தலைவி
இதுதான் தைத் திங்கள்
எனக்கடல் மேல் வந்த
புதிய இளங்கதிர்,
பொன் அத்தான். பொன்! பொன்! பொன்!
தலைவன்
ஆம் ஆம் என் அன்பின்
உருவே அது ''சுடர்ப் பொன்''
நீர்மேல், நிலமேல்
நிழல் தரும்பூஞ் சோலைமேல்,
உன்மேல் தனதொளியை,
வீசி உளத்திலெல்லாம்
அன்பின் எழுச்சியினை
ஆக்கியது, வாழ்க கதிர்!
காலை மலர்ந்ததுவே
கண்ணேநான் சென்று, வயல்
வேலை தொடங்கி
விளைச்சல் அறுத்துவந்தே
இந்நாளில் இந்தா
எனக்கொடுக்கச் செல்கின்றேன்
பொன்னே புனலாடி
இல்லம் புதுக்கிடுநீ!
தலைவி
செல்வப் பரிதி
சிரித்துவந்த தைக்கண்டீர்
கொல்லைக் கொடிகள்
குலுங்கச் சிரித்ததுபோல்
காலை மலர்ந்ததையும்
கண்டீர்-விரைந்துவயல்
வேலை தொடங்கி
விளைச்சல் அரிந்தரிக்
கட்டடித்துத் தூற்றியொரு
கட்டைவண்டி மேலேற்றிப்
பட்டபெரும் பாட்டின்
பயனிந்தா என்பீர்; பின்
உள்ள மகிழ்ந்துங்கள்
உழுதோளை நான்தொழுது
வெள்ளத் தெடுத்து
விடிவெள்ளி போலரிசி
அக்கிநல்ல பானையிலே
ஆவின் தனிப்பாலைத்
தேக்கி அதிலிட்டுச்
செங்கரும்பின் கட்டியிட்டு
''திங்களோ தைத்திங்கள்''
''செந்தமிழே தாய்மொழியாம்''
''பொங்கலோ பொங்கல்'' எனப்
பொங்கிவர புத்துருக்கு
நெய்யும் பருப்பும்
நறும்பொடியும் நேர்கொடுத்து
மெய்யன் பினோடு
தமிழர் விழாவாழ்த்திப்
பானை இறக்கிப்
பலபேர்க் கிலையிட்டுத்
தேனைப் பழச்சுவையைக்
சேர்த்துப் படைப்பேன்,
எடுத்து நீவிர் அதை
என்னவென்று சொல்வீர்?
தலைவன்
அடடா! இப் பொங்கல்
அமிழ்தமிழ் தென்பேன் நான்.
தலைவி
அப்பொங்கல் தன்னை
அமிழ்தென்று சொல்வதுண்டோ?
ஒப்புவாரோ பொங்கல்
அமிழ்தென் றுரைத்துவிட்டால்?
தலைவன்
ஆமாம்நான் சொல்வேன்
அமிழ்துதான் அப்பொங்கல்
தீமை என்ன?...
தலைவி
...தீமைஒன்றும் இல்லைஅத்தான்
நீங்கள் உண்ணும்
பொங்கலா அத்தான்
அமிழ்து? புகலுங்கள்.
தலைவன்
பொங்கல் அமிழ்துதான்.
பொய்யில்லை, கட்டி
கரும்பும் அமிழ்து;
கனி அமிழ்து; முல்லை
யரும்பமிழ்து; தேனமிழ்து;
அப்பம் அமிழ்து
குழந்தை குதலை
மொழியமிழ்து; குன்றாப்
பழந்தமிழும் பாட்டும்
அமிழ்து; தமிழ்ப்பண் அமிழ்து;
திங்கள் அமிழ்து;
திகழ்ஆவின் பாலமிழ்தே!
இங்கெனக்கு நீ அமிழ்து
நானுனக் கெப்படியோ?
வாய்மை அமிழ்து;
மடிசுமந்து பெற்றுவக்கும்
தாய்மை அமிழ்து.
