VI. திருநாட் சிறப்பு 157.புத்தாண்டு தமிழ்த் தெய்வம் சித்திரைமாதத்தில் புத்தாண்டு தமிழ்த் தெய்வம் திகழும் திருநாட்டில், இத்தினம் அந்தத் திருநாள் ஆதலின் ஈசனைப் போற்றி வரம்கேட்போம். 1 கொல்லாநோன்புடன் பொய்யா விரதம் கொண்ட தமிழ்க்குணம் குன்றாமல் எல்லா மக்களும் இன்புறக் கோரிடும் எண்ணம் வளர்த்திடப் பண்ணிடுவோம். 2 வீரப்படைகளின் தோள்வலியும் முன்னே வெற்றிகள் கண்டிட்ட வாள்வலியும் போரில் பயன்பட மாட்டா என்கிற புத்தியை எங்கும் புகட்டிடுவோம். 3 கோபத்தைமூட்டிடும் பேச்சுகளும் வெறும் குற்றங்கள் சாட்டிடும் ஏச்சுகளும் தாபத்தை நீடிக்கச் செய்யுமல் லால்வேறு தந்திடும் நன்மைகள் ஒன்றுமில்லை. 4 வள்ளல்மகாத்மா காந்தியின் வாழ்வே வள்ளுவன் தந்த திருக்குறளாம். தெள்ளிய உண்மையைத் தேர்ந்து நடத்திடத் தெய்வத் திருவருள் நாடிடுவோம். 5 உலகத்தில்போர்ப்பயம் நீங்கிடவும் மக்கள் உள்ளத்தில் அன்பறம் ஓங்கிடவும் சுலபத்தில் கண்டு சுகம்பெறக் காந்தியைச் சுபதினத்தில் வாழ்த்தித் தொழுதிடுவோம். 6 |