பக்கம் எண் :

தனிப் பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்
சமூகம்


புதிய கோணங்கி


குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது; நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்லகுறி சொல்லு.
5

தரித்திரம் போகுது; செல்வம் வருகுது;
படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்.
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
10

தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது, வளருது;
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
15

சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!
அந்தரி, வீரி, சண்டிகை, சூலி!
குடுகுடு குடுகுடு.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
20

தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பயந் தொலையுது, பாவந் தொலையுது;
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;
25

பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது;
சொல்லடி, சக்தி, மலையாள பகவதி!
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.
29