தனிஇன்ப வீடமிழ்து
தென்றல் அமிழ்து, நறுஞ்
செவ்விள நீரமிழ்து,
ஒன்றல்ல எல்லாம்
அமிழ்தென் றுரைக்கலாம்.
தலைவி
ஏன் அத்தான்? எல்லாம்
அமிழ்தென்றல் அந்தச்சொல்
ஏன் அத்தான்? ஏதோ
அமிழ்தொன் றிருக்கும்.
தலைவன்
உயர்ந்த பொருட்கெல்லாம்
உயர்வு குறிக்க
உயர்ந்தோர் அமிழ்தை
உரைப்பார்கள் பெண்ணரசி
தலைவி
பேர்இருந்தால் பேர்குறிக்கும்
அந்தப் பொருள் இருக்கும்
ஆரிடத்தில் இந்த
அளப்பை அளக்கின்றீர்
எது அமிழ்தத்தான்?
எனக்கதைச் சொன்னால்
புதுநாளில் இன்பநறும்
பொங்கலுண்ணு முன்னரே
நல்ல அமிழ்துதனை
நான்கண்ட தாகாதா?
சொல்லுவீர் அத்தான்
அமிழ்தெது?
தலைவன்
...மானே
புதுநெல் அறுத்துவரப்
போம்போது நீயோ
எதுதான் அமிழ்ததனைச்
சொல்வீர் எனக்கேட்டாய்
அப்படியே உன்றன்
அருட்படி ஆகட்டும்நான்
செப்புவதை உற்றுக்கேள்
தித்திக்கும் தேனே அமிழ்தென்றால் மேலநின்
றமிழும் உணவாம்.
'அமிழ்' என்றும் 'து'வ்வென்றும்
சொல்இரண்டுண் டத்தொடரில்.
அவ்வளவுதான் இப்போ
தேனும் அறிந்தாயா?
இவ்வளவோ டென்னைநீ
விட்டிடுவாய் ஏந்திழையே!
தலைவி
இல்லையத்தான் ! மேல்நின்
றிறங்கும் உணவென்று
சொல்லிவிட்டால் போதுமா?
ஒன்றுமே தோன்றவில்லை,
மேலிருந்து தான்விழும்
விளாம்பழமும்; அஃதமிழ்தா?
மெலான தாய்இருக்க
வேண்டும் அமிழ்து?
தெரிந்து கொள்ளக்
கேட்டேன் தெரிவித்தா லென்ன?
தலைவன்
சரி 'என்றன் கேள்விக்குச்
சற்றே விடைபுகல்வாய்!
அவ்வானத் தேஇருந்து-அ
மிழ்ந்து வருவதெது?
இவ்வுலகுக் கின்பம்
பொதுவாக ஈவதெது?
கண்ணுக் கெதிரில்
கடகடென வீழும், அதை
எண்ணிப்பார் இன்னதென்று
தலைவி
வானத்தி லேயிருந்து
வானூர்தி தான்அமிழும்
வானுர்தி அஃதா?
சிரிப்பு வருகிற தத்தான்.
தலைவன்
தேனேஎன் செல்வமே
செப்புகின்றேன் நீகேட்பாய்
ஆனதமிழ்ச் சானறோர்
அருளியஓர் செய்யுள்இது;
''மாமாழை போற்றதும்
மாமழை போற்றதும்
நாமநீர் வேலி
உலகுக் கவனளி போல்
மேல்நின்று தான்சுரத்த
லான்'' என்றிளங்கோ
தானுரைத்த செய்யுள்
தரும்பொருளைக் கண்டுகொள்வாய்.
தலைவி
அச்சோ ! மழைதான்
மழையேதான் அத்தான்
இச்சேதி இப்போது
தானத்தான் நானறிந்தேன்.
தலைவன்
தேனான இன்பச்
சிலப்பதி காரத்திலே
''மேல்நின்று தான்சுரத்த
லான்'' என்று விண்டதனால்,
வான்நின் றமிழும்
மழைதான் அமிழ்தென்று
நீநன் றறிந்தாயா?
நேரிழையே இப்போது?
