பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்


வேதாந்தப் பாடல்கள்

மாயையைப் பழித்தல்

[ராகம் -- காம்போதி] [தாளம் -- ஆதி]

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ
   மாயையே -- மனத்
திண்மையுள் ளாரைநீ செய்வது மொன்றுண்டோ --
   மாயையே.
1

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
   மாயையே -- நீ
சித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ --
   மாயையே.
2

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்கெட்ட
   மாயையே -- நான்
உன்னைக் கெடுப்ப துறுதிஎயன் றேயுணர்
   மாயையே.
3

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
   மாயையே -- இந்தத்
தேகம் பொய் யென்றுணர் தீரரை யென்செய்வாய் --
   மாயையே.
4

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப
   மாயையே -- தெளிந்
தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ --
   மாயையே.
5

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
   மாயையே -- சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை --
   மாயையே.
6

என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட வல்லேன்
   மாயையே-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்வராது காண்-
   மாயையே.
7

யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன்
   மாயையே -- உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு வேன் உன்னை --
   மாயையே.
8