விடிந்தது! தங்க வெய்யில் வந்தது!
மடிந்தது! காரிருள் மடிந்தது பனிப்புகை!
பசும்புல் கதிரொளி பட்டு விளங்கின
விசும்பிற் காக்கைகள் பெண்ணென விளங்கின!
சேவற் கோழி தெருவில் பெடையினை
ஆவற் கொருமுறை அணையும் தேவைக்குத்
தீனி பொறுக்கித் திரியும் அடடா
வானம் பரிதி!'' ஆயிரம் வண்ணம்
கண்ணெதிர் காட்ட வந்ததோ என்னவோ!
தெருவில் நன்னிழல் சேர்க்கும் மரங்கள்
இருபுறம் தளிரொடு தங்க மெருகு
பெருக நின்றன. குருவிகள் பாடின
அருகில் தென்னைகள் பாளைகள் அவிழ்ந்தன.
ஒளிபடும் காலையில் ஒலித்தது சிற்றூர்!
எளிய உழவர்கள் ஏரொடு மாட்டொடு
தம்மில் இனிமைத் தமிழற் பேசி
அம்மருங்கு வரிசையில் அகன்றனர்! பெண்கள்
முன்றா னையினைமுன் னிழுத்துச் செருகி,
அன்றாடத் தொண்டிற் சென்றனர்; ஆயினும்
இன்னும் படுக்கைவிட் டெழாத பொன்னி
தன்னுளம் பறித்த பொன்னனை எண்ணி
வெயிலிற் புழுப்போல் மின்னிடை ஓடிய
அயில்விழி நீர்பெற அழுது புரண்டாள்!
இன்னும் பொன்னி எழாத தென்ன?
நன்னீர் எடுக்க நாடாத தென்ன?
நீராடி வந்து நாரோடு பூக்கள்
சீரோடு கட்டிச், சீவிக் குழலில்
சூடாத தென்ன? தோழிமா ரோடுசென்
றடா தென்ன? அன்னைஇவ் வாறு
கருதி எதிர்வந்து கண்ணே என்றாள்
நடுங்குடல் காட்டாது நங்கை எழுந்து
மயக்கம் என்றாள்; மங்கைமெய் சொன்னாள்.
சட்டி பானை தவலை செம்புகள்
தொட்டவ ரில்லை, துலக்கியோர் இல்லை!
அடுக்களை பெருக்கா தழகிலா திருந்தது.
எடுக்க வில்லை அடுப்புச் சாம்பல்
அன்னை தன்மகள் அருகில் நின்றவள்
பொன்னியே 'குந்துநீ' என்று புகன்று
தானும் அமர்ந்து தலைசாய்ந் திருந்தாள்
மயக்கம் என்று மங்கைமெய் உரைத்தாள்.
என்ன மயக்கம்? என்ன மயக்கம்?
என்ன மயக்கம்? என்றுகேட் டாள்தாய்.
காரணம் சொல்லக் கார ணத்தால்
தாய்உளம் துவளத் தலைசாய்த்திருந்தாள்
அஞ்சல் அஞ்சல் என்ற ஒருகுரல்
வஞ்சியின் காதில் வீழ்ந்தது; வஞ்சி,
அஞ்சல் அம்மா அஞ்சல் என்று
விரைவில் எழுந்து வெளிப்புறம் ஓடி
அஞ்சலைப் பெற்றாள் அதனைப் படித்தாள்.
பொன்னி படிக்கையில் சின்ன விழிகள்
மின்னக் கடையுதடு கட்ட விழ்ந்து
முத்துக் காட்ட முன்னின்ற தாயை,
மங்கை நோக்கி உன் மருமகன் நாளைக்
காலையில் கட்டாயம் வருமாம்! அம்மா!
புகைவண்டி நிலையம் புதுமாட்டு வண்டியை
அனுப்ப வேண்டுமாம் அறிக என்று
கூறிப் பறந்தாள் கொல்லை நோக்கி!
துலக்கின பானை தூக்குச் சட்டிகள்
குடங்கள் செம்புகள்! கொட்டில், அடுக்களை
பெருக்கி அடுப்பை எரிக்கச் சமையல்
முடித்துத் தாயிடம் முடிவு கூறினாள்.
கடிதில் தாய்தன் கணவனுக் காகக்
கொல்லைக்குச் சோறு கொண்டு போனாள்!
எப்போ தன்னை இங்கு வருவாள்?
எப்போது மாலை வேளை ஏகிடும்?
அழகிய மணியிருள் எப்போ தகலும்?
விடியுமுன் அப்பா விழிக்க வேண்டும்
வண்டி ஓட்டியை வாஎனல் வேண்டும்
அண்டைக் குடிசையில் அவனோ தூங்குவான்!
கூச்ச லிட்டுக் கூப்பிட வேண்டும்
பேச்சுக் கொஞ்சம் பேச வேண்டும்
புதுமாட்டு வண்டி புகைவண்டி நிலையம்
இடக்கில் லாமல் ஏக வேண்டும்!
அத்தான் வண்டிவிட் டங்கே இறங்கி
மெத்த விரைவாய் இவ்வண்டி மீது
குந்துவார் கழுத்து மணிகள் குலுங்க
இந்தா இந்தா என்றவன் அதட்ட,
வண்டி வந்து வாயிலில் நிற்கும்!
அண்டி வந்தெனை ஆரணங் கேஎன்
அழைக்கும்! நானோ அறையிற் பதுங்கி
இழுப்பும் பறிப்புமாய் ஏனென்று சொல்லுவேன்
என்று பொன்னி எண்ணிக் கிடந்தான்.
மறுநாள் விடியுமுன் மங்கை
குறுநகை காட்டினாள் கொழுநனுக்கெதிரே?
|
( 240 )
( 245 )
( 250 )
( 255 )
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
|