பக்கம் எண் :

பொங்கல் வாழ்த்துக் குவியல்

வாழ்க தமிழர் திருநாள்

(வண்ணம்)

தனனதந்த தத்தத்தனந்த தனதானா
தனனதந்த தத்தத்தனந்த தனதானா
தனனதந்த தத்தத்தனந்த தனதானா தனதானா

தளையவிழ்ந்து செக்கச்சி வந்த மலர் போலே
தமிழ்நிலஞ்சி றக்கப்பு ரந்த இறைபோலே
தலைசிறந்த முத்தைச் சொரிந்த அலைமேலே கதிர் காணீர்!

தவழ்குழந்தை கொட்டிப்பு ரிந்த நகைதானோ!
அழகுமங்கை நெற்றிக் கிருந்த ஒளிதானோ!
தகதகென்று பொற்றட்டெழுந்த வகையாதோ அறிவீரோ?

இளையசெங் கதிர்க்குப்பரிந்து தொழுவாரே
இதுவிதெங்கள் தைக்குச்சிறந்த முதல்நாளே
எனவிளைந்த நெற்குத்தி எங்கும் மகிழ்வாரே மடவாரே!

இலைமாங்கு ருத்துக்கள்தெங்கு கமுகாலே
எழிலுறும்செ ழிப்புற்எக்கள் தமிழ்நாடே
இசைஎழுந்து திக்கெட்டுமுந்தும் அதனூடே மகிழ்வோடே!

வளமிகும்பு லத்திற்றிரிந்து வருமாடே
வகையொடுங்க லத்திற்கறந்து தருபாலோ
டரிசியும்சு வைப்புக் கரும்பு பிழிசாறோடோ டனலாலே!

இனிதுபொங்க வைத்துக்கமழ்ந்த பொடியோடே
மலிவொடும்ப ருப்புச்சொரிந்த கடிதேனோ
அளவநன்றி றக்கிருந்திருந்தும் இளவாழை இலைமேலே!

உளவிருந்தி னர்க்குப் பகிர்ந்து பரிவாலே
உடனிருந்து ணப்பெற் றடைந்த சுவையாலே
உளமகிழ்ந்த தைச்சற் றியம்ப முடியாதே ஒருநாவால்!

உழவரன்பு ழைப்பிற் பிறந்த பருவாழ்வே
தழைக நன்றெ மைப்பெற்பு வந்ததமிழ்தானே
தழைக எங்கள் வெற்றிக்குகந்த பெருநாளே திருநாளே!





( 5 )






( 10 )





( 15 )






( 20 )






( 25 )
உழவர் திருநாள்

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்
விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்
முழவு முழங்கிற்றுப் புதுநெல் அறுத்து
வழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர் என்ற சொல்லிற்
பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் ''நாங்கள்
உழவரே'' என்றுவிழ ஒப்பி மகிழ்ந்தாரே!

உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஒட்டிவந்த
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று
செய்ய தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே!

தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம்
ஓரிழுப்புநோய் -- பொதுவின் உள்ளவிழைவே விழா!
ஏரெழுப்பும் புத்தம், புதுச்செல்வம் இட்ட பால்
பாரழைக்கப் பொங்கற் பயன் மணக்கவைத்தனரே!

அழகின் பரிதி உயிர்; அவ் உயிரை
முழுதும் நிறுத்தும் அமிழ்துதான் முத்து
மழை! உலகுதாய்! வளர்ப்புப் பாலே பயன்! நெய்
ஒழுக உண்டார் பொங்கல் எல்லாரும் ஒன்றியே!

ஆடை எல்லாம் அந்நாள் மடிப்பு விரித்தவைகள்!
ஓடை எனப் பாலும், உயர் குன்றரிசியும்
வாடைநெய்யும் பொங்கி வழியவே பொங்கலிட்ட
நாடுதான் கொண்ட நனிமகிழ்ச்சி செப்பரிதே!

இகழ்ச்சி அணுகா திலையில் அமிழ்தைப்
புகழ்ச்சி சொல்லிப் புத்துருக்கு நெய்யொழுகஉண்ட
மகிழ்ச்சியே இந்நாள் போல எந்நாளும் மல்க
மிகச்சீ ரியதமிழும் மேன்மையுற்று வாழியவே!





