முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 481 |
Untitled Document
நாஞ்சில்நாடு இப்போது திருவிதாங்கூர் இராச்சியத்தின் தெற்குப் பகுதியில் உள்ளது. பெரும், புகழ்பெற்ற ‘குமரி’ இந்நாட்டினகத்தே தான் இருக்கிறது. இந்நாட்டினர் அனைவரும் தமிழார்வம் மிக்கவர்கள். இன்றும் இந்நாட்டில் தமிழ்மொழியே வழங்கி வருகிறது. இன்றிருப்பது போலவே சுமார் 1800 ஆண்டுகட்கு முன்பும் தமிழ் கூறு நல்லுலகத்தின் பகுதியாகவே இந்நாடு விளங்கிற்று. தொல்காப்பியத்தின் பாயிரத்தில்,
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்உலகத்து | என வருவதைக் கொண்டு மேற்கூறியதன் உண்மை தெளியலாம். இப்பாயிரத்தில் வரும் அதங்கோட்டாசான் குமரிக்கருகிலுள்ள திருவிதாங்கோடு என்னும் ஊரினர் என்பதும் இங்கேமனங்கொளத்தக்கது. பாண்டியனுக்குரியதாகக் ‘குமரிச்சேர்ப்பன்’ என்று ஒரு பெயர் திவாகரத்தில் காணப்படுகிறது. இப்பெயரால், இந்நாடு தொன்றுதொட்டுப் பாண்டியனுக் குரியதாயிருந்தமை புலனாம். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் குறித்த அச்சமும் புகழும் தெற்கின்கண் உள்ள கன்னிக்குத் தெற்கும் பரவுகவென அப்பாண்டியனைக் காரிகிழார் என்ற புலவர் பாடுகின்றார் (புறம் 6). பாண்டியனுக்கு உரியதாகவே குமரியை அடுத்துள்ள பஃறுளியாறுங் கூறப்பட்டுள்ளது (புறம் 9). தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் குறித்து,
தென்குமரி வட பெருங்கல் குணகுட கடலா எல்லைத் தொன்று மொழிந்து தொழில் கேட்ப | என மதுரைக்காஞ்சி என்ற நூல் (70-72) கூறுகிறது. இங்கே ‘தொன்று மொழிந்து’ என்பது ‘மிகவும் பழங்காலந்தொட்டுத் தொடர்புடையரா யுள்ளமையைப் பாராட்டிச் சொல்லி’ எனப் பொருள்படுதலாலே, பாண்டியர்களுக்கு அநாதியாகவே தென்குமரியைச் சார்ந்த நாடு உடைமையாயிருந்த தென்பது விளங்கும். | |
|
|