பக்கம் எண் :


பாமாலை : பக்தி பாடல்கள்


தோத்திரப் பாடல்கள்

சரசுவதி தோத்திரம்

(நொண்டிச் சிந்து)

எங்ஙனம் சென்றிருந்தீர் -- எனது
   இன்னுயிரே என்றன் இசையமுதே
திங்களைக் கண்டவுடன் -- கடல்
   திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன் -- கடல்
   காலையில் இரவியைத் தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்தெனவே -- அந்தப்
   புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.
1

மாதமொர் நான்காநீர் -- அன்பு
   வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்.
பாதங்கள் போற்றுகின்றேன் என்றன்
   பாவமேலாங்கெட்டு ஞான கங்கை
நாதமொ டெப்பொழுதும் -- என்றன்
   நாவினி லேபொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர்! -- அந்த
   விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்!
2

கண்மணி போன்றவரே! -- இங்குக்
   காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் -- சக்திப்
   பெருமகள் திருவடிப் பெருமையையும்
வண்மையில் ஓதிடுவீர்! -- என்றன்
   வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
அண்மையில் இருந்திடுவீர்! -- இனி
   அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ?
3

தானெனும் பேய்கெடவே, -- பல
   சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெனும் ஒளிபெறவே, -- நல்ல
   வாய்மையி லேமதி நிலைத்திடவே,
வானெனப் பொழிந்திடுவீர்! -- அந்தத்
   திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்! -- நல்ல
   ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!
4

தீயினை நிறுத்திடுவீர்! -- நல்ல
   தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே -- உம்மை
   மதிப்பது மறந்தனன் பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் --பொறை
   சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; -- இனி
   மறக்ககிலேன் எனை மறக்ககிலீர்!
5