( 30 )





( 35 )





( 40 )




( 45 )






( 50 )
பொங்கல் நாளில் அவர்!

(சிந்து கண்ணிகள்)

செங்கதிர் எழுந்ததடி
எங்கும் ஒளி ஆனதடி
பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி -- அதோ
பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி

தெங்கில்இளம் பாளையைப் போல்
செந்நெல்அறுத் தார் உழவர்
அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி -- அவர்
சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி.

கட்டடித்தே நெல்லளந்தே
கட்டை வண்டி ஏற்றுகின்றார்
தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி -- அவர்
தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி.

கொட்டு முழக் கோடு நெல்லைக்
குற்றுகின்ற மாத ரெல்லாம்
பட்டுடை இழுத்துக் கட்டி
என்னருந் தோழி -- பாடும்
பாட்டெல்லாம் வெல்லமடி
என்னருந்தோழி.

முத்தமிழ் முழக்கமடி
எங்கணும் இசைக் கருவி
முத்தரிசி பாலில் இட்டார்
என்னருந் தோழி -- வெல்லக்
கட்டியுடன் நெய்யுமிட்டார்
என்னருந் தோழி.

தித்திக்கும்தே னும்பலாவும்
செவ்வாழையும் மாம்பழமும்
ஒத்துக் கலந்துண்டா ரடி
என்னருந் தோழி -- அவர்
ஒக்கலும் மக்களு மாக
என்னருந் தோழி.

எங்கணும் மகிழ்ச்சியடி
எவ்விடத்தும் ஆடல் பாடல்
பொங்கலோ பொங்கல் என்றார்
என்னருந் தோழி.
பொங்கிற்றடி எங்குமின்பம்
என்னருந் தோழி.

திங்களிது தையடியே
செந்தமிழ ரின்திருநாள்
இங்கிது போல் என்றைக்குமே
என்னருந் தோழி
இன்பம் நிலைகொள்ள வேண்டும்
என்னருந் தோழி.





( 55 )





( 60 )





( 65 )





( 70 )





( 75 )




( 80 )





( 85 )





( 90 )

தங்கக் கதிர் வாழ்க!

(சிந்து கண்ணிகள்)

கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி
தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே -- நம்
கையில் பயன்கொடுக்கத் தையும் பிறந்ததடி
காடெங்கும் கன்னல்ப ழக்குலை -- நல்ல
களந்தோறும் விளைந்தநெல் அளந்தனர் உழவர்
கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி
தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே

    கட்டாக ஏருழவர்
    பட்டாளம் கிளம்பிற்றே -- கட
   கடவெனச் சகடுகள் கடந்தன தெருவை! (கங்)

எங்கும்பு துநெல்லடி எங்கும்உ லக்கையொடு
மங்கையர்கள் செந்தமிழில் பாடினார் -- நல்ல
திங்கள் கிடந்ததுபோல் எங்கும் அரிசியடி
தீம்பாலில் இட்டதனை மூடினால் -- மிகு
தித்திப்பிறிகொ தித்த அந்த முத்துக்கடல் பொங் கிற்றடி
எங்கும்பு துநெல்லடி எங்கும்உ லக்கையொடு
மங்கையர்கள் செந்தமிழில் பாடினார்!

    தென்னா டெல்லாம் பொங்கல்
    பொன்னாய் விளைந்ததுவே பல
   தெருவிலுந் தமிழிலும் கருவிகள் தருமிசை (கங்)

அங்கங்கு வந்திடும்வி ருந்தும்க லந்தபடி
அன்பும்சி றந்தபடி உண்டனர் -- நமை
அண்டும் பகைவறுமை கண்டு நடுங்கும்படி
யான மனமகிழ்ச்சி கொண்டனர் -- அவர்
ஆடுவதும் பாடுவதும் அரங்கினிற் றென்பாங்கே
அங்கங்கு வந்திடும்வி ருந்தும்க லந்தபடி
அன்பும்சிறந்தபடி உண்டனர்

    தெங்கு கமுகு வாழை
    சிறப்பினைச் செய்தன இளஞ்
   சிறுவர்கள் சிறுமியர் நெறிதோறும் மகிழுவர்! (கங்)

