வேதாந்தப்
பாடல்கள்
|
அறிவே தெய்வம்
|
|
ஆயிரந் தெய்வங்கள்
உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகள் -- பால்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ? |
1 |
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் -- எத
னூடும் நின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ? |
2 |
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? -- பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? |
3 |
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே -- ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. |
4 |
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே -- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே. |
5 |
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே -- உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே. |
6 |
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம் -- நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? |
7 |
உள்ள தனைத்திலு முள்ளொளி யாகி
யொளிர்ந்திடு மான்மாவே -- இங்கு
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ? |
8 |
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்க தைகள்சேர்த்துப் -- பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்முறை
காட்டவும் வல்லீரோ? |
9 |
ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் -- என்றும்
ஒன்றுபிரம முளதுண்மை யஃது
உணர்வெனக் கொள்வாயே. |
10 |