ஒரு பனிக் கால மௌனத்திற்குப் பிறகு மீரா மீண்டும் குயிலாகிக் ‘குக்கூ’ என்று கூவியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. மீராவின் கவிதைகளைத் தமிழ்நாட்டுக் காலவுணர்வைக் காட்டும் மானிகள் என்றே கூறலாம். அவருடைய தொடக்கக் காலக் கவிதைகள், அப்போது கிளர்ந்தெழுந்த தமிழின உணர்வுகளைப் பிரதிபலித்தன. அப்போது அவர் எழுதிய, தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்? என்ற வரி அறிஞர் அண்ணாவால் ‘திராவிட நாடு’ ஏட்டில் மேற்கோளாகக் காட்டப்பட்டுப் பாராட்டப்பட்டது. பின்னர் அவர் எழுதிய கவிதைகள், அக்காலத் தமிழ்க் கவிஞர்களின் சமூக உணர்வையும், பொதுவுடைமை நாட்டத்தையும் புலப்படுத்தி நிற்கின்றன. ஆனால் மீராவுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. அதனாலேயே இந்த வெள்ளங்களில் கரைந்து போகாமல் அவர் கரையேறிவிடுகிறார். திராவிட இயக்கங்கள் நாற்காலியில் அமர்ந்து காலிழந்து போன போது அவர் அந்த இயக்க ஈடுபாட்டிலிருந்து விலகிப் பொதுவுடைமையின் பக்கம் போய்விட்டார். |