பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 61


(செழியனை நோக்கிச் செல்லும் விநோதையிடம் ஓர் உரு,
அஞ்சல் ஒன்றைக் கொடுத்து மனறக்ன்றது. அதைப் படித்த விநோதை நடுங்குகின்றாள்.
செழியனை நீ வஞ்சித்ததால் உன்னை அவன் கொல்ல
இருக்கிறான் என்பதே அந்த அஞ்சலின் செய்தி.)


                  (அகவல்)

மீண்டும் விநோதை செழியனை நோக்கி!
வந்துகொண் டிருந்தாள்; வழியில் தாமரை
தன்னுரு மறைத்துத் தனியோர் அஞ்சலை
அவனிடம் தந்தே அப்புறம் சென்றாள்.
விநோதை அஞ்சல் படித்தாள். விழித்தாள
திடுக்கிட் டாள், பின் சென்றாள்! நின்றாள்.
பின்னும் அஞ்சலைப் பிரித்துப் படித்தாள்.
"செழியற்குவஞ்சம் செய்தனை அதனால்
செழியன் உன்னை ஒழிக்க
வழியில் வந்துகொண்டிருக்கின்றானே.












( 5 )




( 10 )

பிரிவு -- 62

(ஓர் உரு செழியனிடம் அஞ்சல் தருதல்)

                  அகவல்

அழகில் நெஞ்சை அனுப்பித் தனியே
இழிவு கருதாது செழியன் இருக்கையில்
உருமறைந் தொருத்தி அஞ்சல் அளித்தாள்.
படித்த செழியன்வாய் பதறலா யிற்று!
"நாயா சிங்கப் பிடறி நறுக்கும்?
நரியா வேங்கையைக் கொல்ல நணுகும்?
என்னையா கொல்ல முடியும் இவளால்?
கற்பைக் கெடுக்கக் கருதினேன் என்றால்,
கற்பும் அவளிடம் கடுகள விருந்ததா?
குள்ளச் செடியின் களாப்பழம் கொள்வார்
குருதி கொட்டும் புண்ணும் கொள்வார்.
என்னுயிர் கொள்வாள் இறப்பே கொள்வாள்,
அழகு முதற்பொருள் ஆக்கிப் பிழைஎனும்
முழுக்கடை விரித்து முட்டுப்பாடின்றி
மக்கள் உயர்வை மான மதனை
ஒழிப்பதே அவளின் ஊதியம் போலும்!
சாவு தனியே இருக்க வேண்டும்.
என்னிடம் அதனை அவள் அனுப்பினால்
என்னை அஃது தழுவட்டும் இனிதே!
நான்அதை அவளுக்கனுப்பினால் அவளைத்
தழுவிக் கொள்வதில் தடைவேண் டாமே!"
என்று செழியன் இருந்தான்,
இன்னும் விநோதை வந்திலள் இங்கே!







( 15 )




( 20 )




( 25 )




( 30 )

பிரிவு -- 63

(விநோதை கொலை செய்யப்பட்டாள்)

(அறுசீர் விருத்தம்)

தருமஇல் லத்தில்ஒரு தனியறையிலே
அம்புயமும் தம்பிரானும்
பெருமகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்
வேளையில் பெண்விநோதை.
உருமறைய முக்காட்டை ஒருகையால்
பற்றிமற்றொரு கையாலே,
"திருக்கதவு திறப்பீரோ" எனத் தட்டி
நின்றிருந்தாள், தெருக்குறட்டில்
"யார்?" என்றான் தம்பிரான்! "விநோதை" என்
றுரைக்கவே, அம்புயத்தை.
"நேர்நிற்றல் ஆகாது; மறைந்து கொள்வாய்
தனிஅறையில என்ற னுப்பி,
ஈரடியில் ஒருதாண்டாய்த் தாழ்திறந்
துள்ளழைக்க, எழில்வி நோதை,
"சீரடிக்கு வணக்க" மென்றாள்' "செத்தேனுக்
குயிர்கொடுக்க வேண்டு" மென்றாள்;

"பட்டாளம் தானிருக்க வேந்தனார்
தானிருக்கப் பைங்குறிஞ்சித்
திட்டாளும் வாய்ப்பிருக்க, அம்மையே
தீமைஉனக் கென்ன?" என்று
முட்டாமல் நயம்பேசி உள்ளத்தில்
முற்பகைமை மூடி வைத்தே,
இட்டான்ஓர் நாற்காலி தம்பிரான்
"எழுந்தருள வேண்டு" மென்றே!

