பக்கம் எண் :

இளைஞர் இலக்கியம்

சிறுகதைப் பாட்டு

                   1. சிறுகதைப் பாட்டு

பால்கறந்தான் முத்தன்-அந்த
பாலை எங்கே வைத்தான்
மூலையிலே தானே...ஒரு
முழுத்திருட்டுப் பூனை
பாலையெல்லாம் நெட்டி-அந்தப்
பாற்செம்பை உருட்டிக்
கோலெடுத்த கைம்மேல்-அது
குதித்தேறிடும் சுவர்மேல்.

                   2. காக்கை எறும்பு

எருமைக் கொம்பில் ஒருகாக்கா
ஏறிக் கொண்டதாம்
எறும்பை அது கூவிப் பெருமை
காட்டிச் சிரித்ததாம்.

எருமைக் காதில் அந்த எறும்பு
புகுந்து கொண்டதாம்,
எருமை காது வலியால் தன்
தலையை அசைத்ததாம்.

இருந்த காக்கா விரைவாகப்
பறந்து விட்டதாம்
எறும்பதனைக் கண்டு விழுந்து
விழுந்து சிரித்ததாம்.

பெருமை பேசித் திரிந்திடுவார்
அது சரியில்லை
பின்னால் சிறுமை யடையக் கூடும்
அது பெருந் தொல்லை.

                   3. ஏழ்மை

தென்னைந் தோப்புக் குள்ளே-அதில்
சிறிய குடிசைக் குள்ளே
ஒன்றல்ல இரண்டல்ல-மிக
ஒழுங்காய் ஏழு பிள்ளை
அன்னை யோநோ யாளி-நல்
அப்பன் தொழி லாளி
இன்றைக் கெல்லாம் தொல்லை-அவர்
எவரும் சாப்பிட வில்லை.

வேலை கிடைக்க வில்லை-தம்
வீட்டில் அரிசியும் இல்லை
பாலுக் கழும்ஓர் பிள்ளை-நல்ல
பருக்கைக் கழும்ஓர் பிள்ளை
ஓலைக் குடிசையில் எங்கும்-வாய்
ஓயா அழுகை பொங்கும்
காலை கிடைத்தது வேலை-பின்
கண்டார் கூழை மாதை.

                   4. நல்ல பாம்பாட்டி

சின்னஞ் சிறிய தங்கை
தெருவில் போன நுங்கை
அன்னையிடம் கேட்டாள்
அன்னை மறுத்துத் தீர்த்தாள்.

சின்னஞ் சிறிய தங்கை
தெருவில் ஓடி நுங்கை
என்னிடத்தில் வாவா
என்று கூவி அழைத்தாள்.

எட்டிச் சென்ற பாட்டி
கிட்டச் சுமந்து வந்தார்
பொட்டும் வேண்டாம் நுங்கே
போபோ என்றாள் தங்கை.

எட்டச் சென்ற என்னை
இதற்கா அழைத்தாய் என்று
கொட்டிக் கொண்டே போனார்
குலுங்கும் சிரிப்பைப் பாட்டி.
                   5. குரங்காட்டி

கோலை வைத்துக் குதிரை ஏறும்-நல்ல
குல்லாப் போட்டு வில்லாய் வளையும் குரங்கு
தாலி கட்டிய பெண்ணாய் வரும் குரங்கு-தன்
தலை கீழாய் மேல் சுழலும் குரங்கு
நீலச்சட்டை போட்டுவரும் குரங்கு-அது
நிறையக் காசு கேட்டுவரும் குரங்கு
சோலிவிட்டுக் குந்திவிடும் குரங்கு-அவன்
கோல் எடுத்தால் பின்னும் ஆடும் குரங்கு!

                   6. பாம்பாட்டி

பட்டுச் சட்டைக் காரன்-ஒரு
பாம்பாட்டி வந்தான்
பெட்டியைத் திறந்தான்-அவன்
பெரிய மகுடி எடுத்தான்
பட்டு மாட்டுத் தாம்பு-தன்
படமெடுத்தது பாம்பு
எட்டிக்காசு கொடுத்தேன்-பாம்பைப்
பெட்டிக்குள்ளே அடைத்தான்.

