பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

வீமன் செய்த சபதம்

வேறு


வீமனெழுந்துரை செய்வான்; -- ‘இங்கு
விண்ணவ ராணை, பராசக்தி யாணை;
தாமரைப் பூவினில் வந்தான் -- மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை;
மாமகளைக் கொண்ட தேவன் -- எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன்பதத் தாணை;
காமனைக் கண்ணழ லாலே -- சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடி மீதில்
99

‘ஆணையிட் டிஃதுரை செய்வேன்: -- இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,
பேணும் பெருங்கன லொத்தாள் -- எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்

பு{[பாட பேதம்]: ‘மூளு நற்’
-- கவிமணி}

நாணின்றி “வந்திரு” என்றான் -- இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே, -- என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,
100

‘தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் -- தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -- அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்.
நடைபெறுங் காண்பி ருலகீர்! -- இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, -- இது
சாதனை செய்க, பராசக்தி!’ என்றான்.
101