பக்கம் எண் :

இயற்கை

இயற்கைச் செல்வம்


விரிந்த வானே, வெளியே, - எங்கும்
   விளைந்த பொருளின் முதலே,
திரிந்த காற்றும், புனலும், - மண்ணும்,
   செந்தீ யாவும் தந்தோய்,
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
   செறிந்த உலகின் வித்தே,
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
   புதுமை! புதுமை! புதுமை!

அசைவைச் செய்தாய், ஆங்கே - ஒலியாம்
   அலையைச் செய்தாய், நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
   நான்காய் விரியச் செய்தாய்!
பசையாம் பொருள்கள் செய்தாய்!-இயலாம்
   பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
   ஏந்திழை இனிமைக் குரலால்!






( 5 )





( 10 )




( 15 )

எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
   எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
   துய்க்கச் செய்தாய்! அடடா!
கல்லா மயில், வான்கோழி - புறவுகள்
   காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் "ஆடற்-கலை" தான்
   அமையச் செய்தாய் வாழி!



( 20 )


அதிகாலை

அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்
                   (அமைதியில் ஒளி... )

இமை திறந்தே தலைவி கேட்டால் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்
                   (அமைதியில் ஒளி... )

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைந்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்
                   (அமைதியில் ஒளி... )

பெற்றவர் கூடத்தில் மணைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைகளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்கலாயினர் அன்பு திருந்தி
                   (அமைதியில் ஒளி... )

( 25 )





( 30 )





( 35 )





( 40 )

வானம்பாடி

வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?

வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல் எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்

நீநம்பாய் என்று, நிமிர்ந்த என்கண்ணேரில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்;

உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே இருப்பாய் பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண்டே இருப்பார் தென்பாங்கை உன்பால்!

அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்
இசைமழையால் இன்புறுவோம் யாம்.






( 45 )





( 50 )





( 55 )



        மாவலிபுரச் செலவு

{ ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4 மணிக்குச் சென் னை, பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம், நானும் என் தோழர் பலரும். வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது. எனினும் அப்பெருந்தோணியைக் கரையோரமாக ஒரு கயிறு பற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் இரங்கத் தக்க காட்சி, அதையும், ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப்பாட்டு }

சென்னையிலே ஒருவாய்க்கால் - புதுச்
   சேரிநகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழில்
   அன்னம் மிதப்பது போலே.
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
   ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி - பின்பு
   தீவிரப் பட்டது வேகம்.













( 60 )





( 65 )

தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள்
   சென்றிடும் போது விசாலச்
சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில்
   தூவிடும் பொன்னொளி கண்டோம்
நெற்றி வளைத்து முகத்தை - நட்டு
   நீரினை நோக்கியே தாங்கள்
அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல்
   அத்தனையும்ஒளி வானம்.

சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று
   சாற்றும் சுவடி திறந்து
சஞ்சார வானிலும் எங்கள் - செவி
   தன்னிலும் நற்றமிழ் ஏற்றி
அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க
   ஆசையினால் ஒரு தோழர்,
செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச்
   செய்தது தான்மிக்க மோசம்

மிக்க முரண்கொண்ட மாடு - தன்
   மூக்குக் கயிற்றையும் மீறிப்
பக்க மிருந்திடும் சேற்றில் - ஓடிப்
   பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போலிருள் வானில் - முற்றும்
   சாய்ந்தது சூரிய வட்டம்!
புக்க பெருவெளி யெல்லாம் - இருள்
   போர்த்தது! போனது தோணி.

வெட்ட வெளியினில் நாங்கள் - எதிர்
   வேறொரு காட்சியும் கண்டோம்.
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
   கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்
மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
   வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக் கடங்கா நகைப்கைப் - பனை
   கலகல வென்றுகொட் டிற்றே.



( 70 )






( 75 )




( 80 )





( 85 )




( 90 )





( 95 )


எட்டிய மட்டும் கிழக்குத் - திசை
   ஏற்றிய எங்கள் விழிக்குப்
பட்டது கொஞ்சம் வெளிச்சம் - அன்று
   பௌர்ணமி என்பதும் கண்டோம்.
வட்டக்குளிர்மதி எங்கே என்று
   வரவு நோக்கி யிருந்தோம்.
ஒட்டக மேல்அர சன்போல் - மதி
   ஓர்மரத் தண்டையில் தோன்றும்.

முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று
   முற்றும் சிவந்தது சொல்வாய்.
இத்தனை கோபம் நிலாவே - உனக்கு
   ஏற்றியதார் என்று கேட்டோம்.
உத்தர மாக எம் நெஞ்சில் - மதி
   ஒன்று புகன்றது கண்டீர்.
சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்
   திருப்பிப் பார்த்திட்ட போது,

தோணிக் கயிற்றினை ஓர் ஆள் - இரு
   தோள்கொண் டிழுப்பது கண்டோம்.
காணச் சகித்திட வில்லை - அவன்
   கரையொடு நடந்திடு கின்றான்.
கோணி முதுகினைக் கையால் - ஒரு
   கோல்நுனி யால்மலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
   தொல்லை யுற்றான்பின்புறத்தில்.


( 100 )




( 105 )





( 110 )





( 115 )




( 120 )

இந்த உலகினில் யாரும் - நல்
   இன்ப மெனும்கரை யேறல்
சந்தத மும்தொழி லாளர் - புயம்
   தரும்து ணையன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை - இதை
   இருப துதரம் சொன்னோம்.
சிந்தை களித்த நிலாவும் - முத்துண்ச்
   சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.

நீல உடையினைப் போர்த்தே - அங்கு
   நின்றிருந் தாள்உயர் விண்ணாள்
வாலிப வெண்மதி கண்டான் - முத்து
   மாலையைக் கையி லிழுத்து
நாலு புறத்திலும் சிந்தி - ஒளி
   நட்சத்திரக்குப்பை யாக்கிப்
பாலுடல் மறையக் காலை - நாங்கள்
   பலிபுரக்கரை சேர்ந்தோம்.


( 125 )




( 130 )





( 135 )

இரு சுடரும் என் வாழ்வும்

காலை

ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்
   உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நெளியக் கண்டேன் பொன்னின் - கதிர்
   நிறையக் கண்டேன் உவகை!

துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி
   துள்ளக் கண்டேன் விழியில்!
தெளியக் கண்டேன் வையம் - என்
   செயலிற் கண்டேன் அறமே!


( 140 )





( 145 )

மாலை

மறையக் கண்டேன் கதிர்தான் - போய்
   மாயக் கண்டேன் சோர்வே!
நிறையக் கண்டேன் விண்மீன் - என்
   நினைவிற் கண்டேன் புதுமை!

குறையக் கண்டேன் வெப்பம் - எனைக்
   கூடக் கண்டேன் அமைதி!
உறையக் கண்டேன் குளிர்தான் - மேல்
   ஓங்கக் கண்டேன் வாழ்வே!





( 150 )



தென்றல்

பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்
   புதுமணத்தில் தோய்ந்து, பூந்தாது வாரி,
நதிதழுவி அருவியின்தோள் உந்தித், தெற்கு
   நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்
சதிராடி, மூங்கிலிலே பண்எ ழுப்பித்
   தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,
முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து,
   முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி.

அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
   அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்,
   செல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று!
வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி
   விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.
அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்;
   அங்கிருந்த விசுப்பலகை தனிற்ப டுத்தேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்
   பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து
மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்
   விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.
அக்காலம் அறைக்குவந்த பூனையின்மேல்
   அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்
பக்காப்பூ னைநூறு, பொருளை யெல்லாம்
   பாழாக்கினாலும்அதில் கவலை கொள்ளேன்.

( 155 )




( 160 )




( 165 )




( 170 )





( 175 )

வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை
   மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை;
சூழ்ந்ததுணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்
   தொல்லையுறு வகைஇருத்தல் வேண்டும் அங்கே
வீழ்ந்துகிடந் திட்டஎனைத் "தனிமை", "அந்தி"
   இவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப்
பாழான அவளுடலின் குளிர்ச்சி, மென்மை,
   மணம்இவற்றைப் பருகுவதே நினைவா யிற்று.

தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்.
   சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்.
சரியாத குழல்சரியலானாள் போலும்,
   தடவினாள் போலும், எனைத் தன்க ரத்தால்!
புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்!
   புரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண்
பிரிவுக்கு வருந்தினேன் என்றாள் ஓகோ!
   பேசுமிவள் மனைவி; மற்றொருத்தி தென்றல்!

( 180 )




( 185 )





( 190 )