கண்ணன்
பாட்டு
கண்ணம்மா -- என் காதலி
குறிப்பிடம் தவறியது
(செஞ்சுருட்டி-ஆதிதாளம். சிருங்கார ரசம்)
|
தீர்த்தக் கரையினிலே -- தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந் தால்வருவேன் -- வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் -- அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் -- உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!
|
1
|
மேனி கொதிக்குதடீ
-- தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!
வானி லிடத்தையெல்லாம் -- இந்த வெண்ணிலா
வந்து தழுவுதுபார்.
மோனத் திருக்குதடீ -- இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் -- பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?
|
2
|
கடுமை
யுடையதடீ -- எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்தபின்னும் -- எண்ணும்போதுநான்
அங்கு வருவதற்கில்லை;
கொடுமை பொறுக்கவில்லை -- கட்டுங் காவலும்
கூடிக் கிடக்குதங்கே;
நடுமை யரசியவள் -- எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.
|
3
|
கூடிப்
பிரியாமலே -- ஓரிராவெலாம்
கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே, -- உன்றன்மேனியை
ஆயிரங் கோடிமுறை
நாடித் தழுவிமனக் -- குறைதீர்ந்துநான்
நல்ல களியெய்தியே
பாடிப் பரவசமாய் -- நிற்கவேதவம்
பண்ணிய தில்லையடி’!
|
4 |