பக்கம் எண் :

பாரதிதாசன் பன்மணித்திரள்

மீட்சிப் பத்து

(கட்டளைக் கலித்துறை)

பொன்னிலும் மண்ணிலும் பெண்ணிலும் நெஞ்சைப் புகுத்ததல்லால்
தன்னல நீக்கிப் பெரியார் நெறிநின்று தாய்நிலத்தை
முன்னுற மீட்டுத் தமிழ், கலை, வாழ்க்கை முறைதழைக்கத்
தன்மானம் காக்கவேண்டாமோ அருமைத் தமிழர்களே?

பாம்பாகச் சீறும் வடவரின் பல்லைப் பிய்த்தலின்றி
மேம்பாடு கோரி வெறும்பாடு பட்டுக் கிடப்பதுண்டோ?
நாம்பாடு பட்டதெல் லாம்விழ லோ? தமிழ் நாட்டுரிமை
வேம்பா? அடிமைநிலை கரும்பா? தமிழ் மேன்மக்களே!

உணலுற்ற சோறும் பறித்தான்! தமிழின் உயர்வழித்தான்!
மணலுற்ற தென்றான் தமிழகம்! செந்தமிழ் மாணவரே
தணலற்ற வீட்டுக்குள் தைப்பொங்கல் பாடும் தலைவருண்டா?
நுணலாநாம்? தேவாங்கா? ஆமையா சற்றே நுவலுவிரே!
.
ஊர்ப்படம் நீக்கிப்பன் னாட்டுப் படத்தின் உருஎரிக்கும்
தீர்ப்படங் கற்கும் இணக்கம் தராமல் திரைப்படத்திற்
பேர்ப்படங் காட்டிடும் பெண்ணான பத்தரை மாற்றுத்தங்க
வார்ப்படங் கண்டால் மலைப்படங் கான்ஓர் கலப்படமே!

யார்தாம் தலைவர்? நல்வழி காட்டுவோர் யாவர்? இந்நாள்
யார்தாம் தமிழரைக் காக்கப் பிறந்தார்? இனிப்பிறவார்
யார்தாம்? அவர் நம் பெரியார் தாம் இல்லை எனில்பிறகு
யார்தாம் புகலுவிர் யார்தாம் புகலுவிர் இந்நிலத்தே!

மெய்யேந்தித் தோளினில் வேலேந்தி வாழ்ந்த தமிழரிடம்
கைஏந்தி, வேந்தரின் காலேந்தி ஏந்திக் கயல்விழியால்
மையேந்து மாதர் இதழினை மன்னர்கள் உண்ணஏந்திப்
பொய்யேந்தும் ஆரியர் நாட்டின்கோல் ஏந்தவும் போந்தனரே!

முந்தைக்கு முந்தை அதன்முந்தை ஆட்சி முறைவகுத்த
எந்தைக்குத் தந்தை அவன் தந்தை யின் தந்தை பெற்றபுகழ்,
கந்தைக்கும் சோற்றுக்கும் இல்லாமை தன்னிற்கரைந்திடில்என்
மைந்தரின் மைந்தர்க்கு வைப்பேன் விடுதலை வாழ்வினையே!

விழிக்குத் தெரிந்த தமிழகம் இல்லையாம் -- மேலுமிந்த
மொழிகட் சிறந்த தமிழ்முதல் இல்லையாம் மூன்னவரின்
வழிக்கென்று யாதும் வரலாறும் இல்லையாம் ஆரியரைப்
பழிக்குப் பழிவாங்கல் அன்னாரின் ஆட்சி பறிப்பதுவே!

தமிழரின் மேன்மை இகழ்ந்த வடக்கர் தறுக்கடக்கி
அமைந்தனர் மூவேந்தர்; அன்றே அவரை அழித்திருந்தால்
இமையம் பிறந்திடு முற்பிறந் திட்டஇன் பத்தமிழைத்
தமதுவடமொழி தந்ததென்னார்அச் சழக்கர்களே!

நாவலந் தீவேநமது! பிறகு நமைஅடைந்த
பாவிகள் ஆரியர் கூலியாய்க் குற்றக் குழுவினராய்
மேவினர் நம்மடி மெல்லவே நம்தலை மேலுமுற்றார்;
யாவையும் வவ்வினர் ஈவதுண்டோதமிழ் நாட்டையுமே!





( 5 )





( 10 )





( 15 )





( 20 )






( 25 )





( 30 )





( 35 )





தன்னாட்சி

தன்னாட்டைத் தான்பெறான் உலகில்
எந்நாட்டா னாயினும் இழிந்தவன் தோழி!