மங்கா மகிழ்ச்சியாலே மாடுகன்று கழுவிப்
பொங்கல்வி ருந்தளித்த அன்பிலே -- அவை
அங்கு மிங்கும் ஓடக்கொங்குமலர் மாலை
ஆடிக் குலுங்கும் அவை கொம்பிலே இன்று
வாய்ந்த மகிழ்ச்சிஎன் றும் வாய்ந்தபடியே யிருக்க
மங்கா மகிழ்ச்சியாலே மாடுகன்று கழுவிப்
பொங்கல்வி ருந்தளித்த அன்பிலே நம்

    வளநாட்டில் செந்தமிழே
    வாழ்கவே வாழ்கவே மிகு
   மனநல மொடுதமி ழர்கள் நலமுறவே! (கங்)





( 95 )





( 100 )




( 105 )





( 110 )





( 115 )





( 120 )





( 125 )





( 130 )

புதுநாளில் புதுவாழ்வு

(சிந்து கண்ணிகள்)

பகற்பொழுதிற் பொங்கற் புதுப்
பானை வாங்கி வருகையி லே
நகைத்தபடி என்னை அவன் பார்த்தான் -- நான்
நாணத்தினால் உள்ளமெல்லாம் வேர்த்தேன்.

முகமறியாப் பெண் முகத்தில்
முத்துநகை வந்து மொய்த்தால்
மகளிரெல்லாம் என்ன நினைப்பார்கள்? -- என்
மனநிலையில் ஐயமுங் கொண்டார்கள்.

சேவல் கூவக் -- கீழ்க்கடலில்
செம்பரிதி தோன்ற -- அந்த
நாவற்குள நீரெடுக்கச் சென்றேன் -- அவன்
நம்திருநாள் இன்றல்லவோ என்றான்.

காவலுண்டு பற்பல பேர்
காணலுண்டு காளையின் மேல் --
ஆவலுண்டு காட்டிக்கொள்ளவில்லை -- அவன்
அகம் புகுந்தான் அதுமட்டுந்தான் தொல்லை.

நாட்டி லெங்கும் பொங்கல் வாழ்த்து
நடப்பதெலாம் தைத் திருநாள்
வீட்டினில்நான் பொங்கலுண்ணும் வேளை -- அதில்
வெல்லமாய் விளைந்தான் அந்தக காளை.

தோட்டத்திலோர் ஊஞ்சலிட்டுத்
தோகையரோ பாடுகையில்
பாட்டினில்ஓர் செந்தமிழும் ஆனான் -- அந்தப்
பண்ணிலெல்லாம் நல்லிசையாய் ஆனான்.

ஆடலிலும் பாடலிலும்
அன்னவனே என்நினைவில்
கோடைமழை போற் குளிரச் செய்தான் -- என்
கொள்கையிலே காதலினைப் பெய்தான்.

ஆடியபின் வீடு வரும்
அவ்விருண்ட தோப்பினிலே
ஓடிவந்தே கட்டிமுத்தம் தந்தான் -- அது
பொங்கல் திருநாள்அளித்த செந்தேன்.






( 135 )





( 140 )




( 145 )




( 150 )






( 155 )





( 160 )

அன்பர் வருநாள்

(அறுசீர் விருத்தம்)

பொங்கல் நாள் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் எழுக வாழ்க!
இங் கெனைத் தனிவி டுத்தே
ஏகினார் வருவா ரன்றோ?
அங்கையிற் பெட்டி தூக்கி
ஆளிடம் மூட்டை தந்து
பெங்களூர்த் தெருக்க டந்து
பெரு வண்டி நிலையம் சேர்வார்!

தைவிழா வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் தளிர்க்க! வாழ்க!
மெய் இங்கே உயர் அங் கென்றே
சென்றவர் மீள்வார் அன்றோ?
உய் என்று சீழ்க்கை காட்ட
உட்கார்ந்த படிஎன் அன்பர்
தையலை எண்ண, மெல்லத்
தவழ்ந்திடும் புகைத்தல் வண்டி!

