| |
| |
| | சண்டிலியின் கணவன் வருகை | |
| | | |
| | மழைவளர் சாரல் மாமலைப் பொதியில் குழலின் இனிய குரலிசை கேட்டுத் தன்வய மிழந்து தமிழிசை வேட்டுப் பயிலும் ஆர்வம் மீக்கூர் பாவை | |
| | அயில்வேல் விழியள் மயிலியள் சண்டிலி | 5 |
| | பிரிவினைப் பொறாஅன் பேதையின் கணவன் துருவன் என்பான் தோகையைக் காணும் ஆர்வல னாகி அணிதிகழ் மாடஞ் சேர்தரு மறுகுகள் செறிந்தெழில் விளங்கும் | |
| | வேங்கை நகரெனும் வியனகர் புகுந்தோன், | 10 |
| | ஆங்கண் ஓங்கிய அகல்வாய் மாளிகை வதியிடன் குறுகிஅம் மங்கையைக் கூடிப் புதுமகிழ் வெய்திப் பூரிப் புற்றனன்; | |
| | | |
| | சண்டிலி நிகழ்ந்தன கூறல் | |
| | | |
| | ஓதும் பொருட்டாற் காதலற் பிரிந்த | |
| | மாதும் கொழுநன் வரவால் தழைத்த | 15 |
| | நெஞ்சினள் அவற்கு நிகழ்ந்தன கூறுவோள் பஞ்சியின் மெல்லடிப் பாவை பூங்கொடி வஞ்சியின் அருளால் வளர்தமி ழிசையில் விஞ்சிய புலமை விளங்கிடப் பெற்றதூஉம், | |
| | பயிற்றிய பூங்கொடி பழகிய முறையதூஉம், | 20 |
| | செயற்றிறம் பழுநியோள் செம்மனத் தொண்டும் பண்பும் அன்பும் பண்ணிசைத் திறனும் மன்பதை உரைபுகழ் மாண்பும் பிறவும் | |
| --------------------------------------------------------------- |
| | மீக்கூர் - மேம்பட்ட, பொறா அன் - பொறுக்கமாட்டாதவன். பழுநியோள் - முதிர்ந்தவள், மன்பதை - மக்கள். | |
| | | |