                   7. நைவன நணுகேல்

கண்ணன் திண்ணம் என்றே
அண்ணன் தம்பி இருவர்!
திண்ணன் ஏணி ஏறிச்
சின்னப் பரணில் உள்ள
உண்ணும் பண்டம் எடுத்தே
உண்டு வேலை முடித்தே
எண்ணிக் கீழே இறங்க
ஏணி பார்த்தான் இல்லை.

திண்ணன் மனம் நலிந்தான்
அண்ணன் அங்கே ஒளிந்தான்
திண்ணன் அண்ணே என்றான்
கண்ணன் மறைந்து நின்றான்
கண்ணெதிர் வந்தார் அம்மா
திண்ணன் அழுதான் சும்மா
அண்ணன் கண்டு சிரித்தான்
அம்மா கண்டு முறைத்தார்.

                   8. பூதம்

பூதம் பூதம் பூதம்-அதோ
போவது பார் பூதம்
பூதம் என்றால் பூதம்-அது
புதுமையான பூதம்
காத மிருந்து வந்தார்-அவர்
கையாற் செய்த பூதம்
தோது பட்ட கொம்பைக்-கொண்டு
தொகுத்துக் கட்டிய தொம்பை.

மாடிக் குமேல் உயரம்-அது
மலை யைவிட உப்பல்
ஆடி வரும் பூதம் உள்
ஆளிருப்ப தாலே
ஓடி வரும் பூதம்-ஆள்
உள் இருப்ப தாலே
வேடிக்கையாய் நடக்கும்-அது
வேறொருவன் காலால்.

கோழி முட்டைக் கண்கள்-பெருங்
குந்தாணிபோல் கழுத்தே
ஏழுமுழம் கைகள்-ஓர்
எருமுட்டை போல் காது
கூழைமட்டை மூக்கு-நீள்
கொல்லூறுபோல் நாக்கு
போழ்தெலாம் இவற்றால்-இங்கு
பூச்சி காட்டும் பூதம்.
கூடாய்ச் செய்த பூதம்-அந்தக்
கூட்டிற் புகுந்த ஒருவன்
மாடாய்ச் சுமக்கும் பூதம்-அவன்
வந்தால் வரும் பூதம்
ஆட ஆடும் பூதம்-அவன்
ஆட்டி வைக்கும் பூதம்,
சோடித்த ஓர் பொம்மை-வந்து
தொடுவதுண்டா நம்மை.

                   9. கெட்ட பொன்னன்

ஆட்டி விட்ட ஏணையில்
அழகுக் குழந்தை தூங்கையில்
பாட்டுப் பாடிக் கதவையே
படபட என்று குலுக்கினான்
போட்டு டைத்தான் பெட்டியை
பொத்த லிட்டான் சட்டியை
நீட்டுக்கழி தூக்கியே
நின்றடித்தான் தகரத்தை.

ஆட்டி விட்ட ஏணையில்
அழகுக் குழந்தை அலறியே
நீட்டி நீட்டி அழுததே
நிறையக் கண்ணீர் வடித்ததே
கேட்டு வந்தார் அம்மாவும்
கிளம்பி வந்தார் அப்பாவும்
போட்ட ஒசை யார் என்றார்
பொன்னனைத்தான் சீ என்றார்.

                   வாழ்க!

தமிழ் மொழி வாழ்க!
தமிழர் வாழ்க!
நமது தாய்நாடு!
நற்றமி.ழ் நாடு!
தமிழரின் கலைகள்
தமிழர் நாகரிகம்
தமிழர் பண் பாடு
தழைந்துவாழியவே!







( 5 )







( 10 )





( 15 )





( 20 )








( 25 )




( 30 )





( 35 )




( 40 )








( 45 )





( 50 )





( 55 )







( 60 )







( 65 )




( 70 )






( 75 )




( 80 )





( 85 )







( 90 )




( 95 )





( 100 )





( 105 )




( 110 )





( 115 )




( 120 )







( 125 )





( 130 )




( 135 )






( 140 )




( 145 )