தலைவி
நன்றாய் மழைதான்
அமிழ்தென்று நானுணர்ந்தேன்
ஒன்றிருக்க வேறொன்றில்
ஓடிற்றென் நெஞ்சம்
அருகில் இருக்கும்
மழை அமிழ் தென்று தெரியவில்லை; சொல்லத்
தெரிந்துகொண் டேன். ஆனால்
மழைதான் அமிழ்தென்றால்,
மக்கள் அதனைப்
பிழைதான் எனச்சொன்னால்
என்னபதில் பேசுவது?
தலைவன்
''வானின் றுலகம்
வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற்
பாற்'' றென்று சாற்றிய
வள்ளுவர் பாட்டை
வகையாகச் சொல்லி, அதற்
குள்ளக் கருத்தைஉரை
அதையும் கேட்பாய்
அமிழ்தென் றுணரும்
அருமை மழைக்கே
அமையும் எனஉரைத்தார்
வள்ளுவரே அல்லவா?
கண்டவைஎல் லாம்அமிழ்தே
என்று கதைப்பேசிக்
கொண்டிருப்பார் பேதமையைக்
கண்டேஇவ் வாறுரைத்தார்.
தலைவி
சாவா மருந்தென்று
சான்றுகின்றாரே, அஃதென்ன?
தலைவன்
சாவா மருந்து
தனியல்ல இவ்வமிழ்தே!
வான்பெய்து கொண்டிருக்கும்
ஆதலினால் மண்ணுலகம்
தான்சிறக்கும் என்றுகுறள்
சாற்றியதைக் கேட்டாயே.
தலைவி
ஐயம்இன்னும் கேட்பேன்
அதற்காக நீங்களென்னை
வையக் கூடாது...
தலைவன்
...மயிலே வைவேனா?
தலைவி
அமிழ்தா? அமுதா? அமிழ்தமா? இன்னும்
அமுதமா? இங்கிவைகள்
அத்தனையும் ஒன்றா?
தலைவன்
அமிழ்தே 'அம்' சாரியையும்
ஆன திரிபும் பெற்று-
அமிழ்தம், அமுதம்
என்றாகும் பெண்ணே.
தலைவி
அமிர்தம்என் றாலென்ன?
தலைவன்
...அதுவா?
அமிர்தக் கதையை
அறிவிக்கின் றேன்கேள்நீ;
தேவர் அசுரரெல்லாம்
சண்டையிட்டுச் செத்திடுவார்
சாவைத் தடுக்கஓர்
அம்ருதங் கடைவதென்று
திட்டமிட்டார். சேடன்
கயிறாக மேருமலை
இட்டமத் தாக்கி
இருந்ததிருப் பாற்கடலைச்
சேர்ந்து கடைந்தார்கள் தேவர் அசுரரெல்லாம்
ஆர்த்து வெளிப்பட்டதே
அம்ருதமென் பார்கள்.
தலைவி
அமிழ்துதனி, அம்ருதம்
அஃதொன்றா அத்தான்?
தலைவன்
அமிழ்துவேறு அறம்ருதம்வேறு
அறல்லவா பெண்ணே?
தலைவி
இரண்டும்சா வைத்தடுப்ப
தென்றீர்நீ ரே; பின்
இரண்டும் தனித்தனி
என்றுரைத்த தென்ன?
தலைவன்
இரண்டும்சா வைத்தடுப்ப
தென்றாலும் அந்த
இரண்டுக்கும் வேறுபா
டில்லாமல் இல்லை.
உணவால் உயிர்நிலைக்கும்
ஆகவே பெண்ணே
உணவுக்கும் எல்லா
உயிர்க்கும் ஆதாரம் மழை
அத்தேவர் இன்னுயிரும்
அவ்வமிழ்தா லேஅமையும்
அத்தேவர் அம்ருதத்தின்
முன்பு அமிழ்துண்டு.
பெரிதுல கோடு
பிறந்த தமிழமுது;
கிரேதா யுகத்திற்
கிடைத்ததுதான் அம்ருதம்
தேவர்க்கு மட்டும்
திரட்டியதே அம்ருதம்
யாவர்க்கும் ஆதிமுதல்
எங்கும் அமிழ்துயிர்.
