பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு109

Untitled Document
687 பட்டப் பகல்வரும் பேயாம் - ஒரு
     பக்கமே பார்க்கப் பழகிய பேயாம்;
முட்டிக் குனிந்திடும் பேயாம் - அது
     முன்னேற்றம் கண்டு முடமாகும் பேயாம்

688 கண்ணிலே காணும்பேய், ஐயா! - இரு
     காலும் நிலத்தில் பதியும்பேய், ஐயா!
நிண்ணய மில்லாப் பேய், ஐயா! - நடு
     நீதி நெறிகாணா நீசப்பேய், ஐயா!

689 கோயிலின் வாசற் படியில் - நிதம்
     கும்மாளி கொட்டிக் குதித்தாடி நிற்கும்;
வாவிக் கரையிலும் நிற்கும் - அங்கு
     வந்த மனிதரை ஓட்டித் துரத்தும்.

690 பிள்ளைமார் வீட்டிலும் தங்கும் - உயர்
     பிராமணர் வீதியில் எங்குமே சுற்றித்
துள்ளி விளையாடி நிற்கும் - அவர்
     சோமன் புடவைகளிற் சுற்றிக் கிடக்கும்;

691 மண்கலத் துள்ளே இருக்கும் - அதில்
     வைத்த பண்டத்தில் மறைந்தும் இருக்கும்;
வெண்கலம் வெள்ளிபொன் கண்டால் - உடன்
     வெட்கம் அடைந்து வெளியேறிப் போகும்.

692 வேதக் கடலைக் கலக்கும் - அதில்
     வேண்டும் விதிவலை வீசிப் பிடிக்கும்,
சாதிப் பிளவை உண்டாக்கும் - எங்கும்
     'சண்டாளா! ' 'சண்டாளா! ' என்றே முழங்கும்.

693 வஞ்சம் பொறாமைகள் எல்லாம் - அதை
     வட்டமாய்ச் சுற்றி வரும்பரி வாரம்;
நெஞ்சம் நடுங்குதே, ஐயா! - அதன்
     நிட்டூரம் சொல்லி முடியாதே, ஐயம்!

694 கூடியிருக்க வொட்டாது - நண்பர்
     கொண்டு தருவதை உண்ண வொட்டாது;
தேடி வருவோரை அன்பாய் - வீட்டுத்
     திண்ணையில் உட்கார வைக்க வொட்டாது.