கொடுமையை வெறுக்கவும் கொலைவழி மறுக்கவும் கோபக் குரோதங்களின் கூட்டுறவு அறுக்கவும் கடுமொழி விலக்கவும் கபடத்தைத் தொலைக்கவும் காந்தியின் நினைவன்றி மாந்தரின் இலக்கெது? (காந்தி)3 குறிப்புரை:-கடுமொழி - வன்மொழி, திண்மொழி; குரோதம் - உட்பகை. 92. கருணை வளர்க்க வேண்டும் பல்லவி காந்தி உகுத்த ரத்தம் மாந்தர் அகத்திருந்து கருணை வளர்க்க வேண்டும். அநுபல்லவி ஆழ்ந்து குமுறுகின்ற போர்வெறிச் சூதுகளைத் தூரத் தொலைத்து மக்கள் ஈரம் இறக்கம் பெற (காந்தி) சரணங்கள் மோகம் வெறித்தயுத்த மேகப்படலம் நம்மை மூடிக் கழுத்தறுக்கத் தேடித் திரிகின்றதன் வேகம் குறைக்கவென்றே தேகம் விடுத்த ஐயன் வீரரும் தீரர்களும் விழுந்து வணங்கும் துய்யன். (காந்தி)1 விஞ்ஞானத் திமிர்உந்த வெற்றிக்கு வெறிவந்து விண்பட்ட கொலைசெய்யும் நாண்கெட்ட மனிதர்க்கே அஞ்ஞானம் விட்டொழித்த மெய்ஞ்ஞானம் காட்டஎன்றே அல்லும் பகலும் எண்ணிச் சொல்லும் செயலும் தந்த (காந்தி)2 இதந்தரும் என்றுநம்பிச் சுதந்தரம் நொந்து பெற்றும் இம்சைமிகுந்து மக்கள் துவசம் புரிதல்கண்டு மதந்தரும் வெறிகளை நிதந்தரப் பார்ப்பதிலும் மாறுதல் நல்லதென்றே ஆறுதல் சொல்லிமாண்ட (காந்தி)3 |