தலைவி
அத்தானே நான்ஓர்
அறிஞர் துணைவியன்றோ!
இத்தனைநாள் நானே
அதனை அறியேன்.
மழையே அமிழ்து
மழையே உலகை
அழியாது காப்பாற்றும்
அப்படி இருக்கையிலே
ஏனிதனை யாரும்
வெளிப்படையாய்ச் சொல்லவில்லை?
தலைவன்
மானேநாம் வள்ளுவர்தாம்
வாய்விட்டுச் சொன்னாரே?
தலைவி
பின்னாள் புலவரிதைப்
பேசுவதே இல்லைஅத்தான்
தலைவன்
பொன்னே புதிய
அமிர்தொன்று வந்ததிங்கே!
பூட்டாத வீட்டில்
புதிதாய் நுழைந்தவர்க்கே
நாட்டார் சலுகையெல்லாம்
காட்டுவார். வீட்டில்
இருந்தார் இருளில்
இருப்பார்கள். வந்த
விருந்துக்குத் தாமே
விடிவிளக்கு வைப்பார்கள்?
என்று அமிழ்துண்டு இதன் பெருமை உண்டு; மற்
றொன்றும் அமிழ்தென்று
போட்டியிட் டோடிவந்தால்,
நாட்டார் நினைவிலது
நாலுநாள் கூத்தாட
மாட்டாதா? ஆனாலும்
உண்மை மறையாது.
தலைவி
ஆமத்தான்! ஆமத்தான்.
ஆனால் மழைஎ னும்பேர்
நாமும் அறிவோம்; நம்
நாட்டாரும் தாமறிவார்
அந்தப் பெயர்தான்
இருக்க அமிழ்தென்ற
இந்தப் பெயர்ஒன்
றெதற்காக வீணாக?
தலைவன்
நன்று நகைமுத்தே
காற்றென்ற பேர்இருக்கத்
தென்றலென்ற பேர்ஏன்?
சிறப்புநிலை காட்டஅன்றோ?
நீர், தீ, நிலம், காற்று,
விண்ணென்ற ஐம்பொருளில்
நீரின் நிலைகேள்
முகிலென்றும் கொண்டலென்றும்
விண்ணென்றும் கார் என்றும்
மேலும் மழைஎன்றும்
அண்ணாந்து நோக்கும்
அமிழ்தென்றும் மாரியென்றும்
ஆயிரம்உண் டன்றோ?
அவற்றில் அமிழ்தென்னும்
தூய நிலைகருதித்
தோன்றியதே அப்பெயர்.
முற்றும்கேள்; வெப்பம்
முகந்தநீ ரேமுகிலாம்;
குற்றமறக் கொண்டநீர்
கொண்டல்; அக்கொண்டலோ
மேற்போய் இருந்தநிலை
விண்வான் விசும்பென்பார்;
காற்றால் கருமைப்பெறக்
காராகும்; கார்தான்
மழைக்கும் நிலையில்
மழையாம்; மழைதான்
தழைய அமிழ்உண
வாவது தான் அமிழ்து.
தலைவி
வாழ்வாருக் காக
வளங்கொழிக்க, அந்தநீர்
வீழும் நிலையில்அதை
மேலோர் அமிழ்தென்றரார்
என்று புகன்றீர்
இதிலோர் மனக்குறை;
என்னவெனில் இவ்வமிழ்தை
மேலான தென்றிருந்தேன்
இப்போ தமிழ்து
மழைதானே...
சப்பென்று போயிற்றுத்
தையலாள் என்றனுக்கே.
தலைவன்
செப்பிய உன்பேச்சில்
சிறப்பில்லை, என்கண்ணே.
தப்புக் கணக்கிட்டாய்
தாங்கும் மழையை
அமிழ்தின் பெருமை
அடுக்கடுக்காய்ச் சொன்னேன்.
அமிழ்தே மழைஎன்றேன்
அப்படியும் நீயோ
மழையின் உயர்வை
மதிக்கவில்லை. இந்தப்
பிழையை இளையவரும்
செயயாரே பெண்ணரசி!