(வேறு) (அறுசீர் விருத்தம்)

"பெரியவர், சிறியர் செய்த
பிழைஎலாம்
பொறுப்பார் அன்றோ?
தெரியாமல் நுமக்கு நான்செய்
சிறுபிழை பொறுத்ததாகத்
திருவுள்ளம் காட்ட வேண்டும்.
செய்தருள் புரிக ஐயா!
வரநேர்ந்த காரணத்தை
மறுபடி உரைப்பேன என்றாள்;

தீமனத் தாள்இவ் வாறு
செப்பிடத் தம்பி ரானும்,
'தீமையை மறந்தேன் செய்த
நன்மையை மறந்தே னில்லை!
ஆம்இது மெய்ம்மை! அம்மே
அடைந்ததீங்குரைத்தல் வேண்டும்
தாம என்றான் தம்பிரானே!
"சரி" என்றாள் விநோதை தானும்,

வெற்பென நிமிர்த்த தோளன்
வேந்தனும், ஐயா! என்றன்
கற்பினில் ஐயப் பட்டான்!
கழறினேன் அவனை நோக்கி
'நற்கடல் ஓரக் குன்றில்
நாம்செய்த கோயில் தன்னில்,
உற்றநற் சிவனே நற்சான்
றுரைத்திடச் செய்வேனென்றே!'

"எனக்கிந்த உதவி செய்க
எனைக்காத்தல் கடன் உமக்கே!
மனத்துயர் நீக்க வேண்டும்
மானத்தைக் காக்க வேண்டும்
எனக்கிது செய்வீராயின்,
எனைஉமக் கீவேன்'' என்றாள்!
எனக்கேட்ட தம்பிரானும்
'ஈஈஈ!' எனஇளித்தான்

இன்னவாறிவள் செப்புங்கால்
தெருவினில் இருந்தொ ருத்தி
தன்தோழி அம்புயத்தின்
தனியறை தனில்நுழைந்தாள்.
அன்னதைத் தம்பி ரானும்
விநோதையும் அறிந்தாரில்லை!
ஒன்றினில் உளம்சென்றால்மற்
றொன்றினில் விழிகள் செல்லா!

வலைவீச்சுத் தொடங்க லானாள்;
தம்பிரான் மனமீன் பற்ற!
எலிஒன்று பழம்பெற்றாற்போல்
எனைஉமக் கீவேன் என்று
சொல்லக்கேட்ட தம்பிரானும்,
சுழன்றனன்; சூழ்ச்சி தன்னைத்
தலைசாய்த்தே எதிர்பார்த்திட்டான்.
தயங்கிட வில்லை மங்கை!

நாற்காலி நகர்ந்த தங்கே!
நகைத்தன உதடிரண்டு!
வேற்கண்கள் ஓடி இன்ப
விண்ணப்பம் செய்யக் கண்டான்.
ஏற்காத தம்பி ரானும்
ஏற்றனன் இருகை நீட்டி!
மேற்சென்று தோளில் வீழ்ந்தாள்,
மேல்வரு விளைவு நோக்காள்.

பாய்ந்ததே ஈட்டி ஒன்றப்
பைந்தொடி விலாப்புறத்தில்
சாய்ந்தனள்! சாயாக் குன்றும்
சாய்ந்தது போல்விநோதை!
"சாய்ந்தாயா!" என்று கூறித்
தாமரை எதிரில் வந்தாள்
"ஆய்ந்தாயா அறத்தின் ஆற்றல
எனவந்தாள் அம்புயத்தாள்!

"எனைக்கொன்றிடாத ஈட்டி
இனிக்கொல்லக் கூடும்!'' என்ற
நினைப்புடன் உடல் நடுங்க
நின்றதம்பிரான் புகல்வான்;
"மனைபற்றி எரிக்கும் தீயை
மங்கையீர் அவித்து மக்கள்
அனைவரும் வாழச் செய்தீர்!
அறம்செய்தீர்! புகழைப் பேற்றீர்!

"அதுமட்டு மன்று! தீயேன்
அனலிடை வீழா வண்ணம்
எதிர்வந்து காத்தீர்! என்றும்
இந்நன்றி மறவேன்; எங்கே
புதைக்கலாம் இப்பிணத்தை?
விரகொன்று புகல்வீர் நீரே!
இதையாரும் அறியாவண்ணம்
நெஞ்சத்துள் இருத்தல் வேண்டும

எனச்சொன்ன தம்பிரானைத்
தாமரை இனிது நோக்கி,
"இனிஇந்தப் பிணத்தை இங்கே
எவருமே அறியா வண்ணம்
தனிக்குழி தோண்டி இன்றே
புதைப்பதே தகுதி யாகும
எனச்சொன்னாள். இதே நேரத்தில்
சில்லியும் கதவிடித்தான்.





