மாலை ஆயிற்று! வரும்வழி பார்த்துச்
சோலை மலர்விழி துளிகள் உதிர்க்கக்
குடிசையின் வாசலில் குந்தி யிருந்தாள்
சுப்பம் மாவுக்குத் துணையாய் இருந்த
குப்பும் முருகியும் செப்பினர் தேறுதல்
குப்பு, 'மங்கையே, சிப்பாய் இப்போ
வருவார்; அதற்குள் வருத்தமேன்' என்றாள்.
முருகி, 'இதற்கே உருகு கின்றாயே
சிப்பாய் வேலைக் கொப்பிச் சென்றவர்
மாசக் கணக்காய் வாரக் கணக்காய்
வீட்டை மறந்து கோட்டையில் இருப்பார்;
எப்படி உன்னுளம் ஒப்பும்' என்றாள்.
கோதைசுப் பம்மா கூறு கின்றாள்.
'புயற்காற்று வந்து, போகாது தடுப்பினும்
அயலில் தங்க அவருக்குப் பிடிக்காது;
நெஞ்சம் எனைவிட்டு நீங்கவே நீங்காது;
பிரிந்தால் எனக்கும் பிடிக்கா துலகமே!
வீட்டை விட்டவர் வெளியே செல்வது
கூட்டைவிட் டுயிர்வேறு கூடு செல்வதே'
அதென்ன மோயாம் அப்படிப் பழகினோம்
அயல்போ வாரெனில் அதுவும் எங்கே?
வயல்போ வதுதான். வலக்கைப் பக்கத்து
வீடு, மற்றொரு வீடு, தோப்பு
மாமரம் அதனருகு வயல்தான்! முருகியே
இப்போ தென்ன இருக்கும் மணி? அவர்
எப்போது வருவார்?' என்று கேட்டாள்.
குப்பு, மணி ஆறென்று கூறினாள்! முருகி
விளக்கு வைக்கும் வேளை என்றாள்! குப்பு, முருகி சுப்பம்மா இவர்
இருந்த இடமோ திருந்தாக் குடிசை
நாற்பு றம்சுவர் நடுவி லேஓர்
அறையு மில்லை. மறைவு மில்லை
வீட்டு வாசல், தோட்ட வாசல்
இருவா சல்களும் நரிநுழை போலக்!
குள்ள மாகவும், குறுக லாகவும்,
இருந்தன. முருகி எழுத்து விளக்கை
ஏற்றிக் கும்பிட்டுச் சோற்றை வடித்தாள்
குப்பு, மகிழ்ந்து குந்தினாள் சாப்பிடச்
சுப்பம் மாமுகம் சுருங்கிக் கூறுவாள்;
'கணவர் உண்டபின் உணவு கொள்வேன்.
முதலில் நீங்கள் முடிப்பீர் என்றனள்
குப்பு 'வாவா சுப்பம் மாநீ
இப்படி வா! நான் செப்புவ தைக்கேள்
வருவா ரோஅவர் வரமாட் டாரோ?
சிப்பாய் வேலை அப்படிப் பட்டது
உண்டு காத்திரு, சிப்பாய் வந்தால்
உண்பார்; உணவு மண்ணாய் விடாது.
சொல்வதைக் கேள்' என்று சொல்லவே மங்கை
'சரிதான் என்று சாப்பிட் டிருந்தாள்.
காலம் போகக் கதைகள் நடந்தன.
முருகி வரலாறு முடிந்துலும் குப்பு,
மாமியார் கதையை வளர்த்தினாள், பிறகு்
மூவரும் தனித்தனி மூன்று பாயில்
தனையணை யிட்டுத் தலையைச் சாய்த்தனர்.
அப்போது தெருப்புறம் அதிக மெதுவாய்
'என்னடி முருகி' என்ற ஒருகுரல்
கேட்டது. முருகி கேட்டதும் எழுந்துபோய்
'ஏனிந் நேரம்' என்று வரவேற்று,
வீட்டில் அழைத்து வெற்றிலை தந்தாள்.
இருவரு மாக ஒரேபாய் தன்னில்
உட்கார்ந் தார்கள்! உற்றுப் பார்த்த
சுப்பம் மாஉளம் துண்டாய் உடைந்தது
சிங்கன் இரவில் இங்கு வந்ததேன்?
முருகியும் அவனும் அருகில் நெருங்கி
உரையாடு கின்றனர் உறவும் உண்டோ;
என்று பலவா றெண்ணி இருக்கையில்,
முருகிக்குச் சிங்கன் முத்த மிட்டான்.
குப்பும் கதவினைத் தொப்பென்று சாத்திச்
சூழ நடந்து சுடர்விளக் கவித்தாள்
'மேல் என்னென்ன விளையுமோ?
கண்ணிலாள்
போல்இவ் விருளில் புரளு கின்றேன்
சுதரிசன் சிங்கின் துடுக்குக் கைகள்
பதறிஎன் மீது பாய்ந்திடக் கூடுமோ',
என்று நினைத்தாள்; இடையில் கத்தியை
இன்னொருதரம் பார்த்துப் பின்னும் மறைத்தாள்.
கரைகண்டு கண்டு காட்டாற்றில் மூழ்கும்
சேய்போல் நங்கை திடுக்கிடும் நினைப்பில் ஆழ்வதும் மீள்வது மாக இருந்தாள்.
கருவிழி உறங்கா திரவைக் கழிக்கக்
கருதினாள் ஆயினும் களையுண் டானதால்
இருட்சேற் றுக்குள் இருந்த மணிவிழியைக்
கரும்பாம் பாம்துயில் கவர
இரவு போயிற்றே! இரவு போயிற்றே!
|
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
|