தமிழர் நாள் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் தழைக! வாழ்க!
அமிழ் தூறத்தழுவுந் தோளார்
அகன்றனர் வருவா ரன்றோ?
சுமை 'எரிமலை' ஒன் றங்குத்
தொடர்மலை இழுத்த தென்ன
இமைப்பிற்பக் கத்தூரில் வண்டி
இச்சிச் சென்றோடி நிற்கும்!

தைப் பொங்கல் வருக! கீழ்ப்பால்
தனிக் கதில் எழுக! வாழ்க!
ஒல்பிலா அன்பர் என்றன்
உயிர்காக் கவருவா ரன்றோ?
இப் பக்கம்வரும்அவ் வண்டி
எதிர்ப்பக்கம் ஓடும் காடு
உட்பக்கம் பார்த்தால் வண்டி
ஓடும்! ஓடாது காடு!

உழவர் நாள் வருக; கீழ்ப்பால்
ஒளிச்செல்வன் எழுக! வாழ்க!
வழங்காமல் சென்றார் இன்பம்
வழங்கிட வருவா ரன்றோ?
முழங்கியே நிற்கும் வண்டி
முறுக் கோமப் பொடி ஆரஞ்சிப்
பழம்விற்பார் -- செய்தித்தாள்தான்
பசிதீர்க்கும் அத்தா னுக்கே!

பாற்பொங்கல் வருக! கீழ்ப்பால்
பகலவன் எழுக! வாழ்க!
வேற்றாள் போல் சென்றார் அன்பு
விளக்காக வருவா ரன்றோ?
நேற்றேறி இருப்பார்! இவ்வூர்
நிலையத்தை அடைவார் இன்று
நூற்றைந்து கூலியாட்கள்
நுழைவார்கள் கூலி என்றே!

பெரும்பொங்கல் வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் பிறக்க! வாழ்க!
இரும்பு நெஞ்சத்தார் சென்றார்
இன்புறவருவா ரன்றோ!
திரும்பிய பக்க மெல்லாம்
தெரிந்தவர் காண்பார்! அத்தான்
பதிந்துகட் டணச்சீட் டீந்து
பின்புற முகப்பில் நிற்பார்.
திருவிழா வருக! கீழ்ப்பால்
செங்கதிர் எழுக! வாழ்க!
உருமழைத் துறைவார் என்றன்
உளம்பூக்க வருவார் அன்றோ?
தெருவெல்லாம் வண்டி நிற்கும்
நல்லதாய்த் தெரிந்து சத்தம்
ஒரு ரூபாய் பேசி, மூட்டை
யுடன்எறி அமர்வார் அத்தான்!

பொன்விழா வருக! கீழ்ப்பால்
புதுக்கதிர் எழுக! வாழ்க!
அன்பிலார் போற் பிறந்தார்
ஆர்வத்தால் வருவா ரன்றோ?
முன்னோக்கி வா என்பார் வண்
டிக்காரர்! முன்நகர் ந்தால்
பின்னோக்கிக் குதிரை போகும்
பிழை செய்தார் நெஞ்சம் போலே!
இனிக்கும்நாள் வருக! கீழப்பால்
இளங்கதிர் எழுக! வாழ்க!
தனியாக்கிச் சென்றார் உள்ளம்
தவிர் த்திட வருவார் அன்றோ?
புனையப் பொங்கற் புத்தாடை
வாங்கிடப் போவார் அன்பில்
நனையத்தான் வேண்டும் என்பேன்
நன்மாலை வந்ததாலே!





( 165 )





( 170 )



( 175 )





( 180 )





( 185 )




( 190 )




( 195 )




( 200 )





( 205 )





( 210 )





( 215 )





( 220 )






( 225 )




( 230 )




( 235 )




( 240 )

வாழிய செந்தமிழ்

              (எண்சீர் விருத்தம்)

சிரித்தபடி புறப்பட்டான்! அவன்
சிரித்தனவே மலரெல்லாம்! சோலையெல்லம்!
ஒருத்தன் அவன்! அன்றன் றுபுதியன்! இந்நாள்
உவகைதரும் தைப்பொங்கல் நாளைச் செய்தான்!

விரித்தபடி புறப்பட்டான் ஒளியை; வாழ்வை
விளைத்தபடி எழுந்திட்டான் கடலின் மேலே!
தெருத்தோறும் தமிழர்விழா விளைக்கவந்த
சீரானை வாழ்த்திநாம் நீராடோமோ!