( 35 )




( 40 )




( 45 )





( 50 )




( 55 )







( 60 )




( 65 )





( 70 )





( 75 )




( 80 )





( 85 )




( 90 )





( 95 )





( 100 )




( 105 )





( 110 )





( 115 )




( 120 )





( 125 )




( 130 )




( 135 )





( 140 )




( 145 )

பிரிவு -- 64

(சில்லியால் மேல் நடக்க இருப்பவைகளை அறிந்து
கொள்ள முடிந்தது தாமரையால்.)

(அகவல்)

தையலாரும் தம்பிரானும்
விநோதை உடலை வேறுபுறத்தில்
மறைத்துச் சில்லிக்கு வரவேற்பளித்தனர்.
சில்லி செப்பு கின்றான் -- செழியன்
விநோதையை வெறுத்து விட்டான். மன்னன்
அவளை மாய்ப்பதே நோக்கமாய் அலைந்தான்.
வெறுப்புச் சுமந்த விநோதை இனிமேல்
இறப்பைச் சுமக்க நேரும் என்று
மறைவினில் வாழுகின்றாள். அவளைத்
தேடுதல் நம்கடன்: தேடிக் கொன்று
போடுதல் நம் கடன்:'' என்று புகன்றான்.

தம்பிரான் பேசத் தொடங்கினான், தாமரை
இடைமறித்தே இயம்பலானாள்;
"செழியனை விநோதை சேர்ந்தாள் என்று
மன்னர் எண்ணினார், மாய்க்க நினைத்தார்,
விநோதை மன்னனை நோக்கி, வீணாய்
என்றன் கற்பில் இழிவைச் சுமத்தினர்.
சிவபெரு மானின் திருவா யாலிதை
மெய்ப்பிக் கின்றேன்' என்று விளம்பினாள்,
'அப்படி யானால் ஒப்புவேன்' என்றே
அந்த அறிஞரும் அறிவித்து விட்டார்!

'கடலோரத்து மலைக்கோயிலிலே
அரசர் வருவார்; அவருடன் விநோதை
வருவாள், சிவனை நோக்கி மன்னர்,
'விநோதையின் கற்பில் வேறுபாடுண்டா?
என்று கேட்பார் சிவன்பதில் இசைப்பான்?
கற்புக் கெட்டதாய்ச் சிவனே உரைத்தால்,
அரசர் விநோதையை அங்ஙனே கொல்லுவார்.
இவையே இன்று நடக்க இருப்பவை.
விநோதை மறைவாய் இருப்பதாய் விளம்புதல்
சரியே இல்லை தனித்தோர் இடத்தில்
தையலிருந்து தவம்புரி கின்றனள்.

இன்று மாலை கோயிலில் இருப்பாள்,
சிவனும் தையல் பாங்கில் இருப்பான
என்று தாமரை இயம்பிய அளவில்,
சில்லி கலகல வென்று சிரித்தான்.
அன்னவன் அவர்பால் அறிவிக்கின்றான்;

"வாழ்நிலை மாற்றுதற்குச் சூழ்நிலை
ஏற்றதாயிற்றென் றெண்ணி மகிழ்ந்தேன்.
மங்கை இனியும் மன்னனை ஏய்த்து
வாழஓர் வகையும் வகுத்துக் கொண்டாள்.
தீந்தமிழ் கொல்லச் சிலபார்ப்பனரும்,
குறிஞ்சி கொல்ல விநோதை ஒருத்தியும்,
போதும் என்பதில் ஏதும் பொய்யில்லை!
தமிழும் குறிஞ்சியும் தழையப் பார்ப்பும்
விநோதையும் வீழ்ச்சி அடைதல் வேண்டும்!
தம்பிரானாரே! தாமரை அம்மையே!
அம்புயத்தாரே! அறிக, இதனை;
உருவிலான் எங்கும் உள்ளான் பெயரிலான்
சிவன்நான் என்றா செப்புவான் இங்கு?