எங்குர் உளதுமழை
தாங்கும் உலகுயிரைச்
சாவாது காக்கும்மழை.
அந்த மழைதான்
அளிக்குமோர் இன்பத்தைச்
செந்தமிழால் வள்ளுவரும்
நன்றாய் தெரிவித்தார்; ''வாழ்வார்க்கு வானம்
பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும்
அளி'' என்றார்! விள்ளக்கேள்
சென்று திரும்பிவந்து
சேர்ந்து-அவர் எனக் களிக்கும்
இன்பந்தான் எவ்வா
றிருக்குமென்றால், இவ்வுலகில்
வாழ்வார்கள் நல்ல
மழையென்றாற் போலிருக்கும்.
யாழ்மொழியே! அந்தக்
குறளின் கருத்திதுவே.
தலைவி
பாவையரின் உள்ளப்
படப்பிடிப்பே தானத்தான்
ஆவல்இனி ஒன்றே
அதையும் அகற்றுங்கள்;
இந்த மழைதான்
அமிழ்தென்ற எண்ணத்தில்
எந்தப் புலவர்
எழுதியுள்ளார் செய்யுள்?
தலைவன்
சிறந்தஒரு கேள்வியே
கேட்டாய், திருவே,
''உறுதோ றுயிர்தளிர்ப்பத்
தீண்டலாற் பேதைக்
க்குமிழ்தின் இறன்றன
தோள்'' என்ற பாட்டில்
க்மழும் கருத்தைநீ
காண்பாய்-உயிர் தளிர்க்கத்
தீண்டினாள் தன்துணைவி.
அன்னதற்குக் காரணம்அம்
மாண்புடையாள் தோளேயாம்.
அத்தோள் அமிழ்தம்.
தளிர்க்கவைப்ப தியாது?
மழையன்றோ? அந்தக்
குளிர்மழையை அன்னார்
அமிழ்தென்றார்? கூறும்
அதனால் அமிழ்தை
மழைஎன்றே சொன்ன
மதியுடையார் சொல்லால்
மகிழ்ந்து நலமடைவாய்.
தலைவி
ஐயமே இல்லை
அமிழ்தே மழையத்தான்
வைய மழையே
அமிழ்தமிழ்து மெய்யாலும்!
அத்தான் எனது
மகி.ழ்ச்சிக் களவில்லை
முத்து மழைபொழிக
முத்தமுழ் நாட்டில்!
அமிழ்து பொழிக
அழகுதமிழ் நாட்டில்!
தமிழ்தான் தழைகவே
பொங்கலோ பாற்பொங்கல்!
தலைவன்
இன்றுபோல் என்றும்
மகிழ்ச்சி இலகுகவே
நன்று தமிழர்
நலிவின்றி வாழ்க தழைத்து!
அமிழ்தே அனையபாற்
பொங்கலோ பொங்கல்!
தமிழ்நாடு வாழ்க தழைத்து!
நான்பாட நினைத்ததெலாம் இதுதான்! அன்னை
நலங்காக்கக் கவிபாடும் உனைவ ணங்கித்
தேன்பாய்நின் செழுங்கவிதை மரபில் என்னைச்
சேர்த்துக்கொள் எனக்கேட்க வேண்டி வந்தேன் !
ஊன்பாய்ந்து, உயிர்பாய்ந்து, மணக்கும் உந்தன்
உயிர்கவிதை கண்டதனால் கவிஞ னாகி
நான்கண்ட கவிஞனெனப் பாட வந்தேன்
நாயகனே! நீவாழ்ந்தால் தமிழும் வாழும் !
-கவிஞர் கண்ணதாசன் |
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
( 210 )
( 215 )
( 220 )
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
( 330 )
( 335 )
( 340 )
( 345 )
( 350 )
( 355 )
( 360 )
( 365 )
( 370 )
( 375 )
( 380 )
( 385 )
( 390 )
( 395 )
( 400 )
( 405 )
( 410 )
( 415 )
( 420 )
( 425 )
( 430 )
|