முன்நாட்டை ஆண்டவன்;
முழுவாழ்வு வாழ்ந்தவன்;
தென்னாட்டான் இந்நாளில்
தில்லிக் கடியவன்
என்னேடி தோழி
இழிவில் இழிவன்றோ!

ஒன்றே குலம்என்றான்
புகழே உயிர்என்றான்
அன்றாடம் சாகின்றான்
தில்லிக்கே ஆட்பட்டான்
நன்றோடி தோழி?
நாயினுங் கேடானான்!

செந்தமிழ் காத்தான்
திருக்குறளில் ஆர்வத்தான்
இந்தி சுமக்கின்றான்
தில்லிக் கிளிக்கின்றான்
இந்தாடி தோழி
இவனா தமிழ்மறவன்?

மானம் இழப்பதிலும்
மாள்வதே மேல்என்பான்
ஆனதமி ழன்இந்நாள்
தில்லிக்கே ஆட்பட்டான்
பூனைக்குத் தோழி
புலியும் அடங்குவதோ!

( 40 )






( 45 )






( 50 )






( 55 )





( 60 )




( 65 )

மன்னை மாநாட்டுத் தீர்மானங்களின் கருத்து

தமிழ்நாடு தில்லியின் தனிஅடி நாடா?
வரியின் வாயிலாய் அறுபது கோடியை
இந்தா என்றே இங்கே கொடுக்கும்
தில்லியின் செய்கை தில்லு முல்லே!

பதினோராண்டில் பணத்தாள் அச்சிட்டு
முப்பத் தைந்து கோடியை முடக்கிய
தில்லியின் சுரண்டல் திடுக்கிட வைத்தது!

பணம் உறை நிலையம் ஆயுட் பதிவு
வாய்புகை வண்டி அஞ்சல் நிலையம்
வாணிக ஒற்றுமை நிலைய வாய்ப்பு
வகுக்கும் இவற்றின் வருமானத்தில்
செந்தமிழ் நாட்டுக்குச் சேர வேண்டிய
சிலகோடியையும் தில்லி விழுங்கிற்றே!

அயல்நாடுகளை அரித்து வாங்கும்
கடன்தொகை தனில்விழுக் காடு பார்த்துத்
தமிழ்நாட்டுக்குத் தருதல் வேண்டுமே!
அதையும் தில்லி அழுத்திக் கொண்டது!

பலதுறை களிலும் பதனோ ராண்டாய்
ஏமாற்றியபணம் எண்ணூறு கோடி.

இதனால் தமிழரின் உழைப்பும் இழப்பும்
வளர்ந்ததால் இங்கு வறுமை வளர்ந்தது!
நம்தொழி லாளரும் நடுத்தர மக்களும்
வாழ்வில் இடிந்து கண்ணீர் வடித்தனர்

பண்டை நாளில் உலகமே பார்த்து
வியக்கும் பேரர சாக விளக்கிய
தமிழ்த்திரு நாடு தில்லியின் தாளில்
அடிமை என்ற நிலையை அடைந்தது.

இந்தியா ஒருநா டென்று கூறித்
தமிழ ரைச்சிறு பான்மையராக்கி
உயிரை உரிஞ்சுகின்றது தில்லி!

அடிமை விலங்கை அகற்றிடும் விடுதலைக்
கொடிநட்டு மீட்சி கொள்ள வேண்டுவது
மிகவும் தேவை யாகி விட்டது!

இத்தமிழ் நாட்டில் இந்தியைத் தில்லி
புகுத்தி மனத்தைப் புண்ணாக் கிற்றே!
தமிழுக் குரிய தக்க இடங்களை
இந்தியே விழுங்கி ஏப்ப மிட்டது!
வண்டி நிலையம் வரும்பல அஞ்சல்
அட்டை பணம்அனுப் புத்தாள் அனைத்திலும்
இந்தி புகுத்தி இடர்வி ளைத்ததே!
அயல்இந் திக்கே ஆட்சிஏன் இங்கே?
தமிழர் நாட்டில் தமிழ்த்தாய் அடிமையா?

இந்தநிலையை இனியும் பொறோம் பொறோம்
இந்த மாநா டிவற்றை எல்லாம்
விளக்கிக் காட்ட விரும்புகின்றது.

நம்தமிழ் நாடு நாலு கோடி
மக்களைப் பெற்று வாழு கின்றது.
மற்றவை போலும் மாத்தமிழ் நாடும்
வல்லரசாக வாழலாம் அன்றோ!