மேலும் அன்னவன் விநோதை பங்கில்
காலும் வைப்பானோ கடுகள வேனும்?
குறிஞ்சி மன்னர்க்கு அறிவிருந்ததா?
விநோதையும் கற்பும் மேற்கும் கிழக்கும்!
விநோதை கற்பில் ஐயம்வி ளைந்ததாம்!
ஆளிலாப் போதில் அகப்பட்ட என்றன்
காளைபாற் காமம் தீர்ந்து கையுடன்
என்மகன் சாக மருந்து இட்டுக்
கொன்று கொல்லையில் போட்ட கொடியாள்!
சேந்தனும் சில்லியும் தவிர மற்றையோர்க்கு
மங்கை யுடம்பு வாடகை வீடே!
நாட்டின் வேரிற் புகுந்த கேட்டை
எண்ணி எண்ணி அழுதுகொண் டிருப்பதால்
பயன் என்? பகையின் முதுகெலும் புடைத்து
வரும்சாக் காட்டையும் வரவேற்க வேண்டும்!

உயர்பண் புடையீர்! நீங்கள்ஓர் உதவி
எனக்குப் புரிதல் இன்றியமை யாததாம்
என்கையால் விநோதையைக் கொல்வேன் என்றே
அன்றொரு நாள்நான் அறைந்த சூளுரை
நிறைவே றும்படி நீவிர் எல்லீரும்
தருதுணை புரிகெனத் தலையால் வணங்கினேன்,
மீளா விடைபெற்றுச் செல்லு கின்றேன்.
இன்று மாலை குறிஞ்சியின்
வென்றி விளக்கேற்றுந்திரு நாளே!''

(வேறு) (அறுசீர் விருத்தம்)

இவ்வாறு சில்லி சொல்லி
ஏகினான் உயிர் வெறுத்தே.
அவ்வெழில் தாமரைதான்
அம்புயம் காதில் ஏதோ
செவ்விதின் உரைத்துச் சென்றாள்!
சென்றது காலைப் போதும்
எவ்வாறோ அறிந்தார் நாட்டார்
ஏகுவார் கடலின் ஓரம்!







( 150 )




( 155 )





( 160 )




( 165 )





( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )




( 195 )





( 200 )




( 205 )




( 210 )





( 215 )




( 220 )







( 225 )

பிரிவு -- 65

(செழியனின் அறிவுரையும் மறைவும்)


(எண்சீர் விருத்தம்)

முப்புறத்தும் தரைசூழக் கீழ்ப்புறத்தில்
ஆழத்துக் கடல்வெள்ளம் முழக்கம் செய்யக்
கப்புகின்ற முகிற்கூட்டம் தவழும் உச்சிக்
கடலோர மலைக்கோயில், குறிஞ்சித் திட்டில்
இப்போது கட்டியது விநோதை யாலே
இக்கோயில் உட்பரப்பும் எட்டுக் கோலே
கைப்புறத்துப் பிள்ளை யோடும் கணவரோடும
மங்கைமார் கணக்கற்றோர் சூழ்ந்தார் அங்கே!

இளைஞரெலாம் அங்குற்றார்; முதியரானோர்
எல்லோரும் அங்குற்றார்; மலைக்கோயிற்கண்
விளைவொன்று பெரிதென்று விரைந்து சென்றார்.
"வேந்தனுக்கே இறுதிநாள்! ' என்றோர் சில்லோர்.
"களைநீக்கிப் பயிர்காக்கும் கால" மென்று
களிப்புற்று நடந்தார்கள் பலபேர். "காலில
தளையிட்டாள் குறிஞ்சிக்கே விநோதை! அன்னாள்
சாகாளா, வாழாமோ!" என்றார் பல்லோர்.

எள்விழவும் இடமில்லை மலைக்கோயிற்குள்!
ஏறுகின்ற படியெல்லாம் நிறைந்தார் மக்கள்!
கொள்ளாத பெருமக்கள் அடிவாரத்தும்
குவிந்தார்கள். அப்போது திரைய மன்னன்,
தள்ளாடிப் பலர்சுமக்கும் சிவிகை தன்னில்
தனியாகச் செல்கின்றான் மலைமேல்; தூண்டும்
உள்ளாவலாற்செழியன், அமைச்சன் மற்றும்
உள்ளாரும் சிவிகையிலே ஏறிச் சென்றார்.

"திருக்கோயிற் கருவறைஏன்திறக்க வில்லை?
சிவனார்க்குப் பூசைஏன் தொடங்க வில்லை?
குருக்களெங்கே? இதுவென்ன கொடுமை!" -- என்று
குதிக்கின்றான். மன்னன்வரக்கண்ட ஓர் ஆள்,
வரிப்புலிபோல் அவண்பாய்ந்த மற்றும்ஓர் ஆள்
"வராததென்? நம் அரசி?" -- என்று கேட்டான்.
கருவறையைத் திறந்திட்டான் திரைய மன்னன்!
கண்டதென்ன? தெற்கடியில் வடக்கைக் கண்டான்.

