போல இவ்வளவு நாட்கள் கழித்துக் கூடுகள் திறக்கின்றன இப்போது.
இதோ உங்கள் கைகளில் குக்கூ சங்கீத மாலை.
ஊர்த்திரைக்குப் படம் வெளிவரும் முன் ஒரு முன்னோட்டக் காட்சி
நடப்பது போல இந்த முன்னுரைக் காட்சியில் மீராவின் குக்கூ எனக்குப்
பார்க்கக் கிடைத்திருக்கிறது. என்ன சொல்வது இப்போது ! சுருக்கமாய்
சொல்வதெனில் மீரா மீராதான். மீசையில் செம்மண் படுவதெனில்
விழுந்தாலும் மகிழ்ச்சி அவர்க்கு ! (அவருடைய என்னுடைய சிவகங்கை
மண் செம்மண் - விழுந்தும் எழுந்தும் புகழ் பெற்ற வரலாற்று மண்.)
எனவே கவிஞரின் குக்கூக்கள் இதோ செம்மண் மேனி துலங்க எழுந்து
வருகின்றன.
இவற்றிற்கு ஜப்பானிய உடையும் இல்லை ; நடையும் இல்லை. மூன்று
வரிச் சட்டங்களும் இல்லை. படிமம் கட்டாயம் என்ற சட்டகமும் இல்லை.
தமிழ்ச் சாயல், தமிழ்ப்பாட்டு, தமிழ்க் காற்று - இவை ‘ஹைகூ’ என்று
கூவுமா என்ன? ‘குக்கூ’ என்றுதான் கூவும். மீரா மீராதான் !
நகை நடைகள், சிந்தனை நறுக்குகள், மனப்பதிவுகள், விமர்சனச்
சாட்டைகள், மெல்லிய புனைவுகள், விரித்து வைத்த மனித நேய
ஆலாபனைகள் - என்று மீராவின் முகவரிகள் குக்கூ களில் சங்கதிகளாய்
ஆவர்த்தனங்களாய் ‘கலக்குகின்றன’. இதுவரை தமிழ் ‘ஹைகூ’
கவிதைகள் காணாத (இயற்கைப்) புனைவு அற்ற பொதுமொழி, கிராமத்து
அன்னிய வசீகரம், மனிதத்தன்மை பளிச்சிடும் எளிமை போன்ற
(மீராவின் வழக்கமான) ‘முத்திரை’களில் இந்த குக்கூக்கள் புதுப்பொலிவு
பெற்றுத் திகழ்கின்றன.