பக்கம் எண் :

38கவிமணியின் கவிதைகள்

Untitled Document
224 மங்கையர்க்கும் ஆடவர்க்கும்
     மணமுடிப்போமே! - மன்னர்
தங்கமுடிமீதும் நாங்கள்
     தங்கி வாழ்வோமே!
225 கரும்பினிலும் இனியரசம்
     கருதி வைப்போமே! - அதை
விரும்பிவரும் நண்பருக்கு
     விருந்தளிப் போமே!
226 ஈசனருள் வேண்டிநிதம்
     இணையடி போற்றி - நல்ல
வாசமெழு தூபதீபம்
     வழங்கி நிற்போமே

வேறு
227   மண்ணிலிரந்து பொருள் வரினும் - அதை
     மாற்றி மணம்பெறச் செய்திடுவோம்;
கண்ணுக் கினிய நிறங்களெல்லாம் - விண்ணிற்
     காணுங் கதிரிடம் பெற்றிடுவோம்.

228 வண்டின் வரவெதிர் பார்த்துநிற்போம் - நல்ல
     வாசனை வீதியில் வீசிநிற்போம்
உண்டு களிக்க மது அளிப்போம் - சற்றே
     உட்காரப் பீடமும் இட்டுவைப்போம்.

229 மங்கைய ரோடு குமரரையும் - மனம்
     வாய்த்த மணஞ்செய்து வாழவைப்போம்
தங்கமும் பொன்னும் மணிகளுமே - எம்மை
     தாழ்ந்து வணங்கமேல் தங்கிடுவோம்.

230   ஈசன் அடியில் பணிந்திருப்போம் - அவர்
     ஏந்து முடிமீதும் ஏறிநிற்போம்;
பூசனை செய்யும் அடியவரின் - உள்ளம்
     பொங்கு களிப்பெலாம் காட்டி - நிற்போம்.

231 மன்னருங் கண்டெதிர் வந்திடுவர் - கட்டி
     மார்போ டணைத்து மகிழ்ந்திடுவர்.
இந்நிலத் தின்பம் பெருகிடவே - நாங்கள்
     என்றும் உயிர்வாழ்ந் திருப்போமம்மா!