தெற்கணத்துச் சிவனெனும்அப் படிவத்தின்கீழ்
விநோதையினைச் சிறுபிணமாய்த் திரையன் கண்டான்.
மற்றும்ஒரு முறைநோக்கி, "விநோதை!" என்றான்.
வாள்எடுத்தான். "இதுசெய்தான் யாவன்?" என்றான்.
"கற்பழிக்க எண்ணிநீ செழியா உன்றன்
கைவரிசை காட்டினாய் பெண்ணிடத்தில்!
சொற்படிசெய்! விநோதையினைக் கொன்ற வாளைத்
தூக்கிக்கொள்; நின் என்முன்!" என்று சொல்லி,

மாச்செழியன் நின்றிருந்த இடத்தை நோக்கி,
அடிபெயர்த்து வாளோச்சு கின்றான் தன்னை
"நாய்ச்சிறுநா உன்கைவாள்! அறமிலாத
நரிப்புறங்கால் வீச்சேஉன் வாளின் வீச்சு!
போய்ச்சிறிது புறத்தேநில எனவாள் பற்றிப்
பொதுக்கெனவே இடைமறித்தே அமைச்சன் நின்றான்.
"வாய்ச்சதுநம் சூள்முடிக்க நேரம்!' ஏன்று
மேலெழுந்த மக்களையும். "பொறுப்பீர என்றான்.

நல்லமைச்சன் இதுசொல்லத் தாமரைபோய்.
"நான்கொன்றேன்; மன்னவனே எனைக்கொல்!" என்றாள்.
"இல்லாத கற்பவள்பால் இருப்பதாக
யார்சொன்னார் உமக கென்றாள். குமுதம் என்பாள்;
வல்லவன்ஓர் நாற்காலி தூக்கி வந்து,
"மக்களுக்குத் தலைவரே அமர்க!" என்று
சொல்லிப்பின் செழியன்தோள் தொட்டிழுத்தான்.
"நான்தலைவன் அல்லன்!" என்று செழியன் சொன்னான்.

"செழியனார் இவ்வாறு செப்ப லாமோ?"
எனக்கேட்டான் நெடுமாறன்! "பாம்புக் கூட்டம்
ஒழிவதுதான் எவ்வாறு விட்டு வைக்க
ஒருகணமும் ஒப்பார்கள் குறிஞ்சி மக்கள்.
மொழிஒன்றே! ஆம்என்க தலைவர்! தீமை
முற்றும்தூள்!" எனத் துடித்தான், வேலன் என்பான்.
வழிசெய்வேன் பொறுப்பீர என்று செழியன்
சொன்னான்.

மாலடியார், சிவாநந்தர், சிவசம்பந்தர்.
வெளிச்செல்ல முயலுவதைச் சில்லி கண்டு,
"வேந்தர் தமை விட்டுப்போகாதீர என்றான்.
கிளிப்பேச்சுத் தாமரையை நோக்கி அன்னோன்
கிளத்தினான்; "விநோதையைநீ எதற்குக் கொன்றாய்?"

அளித்திட்டாள் அவளும் விடை: "நீ கேட்காதே."
"அம்மையே நான்கேட்க உரிமை உண்டு;
துளிப்பேச்சுத் தவறாமல் உன்னிடத்தில்
சொல்லியுள்ளேன்: என்மகனை அவ்விநோதை.

"வலிதிழுத்துப் புணர்ந்தபின்பு நஞ்சு தந்து
மாய்த்தாளே! என்கையால் அத்தீயாளைக்
கொலைசெய்யக் காலம்பார்த்திருந்தேன்; நீயே
கொன்றாயே? என்கொள்கையும்கொன்றாயே.
எலிஒன்று குண்டான்சோறு ருட்டக் கண்டும்
எலிப்பிழுக்கைக் காகக்காத் திருந்த இந்தப்
புலிச்செழியர் போல்நீயும் பொறுத்தாலென்ன!
விநோதையவள், அன்றன்று புதுமணப் பெண்!

