பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்


கண்ணன் பாட்டு


கண்ணன் -- என் காதலன்

(வராளி, திஸ்ர ஏகதாளம்.)
(சிருங்கார ரசம்.)


கனிகள் கொண்டுதரும் -- கண்ணன்
கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும் -- பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான் -- கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே -- வண்ணம்
இயன்ற சவ்வாதும்,







1


கொண்டை முடிப்பதற்கே -- மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே -- கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே -- செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம் -- கண்ணன்
பேசருந் தெய்வமடீ!







2

குங்குமங் கொண்டுவரும் -- கண்ணன்
குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம் -- தந்தே
தழுவி மையல்செய்யும்;
பங்கமொன் றில்லாமல் -- முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ -- பின்னோர்
வருத்த மில்லையடீ.







3