பக்கம் எண் :

பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்


உயிர் பெற்ற தமிழர் பாட்டு

பல்லவி

இனிஒரு தொல்லையும் இல்லை          பிரி
வில்லை, குறையும் கவலையும் இல்லை    (இனி)

ஜாதி

மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை; 1
கனிதரும் மாமரம் ஒன்று அதில் காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.      

   8. ஆதாரம்: சக்தி வெளியீடு -- பக்கம் 575-578

பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சைப் பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு 2
நாவிற் கினியதைத் தின்பார் அதில் நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்லார்.

ஒன்றுண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்; 3
இன்று படுத்தது நாளை உயிர்த் தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்.

நந்தனைப்போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின், 4
எந்தக் குலத்தின ரேனும் உணர் வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

இன்பத்திற்கு வழி


ஐந்து புலனை அடக்கி அரசு ஆண்டு மதியைப் பழகித் தெளிந்து, 5
நொந்து சலிக்கும் மனதை மதி நோக்கத்திற் செல்ல விடும்வகை கண்டோம்.

புராணங்கள்

உண்மையின் பேர்தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம் 6
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

கடலினைத் தாவும் குரங்கும் வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும், 7
வடமலை தாழ்ந்தத னாலே தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய் அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை 8
விதியுற வேமணம் செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் ஒன்றில் உண்மையென் றோதிமற் றொன்று பொய்யென்னும் 9
நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதை பலப்பல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்; 10
புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

ஸ்மிருதிகள்

பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை; 11
மன்னும் இயல்பின் வல்ல இவை மாறிப் பயிலும் இயல்பின ஆகும்.

 
காலத்திற் கேற்ற வகைகள் அவ்வக் காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும் 12
ஞால முழுமைக்கும் ஒன்றாய்- எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை.

 
சூத்திர னுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி; 13
சாத்திரம் சொல்லிடு மாயின் அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

மேற்குலத்தார் எவர்?

வையகம் காப்பவ ரேனும் சிறு வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும் 14
பொய்யக லத்தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்

தவமும் யோகமும்

உற்றவர் நாட்டவர் ஊரார் இவர்க்கு உண்மைகள் கூறி இனியன செய்தல் 15
நற்றவம் ஆவது கண்டோம் இதில் நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.

 
பக்கத் திருப்பவர் துன்பம் தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி; 16
ஒக்கத் திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.

யோகம், யாகம், ஞானம்

ஊருக் குழைத்திடல் யோகம்; நலம் ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்; 17
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இல்லாத அமைதிமெய்ஞ்ஞானம்.

பரம்பொருள்

எல்லையில் லாத உலகில் இருந் தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம் 18
எல்லையில் லாதன வாகும் இவை யாவையு மாயிவற் றுள்ளுயிராகி

 
எல்லையில் லாப்பொருள் ஒன்று தான் இயல்பறி வாகி இருப்பதுண்டென்றே, 19
சொல்லுவர் உண்மை தெளிந்தா இதைத்தூ வெளி யென்று தொழுபவர் பெரியோர்.

 
நீயும் அதனுடையத் தோற்றம் இந்த நீல நிறங்கொண்ட வானமும் ஆங்கே 20
ஓயுதல் இன்றிச் சுழலும் ஒளி ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே.

 
சக்திகள் யாவும் அதுவே பல் சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே 21
நித்திய மாமிவ் வுலகில் கடல் நீரில் சிறுதுளி போலும் இப் பூமி.

 
இன்பமும் ஓர்கணத் தோற்றம் இங்கு இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்; 22
துன்பமும் ஓர்கணத் தோற்றம் இங்கு தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

முக்தி

தோன்றி அழிவது வாழ்க்கை இதில் துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும் 23
மூன்றில் எதுவரு மேனும் களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி.(இனி)