"வடநாட்டிற் பலர்முகர்ந்த மல்லி கைப்பூ!
வழிப்போக்கர் உமிழ்வட்டில் சென்னை தன்னில்,
நடையறிந்தும் அவற்றையெல்லாம் பொறுத்தா ரன்றோ
நம்மன்னர்! குறிஞ்சியிலே நுழைந்த அந்தக்
கடைச்சரக்கோ, 'செழியனைப்போய் மணப்பேன்'
என்றாள்.
எடுத்தாரா தமிழரசர் கையில் வாளை?
இல்லையே! செழியனைப்போய் மணந்த அன்றே
இதழ்விற்றுத் தான்பெற்ற எச்சில் ஈரம்

காயுமுன்பு காரிருளில் வேந்தை நோக்கிக்
கடிதோடி 'நெஞ்சை நனை' என்றதோடு,
தீயன்அவன் செழியன்எனைத் தீண்ட வந்தான்;
திருமார்பே துணையாக ஓடி வந்தேன்
தோய்க்கவே நல்லின்பன்' என்னும் போதே
தொடர்ந்துவந்து கேட்டிருந்த செழிய வீரர்
மாயும்வகை செய்தாரா? அதுபோல் நீயும்
மாய்க்காமல் இருந்திருந்தால் நல்ல" தென்றான்.

ஆழிஇந்தா நெடுமாறா! தலைவன் நீதான்;
அறிவிழந்தேன்; அறமறந்தேன்; சேந்தன் என்றன்
தோழன், இந்த நாட்டுக்கே தனித்தலைவன்.
தொலையும்வகை செய்தாளின் தோளைத் தொட்ட
கோழைநான். இந்நாட்டின் பண்பா டெல்லாம்
கொன்றாளைக் கொல்லாமல் விட்டேன். நாட்டின்
பீழைநான். என்பிழைகள் பொறுக்க வேண்டும்.
பெரியோரே தாய்மாரே இன்னும் ஒன்று;

'அயலவன் உறவினன் ஆகான்; உறவினன்
அயலவன் உறவுபெற் றானெனில், அவனை
உறவின னாக உரைத்தலும் தீதே.
தமிழனும் தமிழும் தணலும் சூடும்.

அமிழ்தமே ஆயினும் அயல்மொழி அயல்மொழி!
அயல்மொழி தமிழை அண்டும் விழுக்காடு.
தமிழ்மொழி தாழும்! தமிழன் தாழ்வான்!

தமிழை வடமொழி தாவும் நோக்கம்
தமிழை அழிப்பதும் தான்மேம் படுவதும்!
வடமொழி அதனின் வழிமொழி எதுவும்
தமிழ்மேல் சந்தனம் தடவவே வரினும்,
ஒழித்து மறுவேலை உன்னுதல் வேண்டும்.
தமிழ்தமி ழினம், தமிழிலக்கியம் இவற்றில்
ஒன்று போம்எனில், மற்றவும் ஒழியும்.
நாட்டின் உரிமை காத்தல் வேண்டும்.

உரிமை இழந்த ஒருகிளிக் குஞ்சுக்குக்
கனியும், வெளியும் காட்டி, 'எதுவுனக்குத்
தேவை?' என்றால் சிறகடித்து வெளியில்
செல்லவே துடிக்கும்! சின்ன மக்கள்
அடிமை வாழ்வின் இழிவை அறிந்தும்,
விடுதலை வேண்டா திருந்தனர் என்றால்,
மண்ணில், பொன்னில், பெண்ணில் அவர்மனம்
அடியுறப் புதைந்தது காரணம் ஆகும்!

மனங்கவர் பொருளாம் மங்கையை ஒருவன்
ஆன்ற ஒழுக்கொடும் அறிவொடும் அணுகுக.
ஆடவர் பெண்எனும் அழகுக்கு அழகுசெய்து
ஒளிபெறச் செய்வதில் அளவு வேண்டும்.
அணங்கொடு மக்களை அனுப்புவோன். சொன்னான்:
கலைத்தொண்டு செய்வதாய் -- கலப்பிலாப் பொய்இது.
கலையன்று வாழ்க்கை. அறிவிற் கமழ்வதே!
கலையின் உண்மை நிலையினைக் காணின்
கலைக்கும் பொய்மையே கடைக்கால் என்க.