ஐ,நா. என்ற நிறுவன மதனில்
உயர் தமிழ் நாடும்ஓர் உறுப்பை அடையும்
தகுதி அடைதற்குத் தடைதான் என்ன?
அயலா ருக்குநாம் அடிமை என்பதே?
உடனடியாக உரிமை வேண்டும்.

பணநிலை உயரவும் பழம்புகழ் உயரவும்
உயிர்நிகர் தமிழ்தான் உயர்வு கொள்ளவும்
உரிமை மக்களாய் உலகில் திகழவும்
வறுமை நீங்கி வாழ்வில் உயரவும்
இனத்தின் உரிமை இன்றியமை யாதது!

தில்லியின் பிடிப்புச் சிறிது மின்றி
உரிமைத் தமிழகம் உண்டாக்கு வதிலும்
எவ்வழி யும்நமக் கில்லை என்றும்
கருதுகின்றது பெரிது இம்மாநாடு!

உரிமை நாட்டை உடனே அடையவும்
உமது குறிக்கோள் நாடெலாம் அறியவும்
தமிழினம் தமிழ்நாடு தமிழர்நாம் என்ற
உணர்ச்சியை வளர்க்கவும் உடனடி யாக
நற்றமிழ் நாடில்லா நாவலந் தீவின்
படத்தை எரிப்ப தென்று பாரில்இம்
முழுமா நாடு முடிவுசெய்வ தோடு
எல்லாத் தமிழரும் இதிற்பங்கு கொள்க
எனவும் வேண்டு கின்றதிம் மாநாடு!
பட எரிப்புநாள் எந்நாள் என்பதைப்
பெரியார் குறிக்க என்று
அரியஇம் மாநாடு அறிவிக்கின்றதே!






( 70 )





( 75 )





( 80 )






( 85 )





( 90 )





( 95 )






( 100 )




( 105 )





( 110 )






( 115 )






( 120 )






( 125 )





( 130 )




( 135 )



( 140 )

வருக நேருவே!

வருக நேருவே வருக வருக!
பெருகு தமிழர்க்குப் பெரும்பகை நீவிர்;
வரவேற்க வேண்டும், மறுப்பது சரியன்று!

வருக நேருவே வருக! நீவிர்
உலகின் அரசியல் உணர்ந்த துண்டோ?
அரசியல் ஒழுக்கம் அடைந்த துண்டோ?
பதவி யாளர்க் குள்ளபண் பாடுகள்
உம்மிடம் உண்டா? உலகின் பொதுவறம்
உம்மிடம் உண்டா? செம்மையாய் எண்ணினால்
இல்லை, எதுவும் இல்லை என்பதே
என்றன் எண்ணம் ஆகும்! கேட்பீர்;-

ஓரி னத்தின் உயிரே ஆன
ஒருதனித் தொன்மொழி ஆன தமிழை
அழிக்க முடியுமா? அழிக்க எண்ணும்
எண்ணம் அறமா? இந்த உலகில்
இம்மனப் பான்மையை எந்தத் தலைவர்பால்
கண்டீர்! காட்ட முடியுமா உம்மால்
என்னதி கார எல்லையின் ஒருமொழி
வளர்ந்தால் என்றன் பதவியும் வளரும்
என்றுநாம் எண்ணுவர் எந்தத் தலைவரும்!

ஓரி னத்தை அதிலும் ஒண்தமிழ்ப்
பேரினத்தைப்பெரிதும்கூட் டழித்து
நும் அதிகார நுழைவைப் பெருக்க
எண்ணுவது சரியா? இந்த வண்ணம்

எந்த அரசியல் தலைவ ரிடத்தில்
கண்டீர்! அல்லது கல்வி, அறிவு
ஒழுக்கம் என்ப வற்றில் ஒன்று
நன்றெனச் சொல்லுமா இந்த நடத்தையை!

நாட்டு மக்களைப் பிரிவினில் நடத்தி
ஆட்சி நடத்தினால் ஆங்கிலன் என்றீர்
நீர்செயும் வேலை எப்படி? நினைத்தீரா?
தமிழர் எடுத்த தமிழ அமைச்சரைத்
   
தமிழரி னின்று தடுத்தாட் கொண்டீர்;
அவர்களை எமக்குப் பகைமை ஆக்கினீர்
அவர்கள் கையால் அல்லல் இழைத்தீர்;
எத்தனை நாளைக்கிம்முறை செல்லும்?
   
