பக்கம் எண் :

செந்தாமரை

நீர், இலை, நீர்த்துளிகள்

கண்ணாடித் தரையின் மீது
கண்கவர் பச்சைத் தட்டில்
எண்ணாத ஒளிமுத் துக்கள்
இறைந்தது போல்கு ளத்துத்
தண்ணீரி லேப டர்ந்த
தாமரை இலையும், மேலே
தெண்ணீரின் துளியும் கண்டேன்
உவப்பொடு வீடு சேர்ந்தேன்.





( 5 )



தாமரையின் சிற்றரும்பு

சிலநாட்கள் சென்ற பின்னர்ச்
குளக்கரை சென்றேன்! பச்சை
இலைத்தட்டில் சிந்தும் பால்போல்
எழில் நீரும், கரிய பாம்பின்
தலைகள் போல் நிமிர்ந்து இருந்த
தாமரைச் சிற்ற ரும்பும்
இலகுதல் காணப் பெற்றேன்;
காட்சியின் இன்பம் பெற்றேன்;


( 10 )





( 15 )

முதிர் அரும்பு

மணிஇருள் அடர்ந்த வீட்டில்
மங்கைமார், செங்கை ஏந்தி,
அணிசெய்த நல்வி ளக்கின்
அழகிய பிழம்பு போலத்
தணிஇலைப் பரப்பி னில்செந்
தாமரைச் செவ்வ ரும்பு
பிணிபோக்கி என்விழிக்குப்
படைத்தது பெருவிருந்தே!





( 20 )



அவிழ் அரும்பு

விரிக்கின்ற பச்சைப் பட்டை
மேனிபோர்த்துக், கிடந்து
வரிக்கின்ற பெண்கள், வான
வீதியைப் பார்த்துப் பார்த்துச்
சிரிக்கின்ற இதழ்க்கூட்டத்தால்
மாணிக்கம் சிதறுதல்போல்
இருக்கும் அப்பச்சிலைமேல்
அரும்புகள் இதழ்விரிக்கும்!


( 25 )





( 30 )

மலர்களின் தோற்றம்

விண்போன்ற வெள்ளக் காடு.
மேலெல்லாம் ஒளிசெய் கின்ற
வெண்முத்தங்கள் கொழிக்கும்
பச்சிலைக் காடு, மேலே
மண்ணூளார் மகிழும் செந்தா
மரைமலர்க் காடு, நெஞ்சைக்
கண்ணுளே வைக்கச் சொல்லிக்
கவிதையைக் காணச் சொல்லும்.




( 35 )




ஒப்பு

வாய் போலச் சிலமலர்கள்!
'வா' என்றே அழைக்கும் கை போல்
தூயவை சிலமலர்கள்
தேய்ந்துநீராடி மேலே
பாயும் நன் முகம்போல் நெஞ்சைப்
பறிப்பின சிலமலர்கள்!
ஆயிரம் பெண்கள் நீரில்
ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்!

( 40 )




( 45 )


செவ்விதழ்

ஓரிதழ் குழந்தைக் கன்னம்!
ஓரிதழ் விழியை ஒக்கும்!
ஓரிதழ் தன்மணாளன்
உருவினைக் கண்டு கண்டு
பூரிக்கும் உதடு! மற்றும்
ஓரிதழ் பொல்லார் நெஞ்சம்!
வாரித் தரச்சிவந்த
உள்ளங்கையாம் மற்றொன்று!



( 50 )




( 55 )

தேன்

மூடிய வாய்திறந்து
உளமார முன்னாள்எல்லாம்
தேடிய தழிழுணர்வைத்
தின்னவே பலர்க்கும் தந்தும்
வாடாத புலவர் போல
அரும்பிப்பின் மலர்ந்த பூக்கள்
வாடாது தேன்கொடுக்கும்
வண்டுகள் அதைக் குடிக்கும்





( 60 )



வண்டுகள்

தேனுண்ண, வண்டு பாடும்!
தேனுண்டபின் ஓர் கூட்டம்
தானோர்பால் தாவும்! வேறோர்
தனிக்கூட்டம் களியாட்டத்தை
வானிடை நடத்தும்! ஒன்று
மலர்என்னும் கட்டிலுண்டு
நானுண்டென்று உறக்கடம் கொள்ளும்
நறும்பொடி இறைக்கும் ஒன்று.


( 65 )




( 70 )

பாட்டு, மணம்

என்னைநான் இழந்தேன்; இன்ப
உலகத்தில் வாழலுற்றேன்;
பொன்துகள், தென்றற் காற்று,
புதுமணம், வண்டின் பாட்டு,
பன்னூறு செழுமாணிக்கப்
பறவை போல் கூட்டப் பூக்கள்
இன்றெலாம் பார்த்திட்டாலும்
தெவிட்டாத எழிலின் கூத்தே!




( 75 )