வானெல்லாம் ஒளியாக்கி வையத் துள்ள
மலையெல்லாம் கடலெல்லாம் வயல்க ளெல்லாம்
கானெல்லாம் மூவேந்தர் வழியில் வந்ந
கடும்போரில் இடம்பெயராத் தமிழ்மக்கள்
ஊனெல்லாம் உள்ளத்தின் உள்ள மெல்லாம்
ஒளியாக்கி உயர்ந்தானை வாழ்த்தி வாழ்த்தித்
தேனெல்லாம் வண்டுண்டு யாழ்மி ழற்றும்
செந்தா மரைக்குளத்தில் நீராடோமோ.






( 245 )





( 250 )



( 255 )


              (அறுசீர் விருத்தம்)



செங்கதிர் வாழ்த்தி மாதர்
செழும்புன லாடு கின்றார்!
அங்கோர்பால் நன்செய்ச் செல்வம்
அறுவடை செய்த டித்து
வங்காளக் கோணியிட்டு
மலைநிகர் மாடிணைக்கப்
பொங்கல்நாள் வாழ்க என்று
புறப்படும் புதுநெல்வண்டி.

இன்புறக் கூடந் தன்னில்
இறக்கிய மூடை கொட்டி
அன்புடன் பொங்கற் கென்றே
அளந்திடும் மணாளர் தோள்கள்!
மன்னுந்தோள் வாழ்த்தி அள்ளும்
மங்கைமார் மலர்ச்செங் கைகள்!
தென்பாங்கு பாடு கின்றார்
நெற்குற்றும் சேயிழை மார்!









( 260 )





( 265 )




( 270 )

              
(பஃறொடை வெண்பா)


விந்தியத்தின் தென்பால்
விரி்முக் கடல் முழங்கும்
முந்தைத் தமிழர்
முதுநா டணிநகர்கள்,
சிற்றூர், தெருக்கள்,
திகழ்இல்லந் தோறுமே
குற்றிய தும்பைப்பூப்
போல் அரிசி கொண்டமட்டும்
ஆப்பயந்த பாலில்
அமிழ்தாகப் பொங்கிவரப்
பூப்பயன்வாய் மாதர்கள்
பொங்கலோ பொங்கலென்று
வெல்லம் நறுநெய்
விரைப்பொடியோ டிட்டிறக்கி
நல்லதேன் முப்பழங்கள்
நல்கி, விருந்தோடும்
உள்ளம் மகிழத் தாம்
அள்ளூர உண்பவர்,
வாழியர் எங்கள்
வளநாட்டுச் செந்தமிழர்!
வாழிய செந்தமிழ்' என்றார்!








( 275 )




( 280 )




( 285 )




( 290 )

செங்கதிர் வாழ்க!

பொங்கற் புதுநாள் முகமலர்த்திப் பொன்னான
செங்கதிர்ச் செல்வன்திரைகடலின் மேலெழுந்தான்;
எங்கட்குப் புத்துயிரும் நல்கிப் பெருவாழ்வு
தங்கப் புரிந்த தகைமையினை வாழ்த்துவமே!

மூடு பனிவிலக்கி மொய்த்த குளிர்விலக்கி
நாடு நினைத்தஎலாம் நன்கு தொழிற்படுத்தித்
தோடவிழ்த்துச் செம்பரிதி பொன்வெய்யில்தூவு கின்றார்
வீடுமலி பொங்கல் விழாப்பாடி வாழ்த்துவமே!

சேற்றிற்செந் தாமரைபோல் செங்கதிர்க்க ருங்கடலில்
தோற்றஞ்செய் தான்எங்கள் தோகையர்கள் நீராடி
மாற்றுப்பொன் னாடை மடிப்பு விரித்துடுத்தே
ஊற்றியபாற் பொங்கல் உவந்துவந்து வாழ்த்துவமே!

அரும்பும் இளநகையார் அங்கங்கே செந்நெல்,
கரும்பு, கனிவாழை, தேன்நெய், தயிர்பால்
தரும்பயன்மேற் பொங்கும் தைப்பொங்கல் உண்ண
வரும்பரிதி நாம்பாடி வாயார வாழ்த்துவமே!