நீரைப் பிரித்தால் நிலையிற் பிரியுமா?
அரிசியைப் பிடுங்கினீர்; அயலார்க் களித்தீர்
இதுவே சிறிது முற்றினால் போதுமே
தமிழினம் ஒன்றுபட்டு உம்மைத் தாழ்த்த!

வருக நேருவே வருக! வந்து --
அரியஎம் அமைச்சர் உள்ளத் துள்ளே
உம்முள் ளத்தையும் ஒட்டி, உள்ள
நிலைமையின் துடிப்பை நேரில் உணர்க.
   
தமிழர்க்குச் சாவு வருவதைத் தமிழரின்
அமைச்சர் ஒப்புவார் அல்லர்!
தமிழர்கள் அவர்கள்!! தமிழகம் வாழ்கவே.







( 145 )




( 150 )





( 155 )




( 160 )







( 165 )







( 170 )






( 175 )





( 180 )







( 185 )

கொடுங்கோல் முறிக்கும் பெரியார் வாழ்க!

சில கேள்விகட்கு விடை

பன்னும் முகை -- மாப் பாண்டியன் காண்க
பாரதி தாசன் உரைப்ப திஃதே;
மன்னு தமிழே திராவிடம் என்று
திரிந்த தென்றால் மறுப்பவர் இல்லை.
அன்ன ''திராவிடம்'' என்ற பெயர்தான்
ஆயிரம் ஆண்டுகள் முன்னமே நமது
தென்பால் உள்ள ஐந்துநாடுகளையும்
தெரிவிப்பதாயிற்று உலகுக் கெல்லாம்.
  
அதேகா லத்தில் ''தமிழ்நா'' டெனில் அவ்
வைந்தில் ஒன்றையே குறித்த தாகும்
இதனைக் கருதியே பெரியார் கண்ட
இயக்கத் திற்குத் ''திராவிடர் கழகம்''
எதிரிக்கும் விளங்க -- எனப்பெய ரிட்டார்
எதையும் எதிர்ப்பவர் இதையும் எதிர்த்தார்
எதையும் செய்யார் எதையும் மறுப்பார்.
எதிர்ப்பும் மறுப்பும் நாட்டுத் தொண்டாக
   
திராவிட நாடா! திருத்தமிழ் நாடா?
எதைமீட்க எண்ணம்? என்ப தான
ஒருபெரும் கேள்வியைக் கேட்கின் றவர்கள்
ஒருசின்ன உண்மையை மறக்கின்றார்கள்

திராவிட நாடே தமிழ்நா டன்றோ
திருத்தமிழ்நாடே திராவிட மன்றோ!
திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர்.
தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பவர்.

திராவிட நாட்டினை ஒட்டி இருந்த
தெலுங்கு, கன்னடம் கேரளம் போனபின்
திராவிட நாடெனப் பெயர்கூறி இதனைப்
பிரிப்போம் என்று செப்புவதா என்பர்.
சுராவா விழுங்கிற்றுக் கேரள நாட்டையே!
காக்கையா தூக்கிற்றுத் தெலுங்கு நாட்டை?
இராமல் எங்கே போயிற்றுக் கன்னடம்?
தில்லி இழுப்புநோய்க் குள்ளே உள்ளன!

மீதி யான திராவிட நாட்டை
மேன்மை யான நம்தமிழ் நாட்டை
ஓது மிந்தச் சென்னை அரசை
ஒன்று பட்டுநாம் மீட்கும்ஓர் ஆற்றலைக்
காதாற் கேட்கும் கேரளம் முதலன
தில்லியின் காலை விடாதிருந் தாலும்
ஏதும் செய்ய முடியாதா நம்மால்?
இன்றுள ஆற்றல் அன்றைக்கும் இருக்கும்

நாவலந் தீவென நவிலும் படத்தை
நம்சென்னை அரசினை நீக்கி -- எரிப்பதால்
கூவுவார் தெலுங்கர் குதிப்பார் கேரளர்
கொடும்பகை கொள்வார் கன்னடர் என்று
நாவும் நோவ நவிலுகின் றார்சிலர்
நாங்கள் எரிப்பது படத்தையே படத்தையே
தீவில் உள்ள மக்களை அல்ல!
சிறிதும் இதனை மறந்திட வேண்டாம்.
   
