பக்கம் எண் :

188நாமக்கல் கவிஞர் பாடல்கள்

V. சொல்லின் பெருமை

136. மகனுக்கு

என்மகனே! உன்வாழ்வு சிறக்க வேண்டின்
       எப்போதும் தெய்வபக்தி இருக்க வேண்டும்.
நன்மகன்என் றுனையாரும் புகழச் செய்யும்.
       நானும்உன் நற்றாயும் மகிழச் செய்யும்.       1

தெய்வபக்தி தீமைசெய்ய இடந்த ராது
       தீங்குவர நேர்ந்தாலும் இடிந்திடாது.
தெய்வநினைப் பில்லாத நெஞ்சி னோரே
       தீங்கிழைக்க ஒருசிறிதும் அஞ்சி டாதார்.       2

பலநாமம் அத்தெய்வம் அணிந்திட்டாலும்
       பார்க்கின்ற கோயிலெல்லாம் பணிந்திட்டாலும்
குலதெய்வம் நமக்குண்டு குறிப்பாய் ஒன்று
       கொள்கையுடன் பூசித்தல் சிறப்பாம்என்றும்.       3

குடும்பத்தில் நற்பெயரைக் காக்க வேண்டும்
       கூடுமெனில் சிறப்பின்னும் சேர்க்க வேண்டும்
இடும்பைக்கே ஆளாக நேர்ந்திட் டாலும்
       இழிவான செயல்எதிலும் சேர்ந்தி டாதே.       4

உழைப்புக்கிங் கொருபோதும் அஞ்ச வேண்டாம்
       ஊனுடைக்கே எவரையும்நீ கெஞ்ச வேண்டாம்
பிழைப்புக்கா எத்தொழிலும் இழிந்த தன்றாம்
       பின்தொடரும் பழிபாவம் ஒழிந்த தென்றால்.       5

மூத்தவர்கள் யார்வரினும் பணிவு காட்டி
       முறையோடு பேசுவதில் தணிவு கூட்டி
ஆர்த்தழைத்தே ஆசனம்தந் தமரச் செய்வாய்
       அதுவாகும் நற்குடியின் குமரன் செய்கை.       6

நகைமுகம் இனிய சொலும் நல்ல செல்வம்
       நஞ்சமன்ன வஞ்சரையும் நயந்து வெல்லும்
பகைஎவரும் ஆகாமல் பார்த்துக் கொள்க
       பகைநேரில் சமரசமாய்த் தீர்த்துக் கொள்க.       7