தோத்திரப் பாடல்கள்
முருகன் பாட்டு
[ராகம்
-- நாட்டைக் குறிஞ்சி] [தாளம் -- ஆதி]
பல்லவி
முருகா -- முருகா --
முருகா
சரணங்கள்
|
வருவாய் மயில் மீதினிலே
வடிவே லுடனே வருவாய்
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும். |
(முருகா) |
1 |
அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! |
(முருகா) |
2 |
சுருதிப் பொருளே, வருக.
துணிவே, கனலே, வருக.
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் |
(முருகா) |
3 |
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம், சரணம்!
குமரா, பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே, சரணம். |
(முருகா) |
4 |
அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே, வளர்வாய், அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய். |
(முருகா) |
5 |
குருவே, பரமன் மகனே,
குகையில் வளருங் கனலே,
தருவாய் தொழிலும் பயனும், அமரர்
சமரா திபனே, சரணம், சரணம். |
(முருகா) |
6 |
|
|
|