ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் -- ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் -- அவை
யன்றியோர் பொருளுமில்லை, அன்றியொன்று மில்லையிதை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -- இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது -- எந்த
நெறியுமெய்து வர்நினைத்த போது -- அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது -- என்று
நேர்மைவேதம் சொல்லும் வழி யீது.