| 
 அன்புதான் உள்ளத் துள்ள 
           அழுக்கெலாம் களையு மென்றார். 
        அன்புதான் அகிம்சைப் போரின் 
           ஆயுதம் என்றும் சொன்னார்! 
        ஃ     ஃ     ஃ 
        அண்ணலார் காந்தி அன்பினைப் பற்றி 
        அருளிய மொழிகள் அளவில.  அவற்றுள் 
        சிற்சில வற்றைச் செவிமடுப் பீரே: 
         
        முத்திரை நாணயம் முன்புறம் பின்புறம் 
        என்றிரு புறங்கள் கொண்டதாம். அதுபோல் 
        வாழ்வெனும் நாணயம் வாய்மையும் அன்பும் 
        கொண்டதாய் இருப்பின் குறையெதும் இல்லை. 
        வெள்ளையன், கறுப்பன் 
           வேற்றுமை எதற்கு? 
        ஹரிஜனன், ஏழை 
           அவன்குலம் தாழ்வு 
        என்றெலாம் கூறுதல் 
           ஏற்புடைத் தன்று. 
        உலகமே குடும்பம், 
           உயிரெலாம் உறவே. 
        இவ்வழி அன்பின் 
           எழிலினைக் காண்போம்! 
 |