ஓர்தட்டில்
உயர்ந்தோர்மற்
றொன்றில் தாழ்ந்தோரை இட்டுச்
சீர்தூக்கிப் பார்ப்போமடி -- சகியே
சீர்தூக்கிப் பார்ப்போமடி!
தீண்டாதார் சுத்தமற்றோர்
என்றாலச் சுத்தத் தன்மை
தாண்டாதார் எங்குண்டடி? -- சகியே
தாண்டாதார் எங்குண்டடி?
தீண்டாதார் ஊனுண்டால்
தீண்டு மனிதர்வாய்க்குள்
மாண்டன பல்கோடியாம் -- சகியே
மாண்டன பல்கோடியாம்!
பறவை மிருகமுண்டோர்
பறையர் என்றால் மனுநூல்
முறையென்பார் பேரென்னடி -- சகியே
முறையென்பார் பேரென்னடி?
வெறிமது உண்போர்நீசர்
என்றால் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டேதுக்கடி? -- சகியே
நிறைமுக்கா டேதுக்கடி?
சீலம் குறைந்தோர் என்றால்
சீலமி்லாச் சிலரை
ஞாலத்தில்ஏன் தீண்டினார் -- சகியே
ஞாலத்தில்ஏன் தீண்டினார்?
மேலைவழக்கங் கொண்டு
மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக்
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? -- சகியே
காலத்தில் தாழ்ந்தாருண்டோ?
சாத்திரம் தள்ளிற்றென்றால்
சற்றும் அதுதான் எங்கள்
கோத்திரத் தார்செய்ததோ? -- சகியே
கோத்திரத் தார்செய்ததோ?
வாய்த்திறம் கொண்ட மக்கள்
வஞ்சம் யாவையும் நம்பி
நேத்திரம் கெட்டோமடி -- சகியே
நேத்திரம் கெட்டோமடி!
மனிதரிற் றாழ்வுயர்வு
வகுக்கும் மடையர் வார்த்தை
இனிச்செல்ல மாட்டாதடி -- சகியே
இனிச்செல்ல மாட்டாதடி!
கனிமா மரம் வாழைக்காய்
காய்க்காதெனில் இரண்டும்
தனித்தனிச் சாதியடி -- சகியே
தனித்தனிச் சாதியடி!
எருமையைப் பசுச்சேர்தல்
இல்லை; இதனாலிவை
ஒருசாதி இல்லையடி! -- சகியே
ஒருசாதி இல்லையடி!
ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை
ஒப்பக் கருங்கொள்ளுங்கால்
இருசாதி மாந்தர்க்குண்டோ? -- சகியே
இருசாதி மாந்தர்க்குண்டோ?
உழைப்பால் உயர்ந்தவர்கள்
தாழ்ந்தவர்கள் என்றன்னோர்
பிழைப்பைக் கெடுத்தாரடி -- சகியே பிழைப்பைக் கெடுத்தாரடி!
தொழிலின்றிச் சோறுண்ணாச்
சுத்தர் அசுத்தர்என்ப
தெழிலற்ற வார்த்தையடி -- சகியே
எழிலற்ற வார்த்தையடி!
உடல்நோய்கள் அற்றபேரை
ஒழுக்கமில்லார் என்பவர்
கடலைஉளுந் தென்பரோ? -- சகியே
கடலைஉளுந் தென்பரோ?
தடைற்ற அன்பினரைச்
சண்டாளர் என்றுசொல்லும்
கடையர்க்கு வாழ்வேதடி? -- சகியே
கடையர்க்கு வாழ்வேதடி?
பழிப்பவர்க்கும் உதவும்
பாங்கர் பறையர் என்பார்
விழித்துத் துயில்வாரடி -- சகியே
விழித்துத் துயில்வாரடி?
தழைக்கப் பிள்ளைபெறுவோர்
தாழ்வாம்! பிள்ளைக்கையரை
அழைப்போர்கள் மேலோர்களாம் -- சகியே
அழைப்போர்கள் மேலோர்களாம்!