காடெல்லாம், நாடுநகர், வீடெல்லாம், வீட்டுமேல்
ஓடெல்லாம் பொன்னாக்கி ஆர்கலிமேல் உற்றகதிர்,
ஆடலினால் பாடலினால் ஆர்த்த பெரும் பொங்கல்
கோடல் மகிழ்ச்சியினால் கூடிநாம் வாழ்த்துவமே!

( 295 )





( 300 )





( 305 )





( 310 )

வருவாய் கதிரே!

வருவாய் வருவாய் கதிரே -- தை'ம்
மதியே ஒளியே வருவாய்
திருவே உணர்வே வருவாய் -- எம்
செயலின் தெளிவே வருவாய்
இருளும் பனியும் குளிரும் -- பல
இடரும் தொடரா வகையே
புரிவாய் சுடரே வருவாய் -- எம்
பொங்கற் புதுநாள் வருவாய்!

விலகாப் பாசிப் பொய்கை -- மிசை
விரியும் செந்தாமரை போல்
அலைசேர் நீலக்கடல் மேல் -- கதிர்
அவிழும் பகலே வருவாய்
கலையின் முதலே வருவாய் -- எம்
கண்ணிண் மணியே வருவாய்
மலையும் காடும் தெருவும் -- ஒளி
மருவப் புரிவாய் வருவாய்!

காவிரி ஆற்றுத் தண்ணீர் -- எம்
கழனிகள் தோறும் பாய்ச்சி
ஆவலின் நாட்டைப் பாடி -- நல்
அடைவுறும் எருதால் உழுதே
தூவிய விதையும் காத்தோம் -- வயல்
சுற்றிலும் வேலி அமைத்தே!
ஆவன செய்தோம் மடைநீர் -- வடி
வாக்கித் தேக்கியும் வந்தோம்!

ஆழக் கிடங் கெடுத்தே -- நிறை
வாகத் தண்ணீர் தேக்கி
வாழை, கரும்பு, நட்டோம் -- கால்
வைத்தே சாரம் செய்தோம்
தாழப் புகைத்த மஞ்சட் -- பயிர்
தழையத் தழையக் காத்தோம்!
வாழ்வின் பயனைக் கோரி -- உன்
வரவை நோக்கி யிருத்தோம்!

வருவாய் வருவாய் சுடரே -- பனி
மாற்றித் தோன்றிய மணியே
புரைதீர் வாழ்வின் பயனே -- யாம்
புதுநெல் அறுவடை தெய்தோம்
கரும்பு வெட்டி சேர்த்தோம் -- செங்
கனியோடு வாழை சாய்த்தோம்
திரும்பும் இடம் எங்கெங்கும் -- நல்
திருவே புரிவாய் வருவாய்!

எருமைக் கண்போல் நாவற் -- கனி,
இலந்தை. மாதுளை, கொய்யா,
பெருமுந்திரியின் பருப்பும் -- தேன்
பிழிவும் யாண்டும் கொழியும்!
மருவின் தொழுந்தும் மலரும் -- மணம்
மருவத் திருவே வருவாய்
வருவாய் வெயிலே அழகே -- எம்
வாழ்த்துக் குரியோய் வருவாய்!

புதுநெல் லரிசியினோடு -- பால்
பொங்கல் பொங்கிட எங்கும்
அதிர்வளை மங்கைமார்கள் -- தம்
அன்பும் தேனும் கலந்து
முதிரா வழுக்கை இளநீர் -- நனி
முற்றற் கழையின் சாறும்
உதிர்மா துளையின் முத்தும் -- தந்
துவக்க உலக்க நின்றார்!
பொன் வண்ணப்புத் துருக்கு -- நெய்
புறங்கை ஒழுகப், பொங்கல்
இன்பம் பொறுமா றுண்போம் -- எம்
இனிதாம் பொழுதே வருவாய்
சொன்னோம் பொங்கல் வாழ்த்தே -- எம்
தூய்மைத் தமிழால் நாங்கள்
தென் பாங்கடைந்த செல்வம் -- எம்
திராவிடம் வாழிய நன்றே!






( 315 )





( 320 )




( 325 )





( 330 )





( 335 )




( 340 )





( 345 )




( 350 )





( 355 )





( 360 )




( 365 )





( 370 )