கொடியதோர் உள்ளத்தைக் கொலை செய்; இதோவாள்! கயமையைக் கைதுசெய்; கடுந்தண்டனை கொடு ‘எல்லாம் எனக்கே’ என்ப தினிமேல் எத்தர் ஏய்ப்புரை; இழிசினர் வழக்கு ....... ..... ..... ...... ...... ...... ...... ...... முதலாளித்துவ முதுகெலும் பைமுறி! பாடுபடு வோர்க்கே பாரெனப் பாடு சமத்துவச் சங்கொலி செய்து சமைத்திடு தம்பி புதியதோர் தரணியே” என்கிறார். சமுதாயத்தில் ஏற்றமும் தாழ்வும் - ஏணியும் கேணியும் - மேடும் பள்ளமும் இருப்பின் அதைத் தகர்த்தெறி; புறப்படு என்ற உணர்ச்சியை எழுப்பும் இக் கவித்துளியை எப்படி மறப்பது? போதும். இனிமை காண இருதுளிகள் போதும். இப்போது, உங்களைக் கேட்கிறேன்? இவ்வெள்ளம் கங்கைப் பெருக்கா? காவிரி வெள்ளமா? பூவிரி பொருநையின் புதுப் புனல் நீரா? நீங்களே சொல்லுங்கள்! |