தோள்தான் பொருள் என்போர்கள்
தாழவாம்; துரும்பெடுக்கக்
கூடாதோர் மேலென்பதாம் -- சகியே
கூடாதோர் மேலென்பதாம்!
மாடா யுழைப்பவர்கள்
வறியர்; இந்நாட்டுத் தொழில்
நாடாதோர் செல்வர்களோ? -- சகியே
நாடாதோர் செல்வர்களோ?
ஏரிக்கரையினில் வாழ்ந்
திருந்து பிறரைக்காக்கும்
சேரியர் தாழ்ந்தார்களோ? -- சகியே
சேரியர் தாழ்ந்தார்களோ?
ஊருக்கி ழிந்தோர் காவல்
உயர்ந்தோர் இவர்கள் வாழ்வின்
வேருக்கு வெந்நீரடி -- சகியே
வேருக்கு வெந்நீரடி!
அங்கம் குறைச்சலுண்டோ
ஆதித் திராவிடர்க்கே?
எங்கேனும் மாற்றமுண்டோ; -- சகியே
எங்கேனும் மாற்றமுண்டோ?
புங்கவர் நாங்கள்என்பார்
பூசுரர் என்பார்நாட்டில்
தங்கட்கே எல்லாம் என்பார் -- சகியே
தங்கட்கே எல்லாம் என்பார்!
ஆதிசைவர்கள் என்பார்,
''ஆதிக்குப் பின் யார்'' என்றால்
காதினில் வாங்காரடி! -- சகியே
காதினில் வாங்காரடி!
சாதியில் கங்கைபுத்ரர்
என்பார்கள் சாட்சி, பத்ரம்
நீதியில் காட்டாரடி -- சகியே
நீதியில் காட்டாரடி!
வேலன்பங் காளியென்பார்
வெறுஞ்சேவ கனைக்கண்டால்
காலன்தான் என்றஞ்சுவார் -- சகியே
காலன்தான் என்றஞ்சுவார்!
மேலும் முதலி; செட்டி;வேளாளப் பிள்ளைமுதல்
நாலாயிரம் சாதியாம் -- சகியே
நாலாயிரம் சாதியாம்!
எஞ்சாதிக் கிவர்சாதி
இழிவென்று சண்டையிட்டுப்
பஞ்சாகிப் போனாரடி! -- சகியே
பஞ்சாகிப் போனாரடி!
நெஞ்சில் உயர்வாய்த் தன்னை
நினைப்பான் ஒருவேளாளன்
கொஞ்சமும் எண்ணாததால் -- சகியே
கொஞ்சமும் எண்ணாததால்!
செட்டி உயர்ந்தோன் என்பான்
செங்குந்தன் உயர்வென்பான்
குட்டுக்கள் எண்ணாததால் -- சகியே
குட்டுக்கள் எண்ணாததால்!
செட்டிகோ முட்டிநாய்க்கன்
சேணியன் உயர்வென்றே
கட்டுக் குலைந்தாரடி -- சகியே
கட்டுக் குலைந்தாரடி!
சேர்ந்துயர் வென்றிவர்கள்
செப்பினும் பார்ப்பனர்க்குச்
சூத்திரர் ஆனாரடி -- சகியே
சூத்தி்ரர் ஆனாரடி!
தூற்றிட இவ்வுயர்ந்தோர்
சூத்திரர் என்றுபார்ப்பான்
காற்றினில் விட்டானடி -- சகியே
காற்றினில் விட்டானடி!
தம்மை உயர்த்தப் பார்ப்பார்
சமூகப் பிரிவுசெய்தார்
இம்மாயம் காணாரடி -- சகியே
இம்மாயம் காணாரடி!
பொய்மை வருணபேதம்
போனால் புனிதத்தன்மை
நம்மில்நாம் காண்போமடி -- சகியே
நம்மில்நாம் காண்போமடி
நான்கு வருணம் என்று
நவிலும் மனுநூல்விட்டு
ஏனைந்து கொண்டாரடி -- சகியே
ஏனைந்து கொண்டாரடி!