கோனாட்சி, குடிக்கோனாட்சி, மற்றும்
குடியாட்சி என்று முறைபல கூறுவர்.
திரையன் செழியன் செல்வாக் குடைய
எல்லா ஆட்சியைப் பார்க்கிலும், இங்கே
அறிவும் ஆற்றலும் ஒழுக்கமும் ஆர்ந்த
மக்களின் உள்ளம் கவரத் தக்கோன்
இட்டதே சட்டம் என்னுமோர் ஆட்சியே
விழுந்த குறிஞ்சிக்கு வேண்டும் இந்நாள்."
இவ்வாறறிவுரை நீள இயம்பி,
விரைந்து கிழக்குப் புறத்தை மேவிப்
பருந்தெனப் பறந்த செழியன் பருவுடல்
ஆழக் கீழ்க்கடல் ஆழ்ந்தது,
"வாழகெனக் கதறினர், குறிஞ்சி மக்களே!



( 230 )




( 235 )





( 240 )





( 245 )




( 250 )





( 255 )




( 260 )





( 265 )





( 270 )




( 275 )





( 280 )





( 285 )




( 290 )




( 295 )





( 300 )





( 305 )





( 310 )




( 315 )





( 320 )




( 325 )





( 330 )





( 335 )





( 340 )





( 345 )





( 350 )




( 355 )





( 360 )




( 365 )





( 370 )




( 375 )

பிரிவு -- 66

(செழியன் இவ்வாறு கடலில் வீழ்ந்து இறந்தான்.
திரையனும் அமைச்சனும் கூறுதல்.)


(அறுசீர் விருத்தம்)

"என்னநீ எண்ணு கின்றாய்?
திரையனே!" என்று கேட்ட
தன்அமைச்சனையும் மக்கள்
தம்மையும் நோக்கி, "நாட்டை
நன்னிலைப் படுத்து தற்கு
நான்மாள வேண்டும்!" என்றான்.
சொன்னதோர் சொற்புகழ்ந்தார்!
தொல்பிழை எலாம்மறந்தார்.

மக்களின் உள்ளம் கண்ட
அமைச்சன்கொள் மகிழ்ச்சி சொல்லத்
தக்கதோ! அவனுரைப்பான்:
"திரையனே, சென்னை சார்ந்தாய்.
இக்குற்றம் பெரிதன்றேனும்,
சென்னையை இவண்கொணர்ந்த
அக்குற்றம் பெரிதே அன்றோ?
அறத்தையே நடுங்கச் செய்தாய்.

"பரத்தையின் வலையில் வீழ்ந்தாய்
அவள்நோக்கம் பார்த்த பின்னும்
துரத்தினாய் இலை; மணந்த
தூயாளைத் துன்பத் தீயில்
பொறுத்தினாய் அன்பு டம்பின்
பொற்றுகள் ஒவ்வொன் றாக
உருக்குலைந்து உருகிச் சாகக்
கண்டனை உவப்பில் ஆழ்ந்தாய

இதுகேட்டான் திரையன்; நின்றோன்
உட்கார்ந்தான் தரையில்; "என்றன்
மதிஎன்னே? ஒழுக்கம் என்னே?
மன்னனும் நானோ?" என்று
முதியோனின் கருத்தில் ஆழ்ந்து,
முகம்நாணித் தளர்ச்சி எய்தி,
"கொதிக்கின்றேன், பழிசுமந்தேன்.
கொல்லீரோ என்னை!" என்றான்.

வாய்ந்தசீர் அமைச்சன் மேலும்
மன்னனை நோக்கிச் சொல்வான்;

"மேய்ந்தவள் பல்லோர் மார்பை
மேய்ந்துமேய்ந் துடம்பு நாளும்
தேய்ந்தவள் சொல்லைக் கேட்டுத்
திறற்புலி அறத்துச் செம்மல்
சேந்தனைச் சாகச் செய்தாய்!
செயத்தக்க செயலோ ஐயா?"

நிலைசாய்ந்த திரைய மன்னன்.
அமைச்சன்தான் இதுநி கழ்த்தத்
தலைசாய்ந்தான் சாகானாகித்
தாழ்குரல் தழுத ழுக்கக்
"கொலைசெய்வீர் என்னை!" என்று
கூப்பினான் செங்கை; கண்ணீர்
அலைகண்ட மக்கள் யாரும்
செழியனை அகத்துட் கண்டார்.
ஓதுவான் அமைச்சன் மேலும்;
"ஒன்றென நின்ற குன்றை

மோதிப்பல் கூறு செய்ய
எண்ணினும் முடிக்கும் தீய
சாதியால் தமிழர் கோட்டை
தகர்த்திடும் சழக்கிச் சொற்குக்
காதீந்தாய்! பறவைக் கூட்டைக்
கலைத்திடக் கோலும் ஈந்தாய்!

