா யிருப்பினும் அதன்தோற்றம்
என்றும் கருப்பு நிறமேதான்!