நான்கு பிரிவும் பொய்ம்மை
நான்குள்ளும் பேதம் என்றால்
ஊனத்தில் உள்ளூனமாம் -- சகியே
ஊனத்தில் உள்ளூனமாம்!
சதுர்வர்ணம் வேதன் பெற்றான்
சாற்றும் பஞ்சமர் தம்மை
எது பெற்றுப் போட்டதடி -- சகியே
எது பெற்றுப் போட்டதடி?
சதுர்வர்ணம் சொன்னபோது
தடிதூக்கும் தமிழ்மக்கள்
அதில்ஐந்தாம் நிறமாயினார் -- சகியே
அதில்ஐந்தாம் நிறமாயினார்!
மனிதரில் தீட்டுமுண்டோ?
மண்ணிற் சிலர்க்கிழைக்கும்அநீதத்தை என்சொல்வதோ? -- சகியே
அநீதத்தை என்சொல்வதோ?
"புனிதர்என் றேபிறத்தல
"புல்லர்என் றேபிறத்தல
எனுமிஃது விந்தையடி -- சகியே
எனுமிஃது விந்தையடி!
ஊரிற் புகாதமக்கள்
உண்டென்னும் மூடரிந்தப்
பாருக்குள் நாமேயடி -- சகியே
பாருக்குள் நாமேயடி!
நேரிற்பார்க் கத்தகாதோர்
நிழல்பட்டால் தீட்டுண்டென்போர்
பாருக்குள் நாமேயடி -- சகியே
பாருக்குள் நாமேயடி!
மலம்போக்கும் குளம்மூழ்கா
வகைமக்களை நசுக்கும்
குலமாக்கள் நாமேயடி -- சகியே
குலமாக்கள் நாமேயடி!
மலம்பட்ட இடம் தீட்டாம்
மக்கள் சிலரைத் தொட்டால்
தலைவரைக்கும் தீட்டாம் -- சகியே
தலைவரைக்கும் தீட்டாம்!
சோமனைத் தொங்கக்கட்டச்
சுதந்தரம் சிலர்க்கீயாத்
தீமக்கள் நாமேயடி -- சகியே
தீமக்கள் நாமேயடி!
தாமூழ்கும் குளம் தன்னில்
தலைமூழ்கத் தகாமக்கள்
போமாறு தானென்னடி? -- சகியே
போமாறு தானென்னடி?
பாதரட்சை யணிந்தாற்
பழித்துச் சிலரைத் தாழ்த்தும்
காதகர் நாமேயடி -- சகியே
காதகர் நாமேயடி.
ஓத வசதியின்றி
உலகிற் சிலரைத் தாழ்த்தும்
சூதர்க்கு வாழ்வேதடி? -- சகியே
சூதர்க்கு வாழ்வேதடி!
தீராப் பகையுமுண்டோ
திருநாட்டார்க் குள்ளும்நெஞ்சம்
தேராகிப் போனாலடி -- சகியே
நேராகிப் போனாலடி!
ஓரைந்து கோடிமக்கள்
ஓலமிடுங்கால் மற்றோர்
சீராதல் இல்லையடி -- சகியே
சீராதல் இல்லையடி!
தாழ்வில்லை உயர்வில்லை
சமமென்ற நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி -- சகியே
வாழ்வெல்லை காண்போமடி!
சூழ்கின்ற பேதமெல்லாம்
துடைத்தே சமத்துவத்தில்
வாழ்கின்றார் வாழ்வின்பமாம் -- சகியே
வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! |
( 225 )
( 230 )
( 235 )
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
( 330 )
( 335 )
( 340 )
( 345 )
( 350 )
( 355 )
( 360 )
( 365 )
( 370 )
( 375 )
( 380 )
( 385 )
( 390 )
( 395 )
( 400 )
( 405 )
( 410 )
( 415 )
( 420 )
( 425 )
( 430 )
( 435 )
( 440 )
|