படத்தை எரிப்பினும் கேரளம் முதலன
பகைக்கும் என்றால் பகைக்கட்டும் நன்றாய்ப்
படம் எரிப்பதன் நோக்கத்தை எண்ணிப்
பார்க்கட்டும்! காணட்டும்! பகைக்கட்டும் நன்றாய்த்
தடங்கொள் தமிழகத் தாய்க் குதவாத
தக்கைகள் பகைக்கட்டும் திருந்தட்டும் பின்பு!
கொடும்பகைத் தில்லி ஏந்தி டுங்கொடுங்
கோலை முறிக்கும் பெரியார் வாழ்கவே!



( 190 )





( 195 )






( 200 )






( 205 )





( 210 )






( 215 )





( 220 )





( 225 )





( 230 )



( 235 )





( 240 )


விடுதலை பெறுவது முதல்வேலை!

பெரியார் கட்டளை

( தனித்தமிழ் வண்ணம் )

தன தன தன தன தன தான
தன தன தன தன தன தான
தன தன தன தன தன தான      தன தானா

விடுதலை பெறுவது முதல்வேலை
அடிமையில் உழல்வது முடியாது
விழிதுயில்வதுமிகு தவறாகும் எழுவீரே

மிகுபுகழ் உடையது தமிழ்நாடு
மிகுதிறம் உடையது தமிழ்நாடு
மிகுநலம் உடையது தமிழ்நாடு      பழநாளே!

கொடியது கொடியது வட நாடு
குறுகிய செயலது வடநாடு
கொடுமையை விடுவது சிறிதேனும்   முடியாதே!

குவிபொருள் கவர்வது வடநாடு
பசியினில் உழல்வது தமிழ்நாடு
குறைவுடன் உறைவது தமிழ்வாழ்வில் உளதாமோ!

அடிமைகள் எறைமை வடவோர்கள்
நினைவதை விடுவது குறைவாகும்
அதைவிட ஒழிவது நலமாகும்      நிலமீதே!

அனைவரும் உறவினர் தமிழ்நாடார்
அனைவரும் ஒருநிகர் தவறாமல்
அலைகடல் எனஎழ இதுவேளை    விரைவீரே

நடைபெறு மிதுநம துயிர்வேலை
நரிகளும் நரிகளின் அடியாரும்
இடர்புரி வதில்மயிர் இழையேனும்   உடையாமோ?

நலிவினை உணருக! பெருவாழ்வின்
நரையினை உணருக இதுவேளை
நமைஎழ விழைபவர் திருவாளர்     பெரியாரே.



( 245 )





( 250 )





( 255 )




( 260 )





( 265 )




( 270 )

தென் பாங்குக்காரி

நாலடுக்கு மல்லிகையாம்
நாரெடுத்துப் பூத்தொடுக்கும்
சேலெடுக்கும் கண்ணாளே
திரும்பாதோ உன் முகந்தான்   செங்கேணி!
அடியே                  செங்கேணி!
இடும்போடி உன்மணந்தான்    செங்கேணி!

மேலடுக்கு மாடியிலே
நம்நாடு தாழையிலே
காலடுக்கு வெற்றிலையோ
கையடுக்குச் சீட்டாட்டமா      கங்காணி!
போடா போ               கங்காணி!
சொல்லடுக்கி நாட்டை விற்கும்  கங்காணி!

அஞ்சுவிரல் மோதிரமாம்
அங்கைமேல் பச்சைக்கிளி
கொஞ்சுகின்ற நேரத்திலும்
கொஞ்சமும்நீ கொஞ்சாததேன்   செங்கேணி!
அடியே                  செங்கேணி!
நெஞ்சந்தான் செங்கல்லோ     செங்கேணி!

பஞ்சணையில் அரசியலோ
சாதிநம்மைப் பழிக்கையிலே!
தஞ்சமென்ன பார்ப்பானிடம்
தமிழர்களை விலைக்கு விற்கும் கங்காணி
போடா போ               கங்காணி
தண்டாதே சட்டிச்சோறு       கங்காணி!

வண்டுக்குக் கும்மாளமாம்
வாயுதடு தேனூற்றாம்
கண்டுங்கா ணாததுபோல்
சாட்டுகின்றாய் நீட்டாண்மை    செங்கேணி!
அடியே                  செங்கேணி!
கற்றதெல்லாம் என்னிடமா     செங்கேணி!

தொண்டுக்கு முட்டுக்கட்டை
துட்டுக்குச் சிட்டானாய்
வெண்தாண்டி வேந்தன் நாட்டு
விடுதலைக்கு மறுதலையா     கங்காணி!
போடா போ               கங்காணி!
கெடுதலைக்குப் பாடுபட்டாய்   கங்காணி!





( 275 )





( 280 )





( 285 )





( 290 )





( 295 )




( 300 )



( 305 )