பக்கம் எண் :

தனிப் பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்

சமூகம்


பெண்மை


பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.
1

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.
2

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலி யழிப்பது பெண்க ளறமடா
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்.
3

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா.
4

சக்தி யென்ற மதுவையுண் போமடா
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே
ஒத்தி யல்வதோர் பாட்டும் குழல்களும்
ஊர் வியக்கக் களித்துநின் றாடுவோம்.
5

உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள், ஆடு களிகொண்டே.
6

‘போற்றி தாய்’ என்று தோள்கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோமே
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.
7

‘போற்றிதாய்’ என்று தாளங்கள் கொட்டடா
‘போற்றிதாய்’ என்று பொற்குழ லூதடா
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.
8

அன்ன மூட்டிய தெய்வமணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்.
9