III. சான்றோரைப் போற்றுதல் 35. இளங்கோவடிகள் முத்தமிழும் தித்திக்க முழங்கும் காதை மூவேந்தர் ஆட்சிமுறை அளக்கும் செங்கோல் ‘பத்தினியென் றொருசொல்லைப் பகரும் போதே பாரெங்கும் வேறெவரும் அல்ல வென்னும் உத்தமிஅக் கண்ணகியின் ஒளிஉண் டாக்கி உள்ளத்தில் தெள்ளறிவை ஊற்றும் செஞ்சொல், இத்தகைய காவியத்தை எமக்குத் தந்த இளங்கோவை உளங்குளிர எண்ண வேண்டும். 1 ‘நெடுங்காலம் அறம்வழுவாப் பாண்டி நாட்டில் நீதிகொன்ற நீதானோ மன்னன்?‘ என்று கடுங்கோபம் கனல்பறக்கக் கடிந்து சொல்லிக் கற்பரசி தன்பிழையைக் காட்டக் கண்டான்; அடங்காத மானம்வந்(து) அழுத்திக் கொள்ள அக்கணமே அறியணையில் உயிரை நீத்த இடங்காணும் தமிழரசின் இயல்பைக் காட்டும் இளங்கோவை மறப்போமோ எந்த நாளும். 2 பண்டிருந்த தமிழர்களின் பரந்த வாழ்வில் பலகலையும் பரிமளித்த உண்மை பாடிக் கொண்டிருந்த அறநெறியின் சிறப்பும் கூறி, ‘கொடுங்கோலை எதிர்த்தகற்றும் திறமும் கொண்ட பெண்டினத்தின் வழிவந்தோம் நாங்கள்‘ என்னும் பெருமையையும் தமிழ்மக்கள் பெறுவ தாக்கி எண்டிசையும் புகழ் ஒலிக்கும் சிலம்பைச் சொன்ன இளங்கோவின் திருநாமம் என்றும் வாழும். 3 36. கம்பன் எண்ணிஎண்ணித் திட்டம்போட் டெழுதி னானோ! எண்ணாமல் எங்கிருந்தோ கொட்டி னானோ! |