"மழையில்லை விளைச்சல் இல்லை
மக்கட்குக் கட்டப் பஞ்சின்
இழையில்லை கருவூலத்தில்
ஒருகாசும் இல்லை. உண்ணத்
தழையில்லை காட்டில்! சாவத்
தடையில்லை. வரவே யில்லை.
விழவில்லை உன்றன் காதில்
ஏழைகள் விண்ணப்பங்கள்.

"இருந்தனை. இராம லில்லை;
இந்நாட்டார் துயருக் கெல்லாம்
மருந்தனை யான்நீ அன்றோ?
மறந்தனை! 'விநோதை வாய்நீர்
வருந்தேனே; எவர்மாய்ந் தாலும்
வருத்தேனே எனக்கி டந்தாய்.
எரிந்தனை இகழ்ச்சி பட்டே
புகழையும் இகழ்ந்த பாவி!"

என்றனன் அமைச்சன் ஆங்கே
இறந்தனன் திரைய மன்னன்.

நின்றுள சில்லி, "கம்பி
நீட்டிட முயலுகின்ற
புன்தொழிற் சிவசம்பந்தன்
முதலோர்க்குப் புகல்என்?" என்றான்
"சென்றிடு மாறு செய்க
சிறைக கென்றான் அமைச்ச மேலோன்.

(நெடுமாறன்தான் நல்லுரை நிகழ்த்துதல்.)

அகவல்

"அரசன் மனிதன்! மனிதன் அரசனா?
அரச பதவியும் மனிதனும் அரசன்.
ஆதலால்,
அரச பதவியை அழித்து மக்கள்
சரிநிகர் என்பதைச் சமைக்க வேண்டும்
விடாது பெய்த கனலில் வெந்தோம்
அடாது செய்தானை அழிக்கத் துணிகிலோம்.
ஏனெனில் அரசன்! எல்லாராலும்
மதிக்கத் தக்கவன்! என்ன மடமை!
அறிவு பெற்றோம்; ஆண்மை பெற்றோம்.
நெறியின் நின்றோம்: உணர்வு நிறைந்தோம்.
மக்கள் வாழ்க்கை வண்டியின் அச்சை
கைக்குள் வைத்துள மனிதன் கண்ணெதிர்
பசியாற் படுபிணம் தூக்க வலியிலா
நம்நிலை கண்டும் நடுக்குறாமல்,
'பொன்னே' என்றும், 'பூவே' என்றும்
பன்னி, அன்னவள் மாங்கில் இன்புறும்
மனிதனை அடக்க வல்லமை இழந்தோம்.

மன்னன் அன்றோ! என்ன மடமை!
ஆலிலை அடுக்குமேல் அம்மிக் கல்லென
அரச பதவிஏன்? நாம்அவற் கடக்கமேன்?
அடங்கி அடங்கி அடங்கி அடங்கும்
ஆமை நிலைஏன் நமக்கு? மன்னற்குத்
தீமைசெய்து சிரிக்கும் நிலைஏன்?
தாவிய கொடுந்தீதானே நி்ன்றது.

நம்மால் ஒன்றும் நடக்கவில்லை.
சாவை விளைத்தவன் தானே மாண்டான்.
நம்மால் ஒன்றும் நடக்கவில்லை
நம்நிலை நகைக்கத் தக்கதன்றோ!
இந்நி லைக்குக் காரணம் என்ன?
அவனோர் அரசன் நாமெல்லாம் அடங்குவோர்'
எனநெடு மாறன் இயம்பி, மேலும்
அமைச்சன் முன்னே அறைதலுற்றான்;

"நல்லதோர் திட்டம் அமைத்தல் நம்கடன்.
அல்லன அனைத்தும் அழித்தல் நம்கடன்.
செல்வம் நாட்டிற் சேர்ப்பது நம்கடன்,
செந்தமிழ் காத்தல் சிறந்த கடன் நமக்கு.
மதம் அகன்ற சாதி மறைந்த
அரசு கடந்தஓர் வாழ்க்கை அமைப்பது
நம்கடன்! குறிஞ்சித் திட்டு
செம்மை எய்துக!" என்றான்.
மெய்மை வெல்க!" என்றார் மக்களே!





( 380 )




( 385 )





( 390 )




( 395 )





( 400 )





( 405 )




( 410 )






( 415 )





( 420 )




( 425 )





( 430 )




( 435 )





( 440 )





( 445 )




( 450 )






( 455 )





( 460 )







( 465 )




( 470 )




( 475 )





( 480 )




( 485 )





( 490 )





( 495 )




( 500 )